பாடல் எண் :3675

கண்ணுதலார் கணபதீச் சரத்தின்கட் கருத்தமர
உண்ணிறையன் பினிற்பணிசெய் தொழுகுவார் வழுவின்றி
எண்ணில்பெருஞ் சீரடியா ரிடைவிடா தமுதுசெய
நண்ணியபே ருவகையுட னயந்துறையு நாளின்கண்,
16
(இ-ள்) கண்ணுதலார்....ஒழுகுவார் - நுதலிற் கண் உடைய இறைவரது கணபதீச்சரத்தின் கண்ணே கருத்துப் பதிய விரும்பி உள்ளே நிறையும் அன்பினாலே திருப்பணிகள் செய்து ஒழுகுவாராகிய அவர்; வழுவின்றி - குறைவில்லாமல்; எண்ணில் பெரும்....செய - அளவில்லாத பெருமையுடைய சிறந்த அடியார்கள் இடையறாது வந்து அமுது செய்தருள; நண்ணிய....நாளின் கண் - பொருந்திய பெரிய மகிழ்ச்சியுடனே விரும்பி அமர்ந்திருந்த நாளிலே,
(வி-ரை) கருத்தமா உள்நிறை அன்பினில் - கருத்து அமர்தல் - மனம் ஊன்றி நிற்றல்; பணி செய்யும் ஆசையில் அழுத்துதல்; அமர - அமர்தலினால்; விரும்புதலினால்; அன்பினிலஅன்பு காரணமாக; உள்நிறை - மனத்தினுள் நிறையும்.
ஒழுகுவார் - ஒழுகுவாராகிய நாயனார்; வினையாலணையும் பெயர்; ஒழுகுவார் - உறையும் நாளின்கண் என்று முடிக்க.
வழுவின்றி - வழுவின்றிப் பணிசெய்து என்றும், வழுவின்றி அமுதுசெய என்றும், முன்னும் பின்னும் கூட்டி உரைக்க நின்றது. வழு - குறை.
எண்ணில் பெருஞ்சீர் - எண்ணில் - தொகையின் பெருமை; பெருஞ்சீர் - சிறப்பின் பெருமை.
நயந்து - அளவில்லாத அடியார்கள் இடையறாது அமுது செய்தல் கண்டு அதனில் மேலும் விருப்பம் மிகுந்து.