பாடல் எண் :3653

ஆதியார் தம்மை நாளுங் கல்லெறிந் தணுகப் பெற்ற
கோதில்சீர்த் தொண்டர் கொண்ட குறிப்பினை யவர்க்கு நல்குஞ்
சோதியா ரறித லன்றித் துணிவதென்? னவர்தாள் சூடித்
தீதினை நீக்க லுற்றேன் சிறப்புலி யாரைச் செப்பி.
18
(இ-ள்) ஆதியார் தம்மை....குறிப்பினை- நாள்தோறும் கல்எறிந்து ஆதி முதல்வனாகிய சிவபெருமானை அணுகப்பெற்ற குற்றமில்லையாகிய சிறப்புடைய தொண்டராம் சாக்கிய நாயனார் உட்கொண்டு வழிபட்ட குறிப்பினை; அவர்க்கு....அறிதலன்றி - அவருக்கு அருள் செய்யும் சோதியா ராகிய சிவபெருமான் அறிதலன்றி நாம் துணிவது எவ்வாறு?; அவர் தாள்சூடி....செப்பி - அவர் திருவடிகளைச் சிரமேல் வைத்துக்கொண்டு அத்துணைகொண்டு சிறப்புலியாரது சரிதம் கூறப்புகுந்து தீமையை நீக்கலுற்றேன்.
(வி-ரை) இது கவிக்கூற்று.
இதுவரை கூறிவந்த சரிதத்தை வடித்து எடுத்துக் காட்டி முடிபு கூறி இனி வரும் சரிதத்துக்குத் தோற்றுவாய் செய்கின்றார் ஆசிரியர்.
நாளுங் கல் எறிந்து - ஆதியார் தம்மை - அணுகப்பெற்ற - என்க; ஆதியார் தம்மை எறிந்து என்றும், ஆதியார் தம்மை அணுக என்றும், கூட்டியுரைக்க நின்றது; எறிந்து - எறிந்த அதுவே ஆறாக - சாதனமாக. கோதில் சீர் -"நற்சாக்கியர்" (நம்பி. தேவா). ஆதி - சிவலிங்கம்.
கொண்ட குறிப்பு - உட்கொண்ட குறிக்கோள்; முன் உய்வகையாற் பொருள் சிவன் என்றும் (3640), சிவலிங்கங் கண்டபின் உண்ணும் அது நியதியாகிய உய்வகை என்றும் (3644), அவ்வாறு சிவலிங்கம் கண்டநாள் நீண்ட களியுவகை நிலையிற் செயலறியாது பதைப்போடு கல்எறிய நேர்ந்த அதுவே திருவருள் ஆணை என்றும், ஆதலின் அதனையே தொடர்ந்து தவிராது செய்தல் வேண்டுமென்றும், பசுபதியார் தஞ்செயலே அடங்கலுமாமாதலின் துவராடைவேடம் களையாது அவ்வேடத்துடனே சிவன்பணி செய்யத் தக்கதென்றும் (3641), அயர்த்துண்ணப் புகுந்தபோதும் நினைவு வந்து எழுந்து எறிதல் வேண்டுமென்றும் (3651) கூடிய இவை கொண்ட குறிப்பு எனப்பட்டன. குறிப்பு - கொள்கை.
அவர்க்கு நல்கும்....துணிவதென் - முன்கூறியவை யெல்லாம் மனத்துள் நிகழ்ந்தனவே யாதலானும், புறச்செயல்கள் உலகரறியாதபடி உலக நிலைக்கும் விதிக்கும் மாறுபாடாவன வாதலானும், உயிர்க்குயிராக நின்று கண்டு அருளும் இறைவரே அறிவார்; உலகரால் இன்னதென்று கண்டு துணியலாகா தென்பது. "நாளுமற் றவர்க்கு நல்கு நம்பர்தா மளக்கி லன்றி, நீளுமித் தொண்டி னீர்மை நினைக்கிலா ரளங்க வல்லார்" (606) என்ற நிலையினை இங்கு நினைவு கூர்க.
அவர் தாள்சூடி - மேற்சரிதம் கூறுதற்குத் துணை செய்ய என்பது குறிப்பு.
சூடிச் செப்பித் - தீது - நீக்கலுற்றேன் என்க.
"கல்லா லெறிந்த பொல்லாப் புத்த, னின்னினைந் தெறிந்த வதனா, லன்ன வன்றனக்கு மருள்பிழைத் தன்றே" (திருவிடை - மும் - கோ.25) என்ற திருவாக்கும் ஈண்டு இச் சரித ஆதரவாகக் காணத்தக்கது.