பாடல் எண் :3645

அகநிறைந்த பேருவகை யடங்காத வாதரவான்
மகவுமகிழ்ந் துவப்பார்கள் வன்மைபுரி செயலினால்
இகழ்வனவே செய்தாலு மிளம்புதல்வர்க் கின்பமே
நிகழுமது போலதற்கு நீள்சடையோர் தாமகிழ்வார்.
10
(இ-ள்) அகநிறைந்த...ஆதரவால் - மனநிறைந்து பெருகிய பெருமகிழ்ச்சியினால் வந்த அளவு கடந்த அன்பினாலே; மகவுமகிழ்ந்து...செய்தாலும் - தமது மகவினை மகிழ்ந்து களிப்பவர்கள் அம்மகார்கள்பால் வலிமை செய்யும் செயல்களின் மூலம் இகழ்வனவற்றைச் செய்தாலும்; இளம்புதல்வர்க்கு....நிகழும் - அவ்விளம் புதல்வர்களுக்கு இன்பமே உண்டாகுமன்றி அவ்வலிய செயல்களால் துன்பமுண்டாகாது; அதுபோல்....மகிழ்வார் - அதுபோல இந்நாயனார் செய்ததாகிய கல்லெறிந்த வன்மைச் செயலுக்கு நீண்ட சடையினையுடைய இறைவர் மகிழ்ச்சியே யடைவார் (ஆயினார்.)
(வி-ரை) நாயனார் நீள் களியுவகை மிகப் பதைப்போடும் கல் எறிந்த வலிந்த செயலுக்கு இறைவர் மகிழ்வாராயினார் என்றதன் உண்மையினை உவமை முகத்தால் விளக்கியவாறு.
அகநிறைந்த...நிகழும் - என்றது உவமிக்கப்படும் பொருளாகும் ஓர் உண்மை. அஃதாவது சிறுவர்பால் பேரன்புகொண்டு களித்து மகிழும் பெற்றோர்கள் அம்மகிழ்ச்சி மீக்கூர்ந்தெழுதலினால் சிலபோது அம்மகார்களைச் சிறிதே அடித்தல் - கிள்ளுதல் - இறுகப்பற்றுதல் முதலியவன்மைச் செயல்களையும் செய்வர். மிக்க அன்பு காரணமாகத் தம்பால் மகிழ்தலால் இவற்றையும் அத் தாய் தந்தையர் செய்கின்றார் என்பதை அம்மகாரும் அறிகுவர். ஆதலின் அவ்வன்மைச் செயல்களும் அவர்க்குத் துன்பம் பயவாது இன்பமே பயக்கும்: இஃது உலகியல் நிலையிற் கண்கூடா அறியக்கிடக்கும் உண்மை. இகழ்வன - செய்யக்கூடாத வலிந்த செயல்கள்; அடித்தல், கிள்ளுதல் முதலாயின.
இதற்கு இவ்வாறன்றி, தம்மகார்கள் தம்பால் அன்பினால் வலிந்த செயல்கள் செய்தாலும் பெற்றோர்கள் அதனால் இகழாது அம் மகவுகளை மகிழ்ந்தே உவப்படைவார்கள்; அதுகண்டு அவ்விளம்புதல்வர்க்கு இன்பமே உண்டாகும் என்றுரைத்தனர் முன் உரைகாரர்கள்; இப்பொருளில் புதல்வர்க்கு என்பதிற் குவ்வுருபு ஏழுனுருபின் பொருளில் வந்ததென்ப; செய்தாலும் - உவப்பார்கள் என்று கூட்டுவர்; இப்பொருளை உவமத்திற் காட்டும்போது கல் எறிந்த நாயனார் வன்மைபுரி இளம் புதல்வராகவும் இறைவர் அதற்கு மகிழும் தாய்தந்தையாகவும் கொள்ளப்படும். இப்பொருளில் தம் பெற்றோர்மாட்டுப் புதல்வர் வன்மை புரியும் இகழ்ச்சிச் செயல் அன்பினாற் செய்ய வாராமையின், இதன் பொருத்தம் ஆராயத் தக்கது.
புதல்வர்க் கின்பமே நிகழும் - அதுபோல் சடையோர் தாமகிழ்வார் என்ற சொற்கிடக்கை முறையினாலும், இச் செயலில் மகிழ்வு நிகழ்வது இறைவரிடத்தாதலானும் இறைவரை அன்பினால் வன்மை புரியப்பெற்ற இளம் புதல்வராகவுரைக்கப்பட்டது.
அதுபோல் அதற்கு - அது - புதல்வர்க்கு இன்பம் நிகழுமது; அதற்கு - வன்மைபுரி செயலினால் இகழ்வனவே செய்ததற்கு; ஈண்டுச் சிவநெறி விதியினால் விலக்கப்பட்ட கல் எறிந்த வலிய செயலுக்கு.
மகிழ்வார் - மகிழ்வாராயினார் என ஆக்கச்சொல் வருவிக்க.
மகிழ்ந் துரைப்பார்கள் - என்பதும் பாடம்.