நாடோறுஞ் சிவலிங்கங் கண்டுண்ணு மதுநயந்து மாடோர்வெள் ளிடைமன்னுஞ் சிவலிங்கங் கண்டுமனம் நீடோடு களியுவகை நிலைமைவரச் செயலறியார் பாடோர்கற் கண்டதனைப் பதைப்போடு மெடுத்தெறிந்தார். | 9 | (இ-ள்) நாடோறும்..நயந்து - நாள்தோறும் சிவலிங்கத்தைக் கண்டு தொழுதபின்பே உணவு உட்கொள்ளவேண்டும் என்னும் நியமத்தினை மேற்கொள்ள விரும்பி; மாடு ஓர்...நிலைமை வர - பக்கத்திலே ஒரு வெளியிடத்திலே நிலைபெற்ற சிவலிங்கத்தினைக் கண்டு மனத்தில் நீடு செல்கின்ற மிக்க மகிழ்ச்சி பொருந்திய நிலைமை கைவரப் பெற்றமையாலே; செயல் அறியார் - இன்னது செய்வதென் றறியாராகி; பாடு ஓர்......எறிந்தார் - பக்கத்தில் ஒரு கல்லினைக்கண்டு அதனையே மலராக அன்பினில் விளைந்த பதைப்புடனே எடுத்து அச்சிவலிங்கத்தின் மேல் எறிந்தனர். (வி-ரை) நாடோறும்....அது நயந்து - அது - அந்நியமம். சிவ வழிபாடுகளின் வகை பலதிறப்படுவன; அவற்றுள் நாயனார் மேற்கொண்டது ஒன்றேயாம்; அஃதாவது "சிவலிங்க தரிசனத்தின் பின்பே உணவு கொள்வது" என்ற ஒன்றேயாம்; "அருப்போடு மலர்பறித்திட் டுண்ணா ராகில்" "உண்பதன் முன் மலர்பறித்திட் டுண்ணா ராகில்" (தேவா - அரசு - தனித். தாண்); நாள் தோறும் உண்பதன் முன் சிவலிங்கம் காண்பதும், கைவந்தவாறே வழிபடுவதும், அதன்பின் உண்ணுதலுமாகிய இவற்றையே நியமமாக மறவாது கொண்டு இந்நாயனார் அதுவே யாறாக முத்தியடைந்தனர். நியமமாகிய மறவாது கொண்டு இந்நாயனார் அதுவே யாறாக முத்தியடைந்தனர். நியமமாகிய சிவலிங்க வழிபாட்டின் சிறப்பு இதனான் அறியக் கிடக்கின்றது; நயந்து - மிக விரும்பி. மாடு.......கண்டு - பக்கத்தில் வெளியில் இருந்ததொரு சிவலிங்கத்தினைக் கண்டு அதனையே பற்றி. மனம்......நிலைமைவர - மனத்துட்கொண்ட நியமத்தின் உறைப்பினாலே கண்ட மாத்திரத்திலே நீண்டு செல்லும் பெருமகிழ்வாகிய நிலை கூடுதலால்; இது சடுதியில் வரும் அழுந்திய மனநிலை; இவ்வாறு நல்ல நிலையும் உண்டு - தீமை பயக்கும் நிலைகளும் வருவதுண்டு. தீமைபற்றிச் சடுதியில் எழும் இந்நிலைகளின் மூலமே உலகர் இதனை அறிகுவர்: (நன்னிலை வரப்பெறம் பக்குவம் வேண்டுமன்றோ?) இதனை Temproary Insanity என்று கொள்வது நவீன மருத்துவச் சட்ட தத்துவம். செலறியார் - தாம் மிக்க அம்மகிழ்வினால் இன்னது செய்கின்றோ மென்றறியாராகிய; இறைவர் திருமேனிமேல் கல்லெறிதல் விலக்கப்பட்ட பாவங்களுள் ஒன்றென்பதனையும் மறந்தாராகி; இதன் உண்மைத் தத்துவத்தினை மேல்வரும் பாட்டில் உணர்த்துதல் காண்க. வெள்ளிடை - வெளியிடம்: கோயில் கட்டட முதலியவற்றால் மூடாத வெளி: இவ்வாறு வெள்ளிடையில் காணும் சிவலிங்கங்கள் அனேகம் காஞ்சியிலும், பிற பதிகளிலும் உண்டு; அவை சைவ மக்களின் நல் உணர்ச்சி யின்மையினையே புலப்படுத்துவன; வெள்ளிடையிருத்தலால், அவ்விலிங்கத்துக்காவது அக் குறியினுள் நின்று வேட்டார்க்கு வேட்டவளிக்கும் இறைவருக்காவது ஆக்கப்பாடேனும் அழிவேனும் இல்லை. இச் சிவக் குறிகளை அவ்வாறு கவனமின்றிக் கிடக்கவைத்தலால் அது கண்டிருக்கும் மக்களுக்குத்தான் கேடுறும் என்பது நூற்றுணிபு. இறைவர் வடிவங்களாகிய குறிகளை நிழல் செய்து ஏற்ற படி காவல்செய்யவேண்டு மென்பது சிவாகம விதி. நீடோடு - நீண்டு செல்லும்; நாயனார் இறுதியில் முத்திபெறும்வரை இத்தன்மையே இடையறாது நிகழ்ந்த குறிப்பு. களியுவகை நிலமைவர - களி உவகை - ஒரு பொருட் பன்மொழி மிகுதி குறித்தது; களி - கள்ளுண்டான்போலத் தன்னிலை யிழக்கச் செய்யும் அளவும் குறித்தது: உவகை என்னாது உவகை நிலைமை - என்றது அன்றுடனொழியாது அத்தன்மையேயாகி மாறிய பண்பு நிலைபெற்றது என்று குறித்தற்கு. பாடு...எறிந்தார் - பாடு - பக்கம்; படு - விகுதியடியாகக் கொண்டு துன்பம் தரத்தக்க என்றலுமாம். கல் கண்டு அதனைப் பறித்து - கல்லினைக் கண்டு அதனையே பறித்து; கற்கண்டு - ஒரு சொல்லாகக் கொண்டு உண்ண இனிக்கும் கற்கண்டாக அதனையே எண்ணி என்ற தொனிப்பொருளும் கொண்டு, துன்பம் விளைக்கும் அப்பொருளினையே இன்பம் தரும் பண்டமாக எண்ணி என்றலுமாம். பதைப்போடும் - பதைப்பாவது மிக்க களிப்பினால் வரும் உடல் நடுக்கம். உடல் அசைவு - "கீழ்மே லாகப் பதைத்துருகு மவர்" (திருவா. சத. 21) எடுத்து - மலர் எடுத்தல் போல என்பது குறிப்பு. எறிதல் - அருச்சிப்பார் போல வீசுதல். |
|
|