பாடல் எண் :3591

நலஞ்சிறந்த ஞானயோ கக்கிரியா சரியையெலாம்
மலர்ந்தமொழித் திருமூல தேவர்மலர்க் கழல்வணங்கி
அலர்ந்தபுகழ்த் திருவாரூ ரமணர்கலக் கங்கண்ட
தலங்குலவு விறற்றண்டி யடிகடிறஞ் சாற்றுவாம்.
28

(இ-ள்) நலஞ்சிறந்த....கழல்வணங்கி - நன்மை தருதலிற் சிறந்து விளங்கும் ஞானம் யோகம் கிரியை சரியை என்ற நான்கு நெறிகளும் விரிந்த மொழியினை யுடைய திருமூல தேவரது மலர்போன்ற திருக்கழல்களை வணங்கி (அதனாற் பெற்ற திருவருளின் துணைகொண்டு); அலர்ந்த ...கண்ட - திசைகளில் எங்கும் விரிந்து பரவிய புகழினையுடைய திருவாரூரிலே அமணர்களது கீழாயின செயல்கள் கலங்குதலைச் செய்த; தலங்குலவு...... சாற்றுவாம் - உலகில் விளங்கும் வலிமை பொருந்திய தண்டியடிகளது அடிமைத் திறத்தினை எடுத்துச் சொல்லப் புகுகின்றோம்.
(வி-ரை) இது கவிக்கூற்று. ஆசிரியர் தமது நியமப்படி இதுவரை கூறிப்போந்த சரிதத்தை முடித்துக்காட்டி மேல்வரும் சரிதத்துக்குத் தோற்றுவாய் செய்தருளுகின்றார்.
நலஞ்சிறந்த......மலர்ந்த மொழி - இது இதுவரை கூறிப்போந்த சரித உள்ளுறையும் சரித சாரமுமாகும்.
நலஞ்சிறந்த - வீடு பேற்றுக்கு நெறிகளாகிய.
திருமூல தேவர் - நாயனாரது பெயர்; இவ்வாறு சில பிரதிகளில் இப்புராணப் பெயர் எழுதப்பட்டுள்ளது.
கழல் - "கள்ளவினை, வென்று பிறப்பறுக்கச் சாத்தியவீ ரக்கழலும்" (போற்றிப் பஃறொடை) என்ற கருத்து. "பிறவிவிடர் தீர்ந்துலகத் தோருய்ய, ஞான முத னான்குமலர் நற்றிருமந் திரமாலை" (3589) என்றபடி, பிறவியறுக்க வழி தேடித் தந்த வெற்றிக் குறிப்புப்படக் கழல் என்றார்; அணிமாதி சித்திகளும் யோகநிலையும் கூடிக், காலத்தையும் வெற்றிகொண்ட பண்பும் குறிப்பு.
அலர்ந்த புகழ்த் திருவாரூர் - இறைவர் ஆட்சிபுரிந் தமர்ந்தருளும் புகழ்.
அமணர் கலக்கங் கண்ட - விறல் தண்டியடிகள் சரிதத் தோற்றுவாயும் உள்ளுறையுமாம்; சரித சாரம்; அமணர் கலக்கமாவது - ஆரூரில் அமணர்களது நிலைபேற்றினைக் கலங்கச் செய்து அப்புறப்படுத்தியது. கண்ட - காணுதல் - செய்தல்; "முதல்வன் கண்டது முதனூலாகும்."
கண்ட - குருடாயிருந்த விழிகள் விழிக்கப்பெற்றுத், தம் கண்ணாலே கண்ட என்பதும் குறிப்பு. "நாட்டமிகு" என்ற முதனூற் கருத்தை விரித்தபடியும்,சரிதத் தோற்றுவாய்க் குறிப்புமாம்.
விறல் - அடிமைத் திறத்தின் உறைப்பினாற் போந்த வலிமை. "வீரமென்னால் விளம்புந் தகையதோ?" (144) (திறம் - சரிதப்பண்பும் வரலாறும்.)
அமணர் கலக்கம் கண்ட - விறல் - என்பன வகைநூ லாட்சி; ஆசிரியர் காட்டியருளியவாறு.