பாடல் எண் :3696

"வந்தணைந்து வினவுவார் மாதவரே யா"மென்று
சந்தனமாந் தையலார் முன்வந்து தாள்வணங்கி
"அந்தமில்சீ ரடியாரைத் தேடியவர் புறத்தணைந்தார்;
எந்தமையா ளுடையவரே! யகத்துளெழுந் தருளு" மென,
37
(இ-ள்) வந்தணைந்து.....வணங்கி - வந்து சேர்ந்து கேட்கின்றவர் மாதவராகிய அடியவரே யாவர் என்று உட்கொண்டு சந்தனத்தாதியார் என்ற அம்மையார் முன்னால் வந்து அரவது திருவடிகளை வணங்கி; அந்தமில்....அருளும் என - எல்லையில்லாச் சிறப்பினையுடைய அடியவர்களைத் தேடும் பொருட்டு அவர் புறத்தே சென்றனர்; எம்மையாளுடைய முதல்வரே? அகத்துள்ளே எழுந்தருளுவீராக என்று சொல்ல,
(வி-ரை) வந்து....என்று - இது அவர் வினவுதல் கேட்டுத் தாதியார் கொண்ட கருத்து; மாதவர் - அடியார்; தவம் - சிவனடிமைத் திறத்தின்நிலை; சிவவழிபாடு; மாதினை ஒரு கூறுடைய சிவனேயாம் என்ற குறிப்புமாம்.
சந்தனமாம் தையலார் - சந்தனத்தார் என்னும் பெயருடைய தாதியார். "சந்தனத்தாரெனும் தாதியார்" (3734); முன்வந்து - வெளியிலிருந்து உசாவி வந்தவர்களுக்கு விடை கூறி அறிவிப்பது முதலில் தாதியார் கடமை என்பது.
தாள் வணங்கி - அடியாரை வணங்கி விடை கூறும் மரபு.
அந்தமில் சீர் அடியாரைத்தேடி - அடியார் பெருமைகளை அக்குடும்பம் அறிந்து ஒழுகிய நிலை புலப்படக் கூறிய திறமும் மரபும் காண்க.
எந்தமை ஆளுடையவரே - இஃது அடியார்களிடத்து அவர்கள் பத்தியுடன் ஒழுகும்நிலை காட்டியபடி; இங்கு வந்தவர் இறைவரே என்பதும், அவர் இத்தாதியாரை யுள்ளிட்டு இக்குடும்ப முழுமையும் அன்று ஆட்கொள்ள வந்தவர் என்பதும் உட்குறிப்புப் படத் தாதியார் வாக்கில் அவரை அறியாமலே போந்தவாறும் கண்டுகொள்க.
அகத்துள் எழுந்தருளும் - எம் அகம் (மனம்) நீங்காதுறையும் என்ற குறிப்பும் காண்க.
மாதவரேயோ வென்று - என்பதும் பாடம்.