தண்டி யடிக டிருவாரூர்ப் பிறக்கும் பெருமைத் தவமுடையார் அண்ட வாணர் மறைபாட வாடுஞ் செம்பொற் கழன்மனத்துக் கொண்ட கருத்தி னகநோக்குங் குறிப்பே யன்றிப் புறநோக்குங் கண்ட வுணர்வு துறந்தார்போற் பிறந்த பொழுதே கண்காணார். | 1 | (இ-ள்.) தண்டி அடிகள் - தண்டியடிகள் என்னும் பெயருடையார்; திருவாரூர்....தவமுடையார் - திருவாரூரிலே பிறக்கும் பேறுடைய பெருமையாகிய முன்னைத் தவத்தினை உடையவர்; அண்டவாணர்.... குறிப்பேயன்றி - தேவர்கள் வேத முழக்கங்களைச் செய்ய ஆடுகின்ற சிவந்த பொன்போன்ற திருவடிகளை மனத்தினுள்ளே கொண்ட அகக்கண்ணாற் காண்கின்ற குறிப்பொன்றே யல்லாது; புற நோக்கும்....போல் - வெளிப்பார்வையால் நோக்கும் அளவுபட்ட வுணர்வினை ஒழித்தவர்போல; பிறந்த....காணார் - அவதரித்த நாளினின்றே புறக்கண் பார்வை யில்லாதவர். (வி-ரை.) தண்டியடிகள் - உடையார் - கண்காணார் - என்று முடிக்க. தண்டியடிகள் - நாயனாரது பெயருடைனே புராணந் தொடங்குவது ஓர் சிறப்பு. திருவாரூர்....தவமுடையார் - திருவாரூர்ப் பிறக்க முத்தி என்பவாதலின், அவ்வாறு பிறத்தல் தவமுதிர்ச்சியினால் முத்திபெறும் தகுதி வாய்ந்தவர்க்கல்லது கிட்டாது; அங்குப் பிறக்கப் பெறுதலே வீடு பெறும் தகுதி கொடுக்கும். தவங்களுள் எல்லாம் பெருந்தவமாதலாலன்றோ பெருநன்மையாகிய வீடுதரும் வகையால் திருவாரூரிற் பிறப்பைக் கொடுக்கும் என்பதாம். அண்டவாணர் - தேவர்கள்; அண்டவாணர்....ஆடும் செம்பொற்கழல் - இது தியாகேசரது ஆடல் குறித்தது. தியாகேசர் தேவலோகத்தினின்றும் இங்குப்போந்தருளினாராதல் குறிப்பு; "அமரர்நா டாளாதே யாரூ ராண்ட" (தேவா). அண்டவாணர் தியாகேசர் என்று கொண்டு அவரது கழல் என்பது மொன்று. செம்பொன் - மாற்றுயர்ந்த பொன். கழல்....குறிப்பேயன்றி - கருத்தினகம் - மனக்கண்; கருத்தி னகநோக்கும் குறிப்பாவது மனத்தில் இறைவன் றிருவடியை ஊன்றிப் பதித்து வைத்து அதனையே குறியாகக் கொண்டு அழுந்தியறிதல்; குறிப்பு - குறிக்கோள் - இலக்கு; "குறிப்பினாலே கூப்பினான் றாபரத்தை" (தேவா). புறநோக்கும் கண்டவுணர்வு - புறத்திலே உலகப் பொருள்களைக் காணும் அளவுபட்ட உணர்ச்சி; இதனால் அகநோக்கும் குறிப்பு அளவுட்படாத அகண்டிதமாகிய காட்சி என்பது பெற்றாம்; கண்டம் - அளவுட்பட்டது. (அகண்டிதம் - அளவுட்படாதது.) துறந்தார்போல் - புறக்கண் பார்வையாகிய கண்டித உணர்வு வேண்டாம்; அதனினும் பெரிய அகண்டித வுணர்வே வேண்டும் என்று புறக்கண் பார்வையைத் தாமே துறந்துவிட்டவர்போல. பிறந்த பொழுதே கண்காணார் - பிறவிக் குருடர்; பிறந்தபோதே கண்காணாராதலின் அகண்டிதமாகிய அகநோக்கே வேண்டும்; கண்டித வுணர்வாகிய புறக்கண் பார்வை வேண்டாம் என்று கொண்டு துறந்ததெப்போது? எனின், முன்னைத் தவத்தால் முன்னைப் பிறவியில் வேண்டி என்று குறிப்பார்போலப் பிறக்கும் பெருமைத் தவமுடையார் என்றார். பிறந்த பொழுதே - ஏகாரம் பிரிநிலை. அகநோக்கும் குறிப்பாவது இறைவன் றிருவடிகளையே தியானிப்பது; அவையேயன்றிப் பிறிதொன்றனையும் காண்பதில்லை என்ற நிலை; இந்நிலையினை வரும் பாட்டில் "காணும் கண்ணாற் காண்பதுமெய்த் தொண்டே யான கருத்துடையார்" (3593) என விரித்தல் காண்க. அகநோக்கால் திருவடியையே யன்றிப் பிறவற்றை நோக்காதவாறு போலப் புறநோக்காலும் நோக்கும் விடயங்களை நீக்கினவர் போலக் கண்காணாதவர் என்றலுமாம். பிறவிக் குருடராய் வந்த நிலையினைப் பின்னர் இவ்வரலாற்றில் அமணர் இழிவுபட எண்ணிக்கெட்டதுபோல, எளிதாய் எண்ணி, உலகம் அபசாரப்படாமைப் பொருட்டு இக்குறைபாட்டினை மிக்க மேம்பாடாகக் காட்டுவித்து வரலாறு தொடங்கியது ஆசிரியரது தெய்வக் கவிநலம்; குறைவை நிறைவாக உண்மை கண்டு காட்டும் கவிவன்மையும் காண்க. புறக்கண் பார்வை கண்டித மாதலின் அகண்டிதமாகிய அகக்கண் அதனினும் மிக்கது; பின்னர்ச் சிவன் தொண்டன்றி வேறு காணாத அக்குறிப்புடனே புறக்கண்ணும் பெற்றபோது அந்நாட்டம் அதனினும் மிக்கது என நாட்டமிகு தண்டி என்ற தொகைநூற்பொருளை விரித்தவாறும் கண்டுகொள்க. கருத்தின் கண்ணோக்கும் - என்பதும் பாடம். |
|
|