அந்தணர்தஞ் சாத்தனூ ராமேய்ப்பார் குடித்தோன்றி முந்தைமுறை நிரைமேய்ப்பான் மூலனெனும் பெயருடையான் வந்து தனி மேய்க்கின்றான் வினைமாள வாழ்நாளை வெந்தொழில்வல் விடமுண்ண வீடிநிலத் திடைவீழ்ந் தான். | 11 | (இ-ள்) அந்தணர்தம்....பெயருடையான் - அந்தணர் வாழ்கின்ற சாத்தனூரில் பசுக்களை மேய்க்கின்றவர்களாகிய இடையர்கள் குடியிலே பிறந்து தனது முன்னோர்களது மரபின் தொழில்முறையிலே பசுக்களை மேய்த்து வருவானாகிய மூலன் என்ற பெயருடையவன்; வந்துதனி மேய்க்கின்றான்....வீழ்ந்தான் - (ஊரினின்றும் நதிக்கரைப் புறவில் மேய்ச்சலிடை) தனி வந்து பசு மேய்க்கின்றானாக, அப்போது போகத்தின் எல்லை வினை ஒழிந்ததாதலின் அவனுடைய ஆயுளைக் கொடிய தொழிலுடைய பாம்பின் விடம் உண்டு ஒழித்துவிடவே உயிர்துறந்து நிலத்தில் வீழ்ந்தான். (வி-ரை) அந்தணர்தம்....சாத்தனூர் - இப்பதி திருவாவடுதுறையினை ஒட்டியதாக அதன் தென்புறம் உள்ளது என்றும், திருஆவடுதுறையினை ஒட்டி ஒன்றாகச் சாந்தையூர் அணி ஆவடுதுறை என்று சேர்த்து வழங்குவதென்றும், சிறந்த அந்தணர்கள் நிறைந்தவூர் என்றும், அவ்வந்தணர்கள் திருவாவடுதுறையில் இறைவர்க்குப் பணி செய்பவர் என்றும் சேந்தனார் திருவிசைப்பா (திருவாவடுதுறை) வினால் அறியலாம். "பொய்யாத வேதியர் சாந்தைமெய்ப் புகழாளர் ஆயிரம் பூசுரர் மெய்யே திருப்பணி செய்சீர்" (1); "சோதிமதி லணிசாந்தை மெய்ச்சுருதி விதிவழியோர் தொழும், ஆதியமரர் புராணன்" (2); "ஒழிவொன்றிலாப் பொன்னித் தீர்த்தமும் முனிகோடி கோடியா மூர்த்தியும், அழிவொன்றிலாச்செல்வச் சாந்தையூரணியா வடுதுறை யாடினாள்" (8) (திருவிசைப்பா) என்பன காண்க. சாத்தனூர் என்பது சாந்தை என மருவி வழங்குவது. ஆ மேய்ப்பார் குடி - இடையர் மரபு; கோபாலர் என்ப. முந்தை முறை - வழிவழி தனது முன்னோர்கள் செய்துவந்த பழைய முறைமையின்படி, மூலன் எனும் பெயருடையோன் - மூலன் - என்பது அவனுடைய பெயர்; இப்பெயர் அவனுடைய உடலைப்பற்றி நின்று பின்னர் அவ்வுடலிற் புகுந்து எழுந்தயோகியாருக்கும் தருமூலர் என வழங்கலாயிற்று; "திருமூலரா யெழலும்" (3577). தனிவந்து மேய்க்கின்றான் - நதிக்கரைப் புறவில் தனிவந்து என்க. மேய்க்கின்றானுடைய என்று ஆறனுருபு விரிக்க; தனி - துணையாகிய சிறுவர் ஒருவருமின்றி. "அங்கவளு மக்களுட னருஞ்சுற்ற மில்லாதாள்" (3581) என்று பின்னர் அவன் மனைவியைப்பற்றிந் கூறுதல் காண்க. வினை மாள - உடல் வாழ்க்கை நிலைபெறும் எல்லையாக உள்ளது வினைப் போக மாதலின் அது கழிய என்க. "வினைப்போக மேயொரு தேகங்கண் டாய்; வினை தானொழிந்தாற், றினைப்போ தளவு நில்லாது" (பட்டினத்து அடிகள்) மாள - ஒழிய; எல்லை கழிய. வாழ்நாளை - ஆயுட்காலத்தை; வாழ்நாளை விடமுண்ண - உண்ணுதல் - இங்கு விழுங்கித் தீர்த்தல் என்ற பொருளில் வந்தது. விடம் - உண்ண - உண்ண - உண்டமையால் என்று காரணப்பொருளில் வந்தது. தன் மனையினின்றும் அன்று பகலே பசுக்களைக் கொணர்ந்து மேய்க்கின்ற அவன் சடுதியில் இறந்துபடுதற்கு வெளிப்படையான காரணம் விடந்தீண்டுதல் எனப் பட்டது; முன் பதிப்புக்களில் எல்லாம் கூற்றுண்ண என்றே பாடங் கொள்ளப்பட்டுள்ளது; விடமுண்ண என்ற இப்பாடம் இங்குப் பரிசோதித்த பழம்பிரதியொன்றிற் கண்டது; சடுதியில் இறந்துபடவந்த காரணம் கூறுதலால் இந்தப் பாடம் மேற்கொள்ளப்பட்டது; சடுதியில் சாவு வரக்கூடிய இந்நாளிற் காணும் நெஞ்சடைப்பு முதலிய நோய்கள் முன்னாளில் தொழிலாளிகளிடையே பயின்று காணப்படாமையும் அறியப்படும்; விடமுண்ண என்றது ஊழ்வந் துறத்தற்குற்ற புறத்தோற்றமாகிய காரணத்தையும், வினைமாள என்றது அதனை விளைக்கும் உட்காரணத்தையும் குறித்தன; "தனிப்பெருந் தருமந் தானோர் தயாவின்றித் தானை மன்னன், பனிப்பில்சிந்தையினி னுண்மைப் பான்மைசோ தித்தா லென்ன" (107); "வேந்தன்வழித்திரு மைந்த னாவி கொளவரு மறலி யூர்திக் கழுத்தணி மணியி னார்ப்போ வென்ன" (113) என்றும், "அன்ப ரின்புறு மார்வத்தி னளித்தபாங் கல்லாற்....புகலி காவலர்க்கிது புணரா, தென்ப துட்கொண்ட பான்மையோ ரெயிற்றிளம் பணியாய், முன் பணைந்தது போலவோர் முள்ளெயிற் றரவம்" (2954) என்றும் வரும் கருத்துக்கள் காண்க. வீடி - மூர்ச்சை முதலியனவன்றி உயிர்போய் இறந்து என்பது குறிப்பு. |
|
|