மற்றவன்றன் னுடம்பினையக் கோக்குலங்கள் வந்தணைந்து சுற்றிமிகக் கதறுவன சுழல்வனமோப் பனவாக, நற்றவயோ கியர்காணா, நம்பரரு ளாலே"யா வுற்றதுய ரிவைநீங்க வொழிப்ப"னென வுணர்கின்றார்; | 12 | (இ-ள்) மற்றவன்தன்....மோப்பனவாக - மற்ற அவ்விடையனது உடம்பை அந்தப் பசுக்கள் வந்து அணுகிச் சுற்றி வருதலும், கதறுதலும், சுழலுதலும், மோத்தலும் ஆக நிகழ்ந்து வருந்த; நற்றவ யோகியர் காணா - நல்ல தவமுடைய இந்த யோகியார் அதனைக் கண்டு; நம்பர் அருளாலே - இறைவரதுதிருவருளினாலே, ஆ....உணர்கின்றார் - இந்தப் பசுக்கள் பொருந்திய துன்பங்களாகிய இவற்றை நீங்கும்படி ஒழிப்பேன்" என்று தமது உணர்வினிற் கொள்கின்றாராய்; (வி-ரை) மற்றவன்றன்....மோப்பனவாக - இவை பசுக்கள் தம்மை மேய்ப்போனிடம் கொண்ட அன்பின் பெருக்கினைக் குறிப்பன; வஞ்சனையற்ற தூய அன்பிற்கும், மனங்கரைந்துருகும் நிலைக்கும் எடுத்துக்காட்டாகப் பசுக்களையே ஆன்றோர் கொண்டனர். "கற்றாவின் மனம்போல" என்பது முதலியவை காண்க, ஈண்டு இடையன் மிக்க அன்போடு பசுக்களைப் பேணிவந்தான் என்பது அவற்றின் இச் செயலாலே கருதப்படும்; "பசுக்களை மேய்க்கும் ஆயன் கோல் போடிற், பசுக்க டலைவனைப் பற்றி விடாவே" என்று திருமூலர் மற்றுமோர் கருத்துப்பற்றிக் கூறுதல் காண்க; "பேணவரும்" (3573) என முன் கூறியது காண்க. பசுக்கள் தம்மை அன்போடு பேணிய சண்டீசநாயனார்பால் வைத்த அன்பின் பெருக்கினையும், அதனால் நிகழ்ந்த செயல்களையும் பற்றி அவர் புராணத்துட் காண்க. (1235). சுற்றி....மோப்பன - இவை துயரக் குறிகளான மெய்ப்பாடுகளும் செயல்களுமாம். மோப்பனவாக....காணா - மோப்பனவுமா யிருக்கும் அந்நிலையினைக் கண்டு; காணா - கண்டு. நம்பர் அருளாலே - உணர்கின்றார் - ஆக்களின் துயர் நீங்க ஒழிப்பேன் என்ற கருத்து மனத்துள் வந்து எழ அதுபற்றி உணர்வு மேற்கொண்டமை நம்பர் அருளாளே வந்தது என்பதாம். என்னை? கயிலையினின்றும், குறுமுனிபாற் பொதிகைக்குச் செல்ல வழிக்கொண்டு செல்லும் யோகியர்க்கு, வழியில் உலகினரிடைக் காணும் இன்ப துன்பங்களில் மனம் செலுத்திக்கொண்டு தாமும் அவற்றுட்பட்டு உழலுதல் தகுதியன்று; உலகத்தில் உயிர்களது கன்ம பேதங்களுக்கு ஏற்ப இன்ப துன்பங்களை இறைவர் ஊட்டுவிக்கின்றார்; அவற்றை நாம் தவிர்ப்பேம் என முயலுதல் பெரியோர் செயலன்று; "செத்தாரை யெல்லாம் பிழைக்க வைப்பேன்; நோயாளிகளை எல்லாம் நோய் தீர்ப்பேன்" என்றெழுதல் அறியார் செயலேயாம். ஆனால் எந்தமது பேரருட் பரமாசாரியர்கள் இவ்வாறு செய்த சில அற்புதங்கள் பற்றி முன்னர் அங்கங்கும் விளக்கப்பட்டன; கடைப்பிடிக்க. ஆளுடைய பிள்ளையார் எலும்பு பெண்ணாக்கியதும், முயலகனோய் தீர்த்ததும், அரசுகள் அப்பூதியார் மகனரவுவிடந் தீர்த்ததும், நம்பிகள் கூனும் குருடும் தீர்த்து ஏவல்கொண்டதும், முதலை வாய்ப்பிள்ளை அழைப்பிப்பதும் முதலியவற்றின் உட்கிடை வேறு; அவை இறைவர் செயல்கள்; "நானழிய வல்லதனால்....தான்செய்யும் தன்மைகளை, ஆக்கியிடு மன்பர்க் கரன்" என்பது ஞானநூல்; இறை செயல்களேயாகிய அவற்றின் காரணங்கள் எம்போல்வர ராராயத்தக்கனவல்ல என்பது திருப்பாசுரப் பிரமாணத்தாற்போதரும், ஈண்டு யோகியர்போந்த செயலும் கருத்தும் வேறாகியும், இவ்வாறு தாம் கருதாததோ ருணர்வினை மனங்கொளச் செய்தது திருவருள் என்றபடி; திருவருட் குறிப்பு உலகில் பசுக்களாகிய உயிர்கள் பிறவிவிடந்தீர்ந் துய்யும்வழி காட்டுதலாம் என்பது "ஊனுடம்பிற் பிறவிவிடந் தீர்ந்துலகத் தோருய்ய" (3589) எனப் பின்னர்க் காட்டுதலாலுணர்க. ஈண்டு யோகியர் பசுக்களின்மேல் வைத்துத் துயர்நீங்க ஒழிப்பேன் என்றெழுந்த கருத்து, அப்பசுக்களை முன்னிலையாகக் கொண்டு உலகுயிர்களாகிய, பசுக்கள் என்று ஞானநூல்கள் பேசும், உயிர்களைத் துன்பநீங்கி இன்பமடையச் செய்வதற்கு யோகியர்மூலம் இறைவர் கொண்ட திருவருட்கிடையாகிய திருவுள்ளமேயாம் என்பார் நம்பருளாலே - உணர்கின்றார் என்றார்; இங்குப் பசுக்கள் தம்மைப்பேணும் தலைவனை யிழந்து துயருற்று அவனைப் பெற வேண்டி நின்ற நிலைபோல, இவ்வுலகில் பக்குவமுடைய உயிர்கள் "கதிப்பாற் செல்ல ஏது நெறி" என்றும், "தலைவனை நனிகாணேன்" என்றும் அவனைப் பெற்று அடையும் வழிதேடித் துன்பமுறும் உயிர்களுக்கு ஞானோபதேசம் செய்யும் திருமந்திரம் யோகியர் மூலம் பெறவைத்தல் இறைவரது திருவுள்ளக் கருத்தாதல் காண்க (3586). நம்பரருளாலே - ஒழிப்பன் - என்று கூட்டியுரைப்பது மொன்று. உணர்கின்றார் - என்று - பாய்த்தினார் என மேல்வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க. நற்றவம் - வரைவின்றி எல்லாவுயிர்களின் மாட்டும் செல்லும் பேரருளுடைமை குறிக்க நற்றவமென்றார். மொய்ப்பன - அது நீங்கி - என்பனவும் பாடங்கள். |
|
|