பாடல் எண் :3615

அன்ன வண்ண மாரூரி லமணர் கலக்கங் கண்டவர்தாஞ்
சொன்ன வண்ண மேயவரை யோடத் தொடர்ந்து துரந்ததற்பின்
பன்னும் பாழி பள்ளிகளும் பறித்துக் குளஞ்சூழ் கரைபடுத்து
மன்ன னவனு மனமகிழ்ந்துவந்து தொண்ட ரடிபணிந்தான்.
24
(இ-ள்.) அன்ன....கண்டு - அவ்வாறாகிய நிலையில் திருவாரூரில் உள்ள அமணர்களது கலக்கத்தினைக் கண்டு; அவர்....துரந்தற்பின் - அவர்கள் தங்களே ஒட்டிச் சபதங் கூறி யிசைந்தபடி அவர்களை ஊரில் இல்லாத வண்ணம் ஓடத்தொடர்ந்து துரத்தியபின்; பன்னும்....கரைபடுத்து - சொல்லிய அமணர்களது பாழிகளையும் பள்ளிகளையும் பறித்து இடித்துக் குளத்தினைக் சூழ்ந்த கரையினை உரியபடி அகலமாகச் செய்து; மன்னவனும்....பணிந்தான் - அரசனவனும் மனமிக மகிழ்ந்து வந்து தண்டியடிகளை அடிவணங்கினான்.
(வி-ரை) அன்னவண்ணம் ஆரூரில் அமணர் கலக்கம் கண்டு - அன்ன வண்ணம் (மன்னன்) - கண்டு என்க; அரசன் கண்ட நிலையினை வைத்து ஆசிரியர் சரித வரலாறு கூறுகின்றாராதலின் சேய்மைச் சுட்டினாற் கூறிய குறிப்புமாம்.
அமணர் கலக்கங் கண்டு - (திருவந்தாதி 37) "அமணர் கண்ணாங் கிழப்பவமணர் கலக்கங் கண்ட" என்ற வகைநூ லாட்சி போற்றப்பட்டது; கலக்கம் - ஈண்டுச் சபதம் கூறியவாறே கண்ணிழந்தமையால் அமணர் கொண்ட மயக்கம் என்ற பொருளில் வந்தது; கண்டு - கண்டமையால்; கண்டு துரந்ததற்பின் - என்று கூட்டுக; (3591) பார்க்க; கனவில் இறைவராணைவழி நின்றானாயினும் அரசநீதி முறைப்படி உலகறியச் சபதத்தின்படி அமணர்கள் கண்ணிழந்ததனை நேரே கண்டபின்பே முறை செய்தனன் என்க.
அவர்தாம் சொன்ன வண்ணமே - அவர் தாமே தண்டியடிகளிடம் ஒட்டிய தன்றித் தன் முன்னரும் இசைந்தபடியே; "அதற்கிசைந்தார்" (3609); தாம் - தாமே; பிரிநிலை ஏகாரம் தொக்கது; பிறரெவரும் சொல்லாது தாமே; வண்ணமே - அரசன் விதிக்கும் குற்றத் தண்டனையின் அளவு அவர் தாம் கூறிய அளவே என்றபடி; அந்த அளவு ஊரில் இரோம் என்றபடி அவ்வூரில் நில்லாது செய்தல்; இஃது மிகையும் குறைவுமின்றி அக்குற்றத்துக்கேற்றபடி அமைதலான் என்பது; "தீங்கு செய்த தன்மையாற் சாலு மென்றே, மிகையிலா வேந்தன் செய்கை" (2752) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க. "நீமெய் கண்ட தீமை காணின், ஒப்ப நாடி யத்தக வொறுத்தி" (புறம்).
ஓடத்தொடர்ந்து துரந்ததற் பின் - ஓடும்படி சாடித் தொடர்ந்து நகரெல்லைப் புறம் கடக்கத் துரத்தியபின்.
பன்னும் பாழி பள்ளிகளும் பறித்து....கரை படுத்து - பன்னும் - குளத்தின் கரையெல்லையை ஆக்கிரமித்து இடத்தாற் குறைபாடு செய்து அங்குப் பாழியும் பள்ளிகளும் அமைத்துக் கொண்டனர் என்று முன் கூறப்பட்ட (3595); எடுத்துச் சொல்லப்பட்ட; பள்ளிகளும் பறித்துக் - கரைபடுத்து - இடத்தின் குறைபாட்டை நீக்கி அகலமாக்கும்படி குளம் கல்ல எண்ணினார் தண்டியடிகள். ஆயின் அதனைச் செய்வதற்கு அவ்விடத்தில் அமணர் நிலையாக அமைத்துக்கொண்ட பாழி பள்ளிகளைப் பறித்தாலன்றி இயலாதாதலானும், அதனைச் செய்து கரை எல்லையினை அளவு படுத்துதல் அரசனாலன்றி யமையாமையானும் அரசன் அதனைச் செய்தனன் என்க; இந்நாளிலும் பொதுப்பயன்களுக்கு இடம் வேண்டின் அரசாங்கம் அதனை எடுத்து அளவுபடுத்தும் சட்டமுறை காண்க; (Acquisition of land for Public purposes; Land Acquisition Act). கரைபடுத்தல் - கரையினை எல்லைகண்டு அளவுபடுத்துதல். (வழக்கு வென்ற அம்பலம் கட்டுதற்கு வீடுகள் வாங்கியது காண்க.)
மன்னன் அவனும் - நில வேந்தனான தன்மையேயன்றி, இறைவரருளப் பெற்ற தன்மையும் கூடியவன் என்பார் மன்னனும் என்னாது மன்னனவனும் என்றார்; அவன் - முன் கூறியபடி அருளப்பெற்ற அவன் என முன்னறிசுட்டு.
மன மகிழ்ந்து வந்து - அரச நீதிமுறையே யன்றி அருள் முறையும் முற்றியதால் உளதாகிய மகிழ்ச்சி.
அடி பணிந்தான் - இறைவரருள் பெற்ற தொண்டரை வணங்கு முகத்தானும் விடைபெறும் பொருட்டானும் பணிந்தனன் என்க; தொண்டர்பால் சார்ந்து - என முன்னர்ப் பணிதல் கூறாமை என்னை? எனின், அங்கு இருபாலும் வழக்கறுத்து உலகியல் நீதிமுறை செய்யப் போந்தானாதலின் வெளிப்பட வணக்கங் கூறிலர்; தானே சென்று அவர்பாற் சார்ந்தமையே வணக்கமாயிற் றென்பது.