பாடல் எண் :3579

வெய்யசுடர்க் கதிரவனு மேம்பாலை மலையணையச்
சைவநெறி மெய்யுணர்ந்தோ ரானினங்கள் தாமேமுன்
பையநடப் பனகன்றை நினைந்துபடர் வனவாகி
வையநிகழ் சாத்தனூர் வந்தெய்தப் பின்போனார்.
16

(இ-ள்) வெய்ய......அணைய - வெப்பமிக்க சுடர்களையுடைய சூரியனும் மேற்கு மலையினைச் சேர; ஆனினங்கள் .....வந்தெய்த - பசுக் கூட்டங்கள் ஒருவரும் செலுத்தாது தாமாகவே முன்னால் மெல்ல நடப்பனவும் தமது கன்றுகளை நினைந்து செல்வனவுமாகி உலகில் புகழ்பெற்ற விளங்கும் சாத்தனூரில் வந்து சேர; சைவநெறி மெய் உணர்ந்தோர் - சைவ நெறியிலே உண்மை உணர்ந்த யோகியாராகிய திருமூலர்; பின்போனார் - அப்பசுக்கள்சென்ற வழியிலே அவற்றின் பின் போயினர்.
(வி-ரை) வெய்ய சுடர்க் கதிரவன் - சூரியன். வெயில் வெப்பமாதலின் பசுக்களைப் "புறவினிழலில் இனிதாகப் புறங்காத்தார்" என்று முன் கூறியது காண்க.
மேல்பாலை மலையணைய - மாலைப் பொழுது ஆகும் நேரம் வர; மேம்பாலை மலை - மேற்கு மலைகள்.
சைவ நெறி மெய் உணர்ந்தோர் - சிவாகம உண்மைகளை நந்தி திருவருள் உபதேசத்தால் அறிந்து சிவயோகம் தமது உணர்ச்சியிற் கைவந்தவர்; சைவ நெறி மெய் - வேத சிவாகம முடிபுகளாகிய உண்மைகள்; உணர்ந்தோர் - சுய அனுபூதிகத்தில் உள்ளுறப் பெறும் நிலை வந்தவர். உணர்ந்தோர் - பின் போனார் என்று கூட்டுக.
தாமே......ஆகி - வந்தெய்த - பசுக்கள் மேய்விடத்தினின்றும் மாலைப்போதில் தத்தம் மனைகளுக்குத் திரும்பும்போது வேறு ஒருவர் செலுத்தாமல் தாமே இடமறிந்து செல்லுமியல்பு குறிக்கத் தாமே என்றார்.
பைய நடப்பன - வயிறு நிறைய மேய்ந்திருத்தலானும் மற்றும் தம் இயல்பானும் பசுக்கள் பைய நடப்பது அவற்றின் இயற்கை.
கன்றை நினைந்து படர்வன - அவற்றின் நினைப்பு அவை கன்றுகளை நினைந்து அம்மா என அழைத்து நடத்தலால் காணப்படும்; சில பசுக்கள் வாளா பைய நடப்பன; மற்றும் சில கன்றை நினைந்து அழைத்துப் படர்வன; இஃதவற்றின் வாழ்க்கை யியல்பு.
ஆக - வந்து - எய்த என்று கூட்டுக; எய்த ஊரெல்லை எய்தும் வரை என்க.
வையநிகழ் சாத்தனூர் - உலகிற் புகழ் மிக விளங்கும் ஊர் . நிகழ் -எக்காலத்தும் நிகழ்வதாகலின் முக்காலத்துக்கும் பொருந்தும் என்று வினைத்தொகையாற் கூறினார். நிகழ்தல் - என்றும் புகழ் விளங்க இருத்தல்; புகழாவது அந்தணர் சிறப்பும் இச்சரித நிகழ்ந்த சிறப்புமாம்.
சாத்தனூர் - பின் போனார் - பசுக்கள் அந்த ஊரினைச் சார்ந்தவை என்றும், அது சாத்தனூரென்றும் யோகியார் அறியார்; ஆனால் பசுக்களைப் பின்பற்றிச் சென்றால் அவை தாமே தமதியற்கை யறிவு கொண்டு ஊருக்குக்கொண்டு செலுத்தி விடுமென்னு மியல்புணர்ந்தா ராதலின் பின்போனார்; ‘சோவுடனே கூடிவரும் குருட்டாவு மூர்புகுதும்’ (உமாபதி சிவம்); யோகியார் அவ்வூரறியாராய் அப்போதுதான் வந்தெய்துகின்றாராதலின் அவ்வூர் என்று முன்னறி சுட்டாற் கூறாதுசாத்தனூர் என்று பெயர் கூறிச் சொல்லியதுமன்றி வைநிகழ் - என அதன் சிறப்பும் கூறினார் . இது தெய்வக் கவிநயம்.