பாடல் எண் :3671

வேதகா ரணரடியார் வேண்டியமெய்ப் பணிசெய்யத்
தீதில்குடிப் பிறந்ததிரு வெண்காட்டு நங்கையெனுங்
காதன்மனைக் கிழத்தியார் கருத்தொன்ற வரும்பெருமை
நீதிமனை யறம்புரிய நீர்மையினை நிலைநிற்பார்,
12
(இ-ள்) வேதகாரணர் அடியார்....செய்வார் - வேதங்களுக்குக் காரணமாகிய சிவபெருமானடியார்களுக்கு வேண்டிய உண்மைப் பணிகளை யெல்லாம் செய்வாராய், தீதில்குடி....நிலை நிற்பார் - குற்றமில்லாத குடியிலே பிறந்த திரு வெண்காட்டு நங்கை என்கின்ற காதலையுடைய மனைக்கிழத்தியாருடனே கூட இருவர் கருத்தும் ஒன்றாகப் பொருந்த வரும் பெருமையுடையதாய் அறநீதியின் வழியே இல்லறம் புரிந்து வாழும் தன்மையினை நிலை நிற்பாராய்,
(வி-ரை) அடியார் - பணிசெய்ய - நீதி மனை அறம்புரியும் நீர்மை - சிவன் றிருத்தொண்டு முறை அன்பிற் செய்கின்ற நாயனார் அடியார்களுக்குப் பணி செய்வதற்காக மனையறத்தை மேற் கொண்டார் என்பது ஈண்டுக் கவனிக்கற்பாலது; "தென்புலத்தார் தெய்வம்" என்றும், "துறந்தார்க்குந் துவ்வாதவர்க்கும்" என்றும், "இயல்புடைய மூவர்க்கும்" என்றும் ( குறள்) இல்வாழ்வான் கடமைகளை நீதிநூல் வகுத்துக் கூறும். அவை வேறு; இங்குக் கூறிய அடியார் பணியாகிய அறம்புரி நீர்மை வேறு; முன்கூறியவை உலகியற் பயத்தன. உரிய போகங்களைத் தந்து இறுதியிற் பிறவிக்கேதுவாவன; ஆனால் அடியார் பணியோ! எனின், அவற்றின் வேறாய்ச், சிவன் பணியேயாய் முடிவில் வீடுபேற்றுக் கேதுவாவன. இங்கு நாயனார் உலகியற் போகங்கள் பற்றியேனும் மகப்பேறு பற்றியேனும் மணஞ் செய்து மனையறம் மேற்கொண்டாரலர், அடியார் பணிவிடைக்காக வென்றே அதனை மேற் கொண்டனர் என்பார், அடியார் மெய்ப்பணி செய்ய என்றார். பின்வரும் சரித நிகழ்ச்சி யிதனை உறுதிப்படுத்துதல் காண்க. இல்வாழ்க்கை நிலையின் அடியார்களுக்குப் பணிசெய்த இளையான்குடிமாறர், இயற்பகையார், குங்கிலியக்கலயர் முதலாகிய இப்புராணப் பெரியோர்களது சரிதங்களையும் இங்கு நினைவுகூர்க.
தீதில் குடிப் பிறந்த - இருமரபுந் துயராய் வரும் நல்ல குடிப்பிறப்பு வேண்டப்படுவது. "இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி" (முருகு). குடிப்பிறந்தார் - குலத்தின்கண் - என்று பலவாறும் இதனை எடுத்து ஓதுவார் திருவள்ளுவர்.
திருவெண்காட்டு நங்கை - இவ்வம்மையின் இயற்பெயர் விளங்கவில்லை; ஊர்ப்பெயர் பற்றியே விளக்கமாய் வழங்கப் பெற்றனர் போலும்; "காரைக்காலம்மை" என்ற வழக்குக் காண்க.
காதன்மனைக்கிழத்தியார் பெருமை - காதல் மனைக்கிழத்தியார் - இவர்களது இல்லறம் அகப்பொருணூல்களில் கூறியபடி காதற்றன்மையும் பொருந்தியிருந்தது என்றபடி; கருத்தொன்ற வரும் பெருமை - "காதலிருவர் கருத்தொருமித் -தாதரவு, பட்டதே யின்பம்" என்பது காண்க. இருவர் மனமும் ஒன்றியிராவிடில் அஃது இல்லறமாகாது; "இருவரும் பூண்டீர்ப்பி னல்லால், இவ்வாழ்க்கை யென்னும் இயல்புடைய வான்சகடம், செல்லாது" என்ப; அருமை நோக்கிப் பெருமை என்றார்; கருத்தொன்றவரும் உலகிறந்த அரிய பெருமையினை இச்சரித நிகழ்ச்சியிற் கண்டுகொள்க.
நீர்மையினில் - என்பதும் பாடம்.