பாடல் எண் :3567

கங்கைநீ டுறையாடிக் கருத்துறைநீள் கடலேற்றும்
அங்கணர்தா மகிழ்ந்தருளு மவிமுத்தம் பணிந்தேத்தி
மங்குல்வளர் வரைவிந்த மன்னுபருப் பதமிறைஞ்சித்
திங்களணி சடையர்திருக் காளத்தி மலைசேர்ந்தார்.
4

(இ-ள்) கங்கை நீள் துறை ஆடி - கங்கை யாற்றினது நீண்ட துறையிலே நீராடி; கருத்துறை....ஏத்தி - பிறவித் துறையினையுடைய நீண்ட கடலினின்றும் கரையேற்றும் இறைவர் மகிழ்ந்து எழுந்தருளியிருக்கும் அவிமுத்தத்தினை (வாரணாசி - காசி) யினைப் பணிந்து துதித்து; மங்குல்வளர்....இறைஞ்சி - மேகங்கள்தங்குதற்கிடமாகிய விந்த மலையினையும் நிலைபெற்ற சீபர்ப்பத மலையினையும் வணங்கி; திங்களணி....சேர்ந்தார் - பிறையினைச் சூடிய சடையினையுடைய இறைவரது திருக்காளத்தி மலையினைச் சேர்ந்தனர்.
(வி-ரை) கங்கை நீள் துறை - "அகன் றுறை நீர் அருங்கரை" (3566) என முன்கூறியதை அனுவதித்தார்; நீள் - பெருமையினால் மிகும் என்று கொண்டு விசுவநாதர் சந்நிதிக்கெதிரில் உள்ள மணிகர்ணிகைத் துறையினைக் குறிப்பால் உணர்த்தியதாகக் கொள்வதுமாம்.
கரு துறை நீள் கடல் ஏற்றும் - கரு துறை - பிறவியாகிய இறங்குமிடம்; கரு - பிறவி; ஏறுதற் கருமை நோக்கி நீள் கடல் என்றார்; ஏற்றுதல் - கரை ஏற்றுதல். "நீள்சென் மக்கட லிடையிற்புக் கலையார்" (திருநா - ஏகாதசமாலை-4); "காசியினிறக்கமுத்தி" என்னும் பொருட்குறிப்பு.
அவிமுத்தம் - காசி; முத்தம் - நீங்குதல்; வி - சிறப்புக்குறிக்கும் முன் ஒட்டுமொழி; நாயகன் - விநாயகன்; நாசம் - விநாசம்; என்புழிப்போல; விமுத்தம் - விசேடமான நீங்குதல்; அகரம் எதிர்மறை விகுதி. பிறவிப் பெருங்கடலுள் புகும் நீங்குதலை இல்லாமை செய்வது என்ற குறிப்பும் காண்க.
அவிமுத்தம்-நீங்கவேண்டிய காலத்தும் நீங்காமை; தவஞ்செய்த பிரம தேவர்பால் காசியின் அரசுரிமை பெற்ற தீவோதானன் என்னும் அரசன்,அப்பகுதியில் தேவர்கள் வசிக்கலாகாதென்று வரம் பெற்று ஆண்டுகொண்டிருக்க,அவ்வரம் பொய்க்காதபடி சிவபெருமான் அங்கு அவ்வுருவமாக வீற்றிருந்தருளினார் என்றும்,அதனால் அவிமுத்தம் எனப்பெயர் பெற்றதென்றும்,தலமான்மியம் கூறும்.
விந்த வரை - என்க. மங்குதல் வளர் - மேகமண்டலம்வரை நீண்ட உயர்ச்சி குறித்தது; விந்தமும் பருப்பதமும் என எண்ணும்மை விரிக்க; மன்னுதல் - சிவபெருமான் என்றும் நந்தியாகிய அம்மலையின்மீது நிலையாக வீற்றிருத்தல்; பருப்பதம் - சீசைலம், சீபர்ப்பதம் என்ப. தலவிசேடம் பதிகத்தின் கீழ்க்காண்க.
திங்களணி சடையர் -"திங்கள்சேர் சடையார்" (753); அணி - கண்ணியாகச் சூடிய.
சடைமுடியார் காளத்தி - என்பதும் பாடம்.