வன்றொண்டர் பின்னுங் கூற, மற்றவர் தம்மைக் காட்டத் துன்றிய குருதி சோரத் தொடர்குடர் சொரிந்துள் ளாவி பொன்றியே கிடந்தார் தம்மைக் கண்டபின் "புகுந்த வாறு நன்"றென மொழிந்து "நானு நண்ணுவே னிவர்முன்" பென்பார், | 403 | (இ-ள்) வன்றொண்டர்...காட்ட - வன்றொண்டர் அது கேட்ட பின்னரும் இவ்வாறு சொல்ல மற்று அவர்கள் (அழைத்துச் சென்று) அவரை (கலிக்காமனாரை)க் காட்ட; துன்றிய....கண்டபின் - நிரம்பிய இரத்தம் வெளிவந்து தொடர்ச்சியாகிய குடர் வெளிப் போந்து உயிர் நீங்கியே கிடந்த அவரைக் கண்டவுடனே; புகுந்த....மொழிந்து - நிகழ்ந்தவாறு நன்று! என்று கூறி; நானும்....என்பார் - நானும் இவர்முன் இவ்வாறே சார்வேன் என்பாராகி, (வி-ரை) பின்னும் - "தீதணைவில்லை உள்ளே பள்ளி கொள்கின்றார்" என்று கூறக் கேட்டபின்னரும்; உள்ளே பள்ளி கொள்கின்றாராதலின் சென்று காணக்கூடாத நேரம் என்பது கேட்ட பின்னும் என உம்மை சிறப்பும்மை; "இடைதெரிந்தருள வேண்டும் - துயில்கொளு மிறைவன்" (475) என்புழி வெளிப்படும் உட்குறிப்புப் போலக் கொள்க. பின்னும் கூற - முன் பாட்டிற்கூறிய அதுவேயுமன்றி அக்கருத்தினையே வற்புறுத்தி மேலும் கூற என்றுரைப்பாரும் உண்டு; இப்பொருளில் உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை. காட்ட - உள் அழைத்துக் கொண்டு சென்று காட்ட; மற்றவர் - மனைத்தொழில் மாக்கள் கூறியவாறுமன்றித், தாம் எதிர்பார்த்தவாறு சூலையுடனுமன்றிக் கிடந்தார் என்பது மற்று என்பதன் குறிப்பு. துன்றிய குருதி சோர - துன்றுதல் - மிகுதல்; சோர - சோர்ந்து என்ற வினையெச்சத்திரிபு. தொடர் குடர் - குடர் என்னும் வயிறுள்பட்ட அன்னக் குழாய் நீண்ட சுருண்டுள்ள தொன்றாதலின் தொடர் என்றார். சொரிதல் - வாள் செறுதலாலாகிய தொளையின் வழியே ஊறுண்டு வெளியில் நீண்டு தொங்கிக் கிடத்தல், தொடர்குடர் - வினைத்தொகை. உள் ஆவிபொன்றியே - உன் ஆவி இவற்றினுள் பொருந்திய உயிர்; ஆவி பொன்றுதல் - உயிர் நீங்குதல். கிடந்தார் - சோர - சோர்ந்ததனாலும், சொரிந்து - சொரிந்ததனாலும் ஆவி பொன்றினார் எனக் காரணக் குறிப்புப்படக் கூறியதுமாம்; மிக்க குறுதி வெளிப்படின் உயிர்போம் என்பதும், குருதி நீரே உயிர் தாங்கும் சத்துடையது என்பதும் இந்நாள் ஆங்கில மருத்துவ நூலாராய்ச்சியிற் கண்ட உண்மைகள். குருதி போனதால் மரணம் (Death due to loss of blood) என்றும், குருதிப்புனலுள் சிகப்பும் வெண்மையுமாகிய இருவகைப் புழுப்போன்ற தாதுக்களே உயிர் தாங்க உதவுவன (red and white corpusles) என்றும் கூறுவர் நவீனர்; இதுபற்றி"....மெள்ள நின்றூரும் புழுவி னொழுங்கோ!.....இன்ன தியானென் றறியே னென்னை, யெங்குந்தேடினன் யாதினுங் காணேன்"(திருவிடை-மும்-கோ.13) என்பது பட்டினத்து அடிகள் திருவாக்கும் காண்க. தொடர் குடர் - மேலே, வாயினை ஒரு கோடியாகவும், கீழே அபானத்துளையை மற்றொரு கோடியாகவும் கொண்டு நீண்டதோர் குழாயாக, இடையில் வயிறும் அதைச் சார்ந்த குடலின் சிறுகுழாய்ப் பகுதியும் பெருங்குழாய்ப் பகுதியுமாக (Small & Iarge Intestines) தொடர்ந்த நிலைபட உள்ளது உணவுச் சீரணக் கருவி என்பதும் நவீனரும் கண்டவுண்மை; தொடர் - என்ற கருத்துக் காண்க. குடர் - குடல் எனவும் வழங்கும். சொரிதல் - ஊறுண்டு வயிற்றிற் குற்றுப்பட்ட துளை வழியாக வெளியில் வந்து வழிந்தது போலத் தொங்குதல். கண்டபின் - கண்டவுடனே. புகுந்தவாறு நன்று - புகுந்தவாறு - நிகழ்ந்தபடி; நன்று எதிர்மறைக் குறிப்புப் பட நின்ற துன்பமொழி. புகுந்த - தீங்கு வந்து அடைந்த; நான் வந்த என்றலுமாம். நானும் இவர் முன் நண்ணுவேன் - இவர் சென்றது போல நானும் உயிர் துறந்து செல்வேன்; நண்ணுதல் - உடல் விட்டபின் சாருமிடத்திற்கு என்பது குறிப்பெச்சம். உம்மை இவருடன் இவர்போலவே என்று உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை; முன் - முன்பு. இடம் குறித்தது. முன் - இவர் செல்லுமுன்; முன்பாக என்றலுமாம். என்பார் - முற்றெச்சம். என்பாராகி - மனத்தராகிப் பற்ற என வரும்பாட்டுடன் கூட்டுக. இவர் - முன்பு கிடந்த கலிக்காமனாரைச் சுட்டிய அணிமைச் சுட்டு, |
|
|