போனவர்தாம் பசுக்களெலா மனைதோறும் புகநின்றார்; மானமுடை மனையாளும் "வைகியபின் றாழ்த்தா"ரென் றானபயத் துடன்சென்றே யவர்நின்ற வழிகண்டாள் "ஈனமிவர்க் கடுத்த" தென மெய்தீண்ட வதற்கிசையார், | 17 | (இ-ள்) போனவர்தாம்....நின்றார் - முன்கூறியவாறு பசுக்களின் பின் போன திருமூலர் பசுக்கள் எல்லாம் அவ்வவற்றின் மனைகள்தோறும் புக அவ்வெல்லை யளவில் நின்றனர்; மானமுடை.....கண்டாள் - பெருமையுடைய அவ்விடையனது மனைவியும் "தன் நாயகர் போது வைகிய பின்னும் வரத் தாழ்த்தனர்" என்று நினைத்த அச்சத்துடன் சென்றே அவர் நின்று கொண்டிருந்த வகையினைக் கண்டாள்; ஈனம்....இசையார் - இவருக்கு ஏதோ தீங்கு நேர்ந்துள்ளது என்று கருதி அவரை மெய்தீண்ட அவர் அதற்கு இசையாராகி; (வி-ரை) பசுக்களெல்லாம் மனைதோறும் புக நின்றார் - ஊர் எல்லை வரையும் பசுக்கள் ஒருங்குசேர வந்தன; அதன்பின் அவை தந்தம் மனைகள் தோறும் புக அங்கங்கும் பிரிந்து செல்ல வேண்டியவையாதலின் அதுவரை பின் பற்றி வந்த திருமூலர் மேலும் செல்ல இயலாமையால் அவ்விடத்து நின்று கொண்டு அவை மனைதோறும் புகுவதனைப் பார்த்து இருந்தார் என்பார் புகநின்றார் என்றார்; முன்னர்ப் பின் போனார் என்றமை காண்க. நின்ற இடம் ஊருக்குள்ளே புகும் வழியில் பொது இடம் என்பதாம். மானமுடை - மானம் - பெருமை; ஈண்டுக் கற்பு முதலிய பெண்மை நலம் குறித்தது. வைகியபின் தாழ்த்தார் - வைகுதல் -நாள் எல்லை கழிதல் என்ற பொருளில் வந்தது; வைகியபின் - நாள் எல்லை அற்றபின்; நாட்போது கழிந்த பின்னும்; சிறப்பும்மை தொக்கது; தாழ்த்தார் - தனது நாயகன் மனைக்குத் திரும்பிவருதலைத் தாழ்த்தனர்; "போதும் வைகிற்று" (451) என்றதும், "வைகுறு" என்றதற்கு எமது மாதவச் சிவஞான முனிவர் சூத்திரவிருத்தியுள் உரைத்தனவும் காண்க. ஆனபயம் - உளதாகிய அச்சம்; நாயகனுக்கு என்ன தீங்கு நேர்ந்ததோ என்று எண்ணியதாலாகிய அச்சம். "ஆனபயம் ஐந்தும் தீர்த்து" (121) அவர் நின்ற வழி - அவர் - உடம்பினைக் கண்ட அளவால், தனது கணவர் என்று மனைவி எண்ணிய அவர் என்றும், உடம்பிற்குள் புகுந்து நின்ற அவர் (திருமூலர்) என்றும் உரைக்க நின்றது; நின்ற வழி - வழி - தன்மை என்ற பொருளில் வந்தது; இரண்டனுருபு தொக்கது. வழி - இடம் என்றலுமாம். ஈனம் - எதுவோ ஓர் தீங்கு; புத்தி மாறக்கூடிய தொருநிலை; நோய்; என - என்று கொண்டு. மெய் தீண்ட - பற்றி மனைக்குக் கொண்டு செல்ல முயல. இசையார் -இசையாராகி; மறுத்துப் - புகுந்தார் என்று வரும் பாட்டினுடன் முடிக்க. |
|
|