பணையுந் தடமும் புடைசூழு மொற்றி யூரிற் பாகத்தோர் துணையுந் தாமும் பிரியாதார் தோழத் தம்பி ரானாரை யிணையுங் கொங்கைச் சங்கிலியா ரெழில்மென் பணைத்தோ ளெய்துவிக்க வணையு மொருவர் சரணமே யரண மாக வடைந்தோமே. | 1 | துதி - இனி, நிறுத்த முறையானே, "வம்பறா வரிவண்டு" என்ற திருத்தொண்டத் தொகை ஐந்தாவது பாசுரத்தினுள், "அம்பரான் சோமாசி மாறனுக்கு மடியேன்" என்ற பகுதியின் சரிதத்துக் கருத்து "ஆரூர னாரூரி லம் மானுக்காளே" என்றதனள் போந்தபடி, திருவாரூர்ப் பெருமானுக்கு நம்பிகள் ஆளாயின சரிதப் பகுதியைக் கூறத் தொடங்கிய ஆசிரியர் நம்பிகள் சரிதத்தினுள் மற்றுமோர் பகுதியினை உள்ளமைத்து ஆளாந் தன்மையைக் காட்டும் முகத்தால் அதனை நம்பிகளின் துதியாகக் கூறுகின்றார். இவ்வாறு நம்பியாண்டார் நம்பிகளால் வகுத்துக் காட்டப்பட்டது. தொகை:- "வம்பறா வரிவண்டு" என்னுமித் திருப்பாட்டினுள் துதிக்கப்பட்ட ஆறு அடியார்களுக்கும் தனித்தனி அடியேனாகிய ஆரூரனாகிய நான் திரு ஆரூர் அம்மானுக்கும் ஆள் என்று முடிக்க. அம்மானுக்காளே யாகிய ஆரூரன் முன் கூறிய ஆறு அடியவர்களுக்கும் தனித்தனி யடியேனானேன் என்று கூட்டி முடித்தலுமாம். இவை பற்றி முன் உரைத்தவையும் பார்க்க. வகை:- துணையும் ....துணையா - ஒப்பும் அளவும் இல்லாத இறைவரது திருவருளே துணையாகக் கொண்டு; களையும்....அணையும் - அம்பினையும் ஒளி பொருந்திய நெடிய வேலினையும் கறுத்த இரண்டு கயல்மீன்களையும் ஒத்த கண்களையுடைய சங்கிலியாரது பெரிய மூங்கில் போன்ற இரண்டு தோள்களையும் அணைந்த; அவன்...அற்புதனே - அவர் திருவாரூரர் என்ற சொல்லப்படும் அற்புதராவார். துணை - ஒப்பு; "தனக்குவமை யில்லாதான்" (குறள்); கணை - வேல் - கயல் - பிணை - இவை கண்களுக்கு ஒப்பாக உவமிக்கப்பட்டன; கணை - வேல் - இரண்டும் ஊடுருவிப்பாயும் நிலைக்கும், கயல் - கண்ணின் பிறழ்ச்சிக்கும் உவமைகள்; இவை வடிவும் தொழிலும்பற்றி வந்தன; "காட்சியிற் கண்ணினார்" (35) என்று முன்னை நிலையினும், "என்னை யுள்ளந் திரிவித்தாள்" (3382) என்று இம்மை நிலையினும் பாய்ந்த நிலைகுறிக்க இரண்டு ஒற்றைப் பொருள்களால் உவமித்தார்; "காவியினேர் கண்ணாருங் கண்டுமிக மனங்கலங்கிப், பாவியே னிதுகண்டேன்" (3415) என்ற கண்ணீர்மை குறிக்கக் கயல் என்றார்; நீரினில் வாழ்வதும் பிறழ்வதும் பொதுத்தன்மை; பிணை - பெண்மான்; அன்புக் கறிகுறியாவன; "அன்புறு காதல்கூர வணையுமான் பிணைக ளோடும்"(653); மகிழடியின் ஒன்றும், மணத்திறத்தினில் ஒன்றும் ஆக இரண்டு நிகழ்ச்சிகளின் பார்வைக்கு இவை இரண்டும் இணைகளாகக் கூறிய நயமும் கண்டுகொள்க. அமை - மூங்கில்; அற்புதன் - இன்ன படியென் றறியலாகாத பெருமையன். (இ-ள்) பணையும்..ஒற்றியூரில்; வயல்களும் வாவிகளும் பக்கமெங்கும் சூழும் திருவொற்றியூரிலே; பாகத்தோர்...பிரியாதார் - தமது ஒரு பாகத்திலே துணைவியாகிய உமையம்மையாரும் தாமும் பிரியா துள்ளவராகிய இறைவர்; தோழத் தம்பிரானாரை....அணையும் - தம்பிரான் றோழரை இணையாகிய தனங்களையுடைய சங்கிலியாரது அழகிய மெல்லிய பணைத்த தோள்களை அடையும்படிச் செய்ய, அதனாற் சென்றணையும்; ஒருவர்.....அடைந்தோமே - ஒருவராகிய நம்பிகளது திருவடிகளையே நமக்குக் காப்பாக அடைந்தோம் (வி-ரை) ஒற்றியூரில் - எய்துவிக்க - அணையும் என்று கூட்டுக; ஒற்றியூரில் பிரியாதார் என்ற கூட்டி யுரைக்கவும் நின்றது. ஓர் பாகத்துத் துணையும் என்க; துணை - உமையம்மையார்; துணைவியார்; தம்பிரான் றோழரை - என்க; தோழனாராதலின் எய்துவிக்க என்ற காரணக்குறிப்புடன் நின்றது. எய்துவிக்க அணையும் - எய்துவித்தலால் அணையும். அரணம் - காவல்; ஆணவத் தீங்கு வராமற் காக்கும் மதில். வகைநூலுட் போந்த கருத்தினையே ஒட்டிக் கூறிய பண்பும் பொருளும் காண்க. யாப்பின் எதுகையும் அவ்வாறே அமைத்தநிலை எத்துணையளவு வகை நூலாசிரியரை ஆசிரியர் அடியொற்றிச் செல்கின்றார் என்பதனை உணர்த்தும், இத்துதியின் விரிவு இச்சருக்கத்துட் போந்த நம்பிகளது சரிதப் பகுதியாதலும் கண்டு கொள்க. |
|
|