சுற்றியவக் குலத்துள்ளார் தொடர்ந்தார்க்குத் தொடர்வின்மை முற்றவே மொழிந்தருள வவர்மீண்டு போனதற்பின் பெற்றமீ துயர்த்தவர்தாள் சிந்தித்துப் பெருகார்வச் செற்றமுதல் கடிந்தவர்தா மாவடுதண் டுறைசேர்ந்தார். | 24 | (இ-ள்) சுற்றிய.....மொழிந்தருள - சூழ்ந்துள்ளாராய்த் தொடர்ந்த அந்த இடையர் குலத்தவர்களுக்கு (அப்பதியினின்று ஆ மேய்விடம்வரை தம்மையே தொடர்ந்து வந்தார்களாகிய அவர்களறியும்படி) அவர்களுக்கும் தமக்கும் எவ்விதத் தொடர்வும் இல்லை என்ற உண்மையினை முழுதும் அறிவுறுத்தி உரைத்தருளினாராக; அவர் மீண்டுபோனதற்பின் - அவர்களும் மீண்டு சென்றபின்னே; பெற்றம்....சிந்தித்து - இடபக்கொடியினை உயர்த்தி ஏந்திய இறைவரது திருவடிகளைச் சிந்தனை செய்து; பெருகு.....கடிந்தவர்தாம் - மேன்மேற் பெருகுமியல் புடைய ஆர்வம் கோபம் முதலியவற்றை வேரற அகழ்ந்து போக்கிய அத்திருமூலர்; ஆவடு தண்டுறை சேர்ந்தார் - அங்குநின்றும் திருவாவடு தண்டுறையினைச் சேர்ந்தனர். (வி-ரை) சுற்றிய அக்குலத்துள்ளார் தொடர்ந்தார்க்கு- இவர்கள் - இறந்த - மூலன்என்னும் இடைமகனைச் சுற்றியவர்களாய் அக்குலத்துள்ள சுற்றத்தார்கள். இன்பிலும் துன்பிலும் சுற்றிச் சூழ்தலாற் சுற்றம் எனப்படுவர். முன்னர் அவன் மனைவியை அருஞ்சுற்ற மில்லாதாள் - (3581) எனப்பட்டதே? எனின் அங்குக் குறித்தது நெருங்கிய சுற்றமென்பதனை அருஞ் சுற்ற மென்றதனாற் காண்க. இங்குக் குறித்தவர்கள் தூரமாகிய சுற்றத்தார் என்னவும்படாது, சுற்றி அக்குலத்துள்ளார்; குலத்தால் ஒற்றுமை யுடையாராய் ஒருவாற்றாற். பதியவரும் ஏனையோரும் பதியின் எல்லையிற் பொதுமடத்தினின்றே நீங்கவும், குல அபிமானத்தால் இவர்கள் பின்னும் விடாது பசுக்கள் மேய்விடம்வரைத் தொடர்ந்தனர். "இல்லும் பொருளு மிருந்த மனையளவே....நல்ல, கிளைகுளத்து நீரளவே" (11ம் திருமுறை - ஷேத். வெ. 14) என்ற கருத்தும் ஈண்டு வைத்துக் காணத்தக்கது. உள்ளார் - குறிப்பு வினைமுற்றெச்சம்; தொடர்ந்தார் - வினையாலணையும் பெயர். தொடர்வின்மை முற்றவே மொழிந்தருள - உடல் இடையனுடையதேயாயினும் அவர்களுடன் தமக்கு யாதொரு தொடர்புமில்லாத தன்மையின் வரலாற்றை அவர்கள் அறியும்படி திருமூலர் சொல்லியருளக் கேட்டு; முற்றவே - நிகழ்ச்சியானும் உண்மைத் தத்துவ நிலையானும், உயிர்தான் எண்ண வருவதென்றும் உடல் சடமாதலின் ஈண்டு எண்ண வாராதென்றும், பிற காரணங்களையும் காட்டி நீதிபுகட்ட. தொடர்வு - சம்பந்தம். பெற்றம்.....சிந்தித்து - இனித், தாம் கருதியதும் வந்ததுமாகியவற்றைவிட்டு வேறு அருள் காட்டிய நிலையிற் புகுகின்றாராதலின் அவ்வருளைச் சிந்தித்தார் என்க. பெருகு ஆர்வச் செற்ற முதல் கடிந்தவர் - திருமூலர்; ஆர்வம், செற்றம், குரோதம் முதலியவை விலக்கற்பாலனவாகிய தீக்குணங்கள். முதல் - வேர் - வேரறக் கடிந்தவர்; கடிதல் - வெறுத்து நீக்குதல்; "களவுபொய் காமங் கோப முதலிய குற்றங் காய்ந்தார்" (1784). பெருகு - பிறவி பெருகுதற்குக் காரணமாகிய என்றலுமாம்; ஆர்வம் - பெருவிருப்பம். ஆ அடு தண்டுறை சேர்ந்தார் - துறை என்றதற்கேற்பத் தண் என்றார். ஆ - (பசுத்துவம்); வினை அடுமவதாயினும் வெப்பமின்றித் தண்ணியதுறை என்றதும் குறிப்பு. "தண்ணியல் வெம்மையினான்" (நம்பிகள்); சேர்ந்தார் - மீண்டும் வந்தணைந்தார்; "அந்நிலைமைத் தானத்தை அகலாத தொருகருத்து, முன்னியெழுங் குறிப்பினால் மூளு மாதரவு" (3573) முன்னரே பெற்றனராதலின் அதனையே தொடர்ந்து சென்று சேர்ந்தனர் என்பதாம்; சாத்தனூரில் சிந்தையில் செயல் ஆராய்ந்தபோது தமிழில் ஆகமப்பொருள் வகுப்பதற்காக உடற்பொறை மறைக்கப்பட்டதென உணர்ந்தனரேயன்றி இன்ன இடத்தில் அது நிகழ்வதென்று இடம் உணர்த்தப்படவில்லை. அது முன்னரே உணர்த்தப்பட்டதாதலின் அதனைப்பற்றிக்கொண்டு சேர்ந்தனர் என்பதாம். சேர்ந்திருந் தேன்சிவ னாவடு தண்டுறை" (திருமந்). |
|
|