செங்கண்விடையார் திருக்கோயிற் குடபாற் றீர்த்தக்குளத்தின்பாங் கெங்கு மமணர் பாழிகளா யிடத்தாற் குறைபா டெய்துதலால் அங்கந் நிலைமை தனைத்தண்டி யடிக ளறிந்தே யாதரவால் "இங்கு நானிக் குளம்பெருகக்கல்லவேண்டு"மென்றெழுந்தார். | 4 | (இ-ள்.) செங்கண்....எய்துதலால் - சிவந்த கண்ணுடைய இடபத்தினையுடைய இறைவரது திருக்கோயிலின் மேற்புறத்திலே உள்ள கமலாலயத் தீர்த்தக் குளத்தின் பக்கங்களில் எங்கும் அமணர்களது பாழிகளாக ஆக்கித் தூர்க்கப்பட்டு இடத்தினாற் குறைபாடு உண்டாயினமையாலே; அங்கு....அறிந்தே - அவ்விடத்தில் அந்த நிலைமையினைத் தண்டியடிகள் தெரிந்தே; ஆதரவால்....என்றெழுந்தார் - அன்பினாலே இங்கு நான் இந்தக் குளத்தினை அகலமாகப் பெருகும்படிக் கல்லியிட வேண்டும் என்ற துணிவுடன் அதனை மேற்கொண்டெழுந்தனர். (வி-ரை.) குடபால் தீர்த்தக் குளம் - கமலாலயம் என வழங்கும் அழகிய தீர்த்தக்குளம். இது இலக்குமி தவஞ் செய்த தீர்த்தம் என்ப. பாங்கு எங்கும் - கீழ்ப் பக்கம் திருக்கோயில் இருத்தலால் சுற்றுப்புறம் ஏனைய மூன்று பக்கமும் எல்லாவிடத்தும். அமணர் பாழிகளாய் - அமணர்களது மடங்களும் குகைகளும் இருக்கைகளுமாக ஆக்கப்பட்டு. இடத்தாற் குறைபாடு எய்துதலால் - அஃதாவது அமணர் அங்குக் குளத்தின் பரப்பைக் குறுக்கித் தூர்த்துத் தங்கள் பாழிகளாக்கி அமைத்துக்கொண்டமையால் குளத்தின் பரப்புக் குறுகிற்று என்பதாம். திருவாரூரில் கோயிலும், குளமும், ஓடையும் முறையே ஐயைந்து வேலிப் பரப்புடையன என்பர். சுயநலத்துக்காக இவ்வாறு பொதுவிடங்களில் இடங்களை ஆக்கிரமித்துத் தங்கள் சொந்த இருக்கை இடங்களைப் பரப்பிக்கொள்ளுதல் முன்னை நாளினும், இந்நாளினுங் காணும் மனிதரின் கேடான இயல்புகளுள் ஒன்று; இடம் சுருங்கிய காரணத்தாலே என்க. அங்கு அந்நிலைமைதனை - அறிந்தே - அந்த இடத்திற் சென்று அந்நிலையின் உண்மையினையும், அதனை நீக்கும் இன்றியமையாத தகுதியினையும் அறிந்து கொண்ட பின்னரே; ஏகாரம் தேற்றம். கண்டு என்னாது அறிந்து என்றது சரிதக் குறிப்பு. ஆதரவு - மிக்க அன்பு; தண்டியடிகள் செயல், அழுக்காறு, குரோதம் முதலிய எவ்விதத் தீய எண்ணங்களாலும் தூண்டப்பட்டதன்று என்பது. பெருகக் கல்ல வேண்டும் - குளத்தின் இடப்பரப்பு முன்போலப் பெருகிய அளவில் அமைவதாக ஆக்குதற்குக் கல்லியிடுதல் வேண்டும்; கல்லுதல் - தோண்டுதல்; குடைதல்; வெட்டுதல். எழுந்தார் - முயற்சியினை மேற்கொண்டார்; முயன்ற நிலை வரும் பாட்டிற் கூறுதல் காண்க. குறிப்பு :- அமணர்கள் இங்குக் கமலாலயத்தின் கரையில், குடிபுகுந்து, அந்நாளில் ஏனை, நடு நாடு - பாண்டிநாடு - தொண்டை நாடுகளிற் போலவே சைவத் திறத்திற்குப் பெருங்கேடு சூழ்ந்து கெடுதி செய்து வந்தனர் என்பது நாட்டுச் சரித ஆதர்வுகளால் அறியக்கிடக்கும் உண்மை. நமிநந்தி நாயனார் புராண வரலாறும் பார்க்க. |
|
|