பாடல் எண் :3613

குழியில்விழுவார்; நிலைதளர்வார்; "கோலு மில்லை"
யெனவுரைபார்ப்;
வழியீ" தென்று தூறடைவார்; "மாண்டோ" மென்பார்;மதிகெட்டீர்
"அழியும்பொருளை வட்டித்திங் கழிந்தோ" மென்பா;"ரரசனுக்குப்
பழியீதாமோ?"வென்றுரைப்பார்; பாய்களிழப்பார்பறிதலையர்;
22
(இ-ள்.) வெளிப்படை. குழியில் விழுவார்களும், நிலைதளர்வார்களும், (தடவிச் செல்ல) ஊன்றுகோலும் இல்லையே என்று கூறுவார்களும், ஈதுவழி என்று எண்ணிச் சென்று புதர்களை அடைவார்களும், நாம் இறந்து போனோம் என்று சொல்வார்களும், மதிகெட்டவர்களே! அழியும் பொருளை நம்பிச் சபதம் செய்து இங்கு நாம் அழிந்தோம் என்பார்களும், ஈது அரசனுக்குப் பழியாகுமோ? (ஆகாது) என்பார்களும், (உடுத்த) பாய்களையும் இழப்பார்களுமாகி அந்தப் பறிதலையுடைய அமணர்கள்.
(வி-ரை.) குழியில் விழுவார்....வழியீதென்று தூறடைவார் - கண்காணாமையால் வழிநடப்பார் இவ்வாறு துன்புறுவர்; கண்ணுளார்க்கும் இருளிரவில் இவ்வாறு நிகழ்வதுண்டு; "கட்புலன் றெரியாது கொட்புறு மொருவற்குக், குழி வழி யாகி வழிகுழி யாகி, யொழிவின் றொன்றி னொன்றுதடு மாற, வந்தாற் போல" (பட்டினத்தார் - திருக்கழுமல மும்மணிக்கோவை - 10)
கோலுமில்லை - கோல் - ஊன்றுகோல்; கோல் வழிதடவி யறிந்த செல்லவுதவுவது; ஆளுடைய நம்பிகளுக்குத் திருவொற்றியூரில் கண் மறையத் திருவெண்பாக்கத்தில் இறைவர் ஊன்றுகோல் அருளிய வரலாறு காண்க; ஊன்றுகோலிலாதார் காலினாற் றடவிச்சென்று வழியறிவர். "காலினாற் றடவிச் சென்று" (457)
தூறு - புதர்; இவை வழியருகில் முளைத்துள்ள குறுமுட் செடிகள்; தூறு - கல்லும் மண்ணு மொதுக்கித் தூற்றப்பட்டமையால் வழிகளி னருகில் குவிந்துள்ள சிறு மேடுகள் என்றலுமாம்.
மாண்டோம் - வழி யறியாது செல்வதனால் இடறி வீழ்ந்து மாள்வது நிச்சயம் என்ற கருத்து; உறுதி பற்றி இறந்த காலத்தாற் கூறியதாம்; மாள்வது போன்ற துன்பம் எனவந்த இரக்கச்சொல் லென்றலுமாம்.
மதி கெட்டீர் - தம்மினத்தவரை நோக்கித் தாமே இழித்துரைத்துக் கொண்டது; மதிகெட்டோம் என்ற பாடமுமுண்டு.
அழியும் பொருளை யட்டித்து இங்கு அழிந்தோம் - வட்டித்தல் - ஒட்டுதல்; சபதம் கூறுதல். அழியும் பொருள் - நம்பியிருந்த தம்மைக் காப்பாற்ற வியலாது தமக்கு அழிவு தேடித் தந்துவிட்ட தமது சமயக் கொள்கைகள்; பொருள் - பொருளை நம்பி என்க. "நம்பி" என்பது இசையெச்சம். வழிபட்டு - என்ற பாடமுண்டு.
அரசனுக்குப் பழியீதாமோ? ஆமோ? வினா ஆகாது என எதிர்மறை குறித்தது; ஈது - இவ்வாறு வயவரைக் கொண்டு சாடித் தம்மை ஊரினின்றும் துரத்துதல்.
பாய்கள் - சமணர்களின் உடையாகிய தடுக்குகள். பாய் உடுப்பது அவர்கள் வழக்கு; வழிச் செலவுக்கு உதவும் உடையாகப் பாய் வேண்டினர் என்பது. "பறிதலைக் கையர் பாயுடுப் பார்களை" (பிள். தேவா).
பறிதலையர் - அமணர்கள் தலைமயிர் பறித்தல் அவரது சமய ஒழுக்கங்களுள் ஒன்று; இங்கு நேரிட்ட துன்பத்தினாலே தலைமயிர் பறித்துத் துக்கித்தவர் என்றலுமாம்.