மனைவி யார்தம் முகநோக்கி"மற்றித் திறத்து மைந்தர்தமை நினைவு நிரம்ப நிதிகொடுத்தாற் றருவா ருளரே!; நேர்நின்று தனையன் றன்னைத் தந்தைதா யரிவா ரில்லைத்; தாழாதே எனையிங் குய்ய நீபயந்தான் றன்னை யழைப்போம் யா"மென்றார். | 56 | (இ-ள்) மனைவியார் தம் முகநோக்கி - (அதுகேட்ட நாயனார்) மனைவியாரது முகத்தினை நோக்கி; மற்றித் திறத்து....உளரே - மற்று இத்தன்மை வாய்ந்த மைந்தர்களை அவ்வவர் எண்ணம் நிரம்பும் அளவு நிதியம் கொடுத்தால் கொடுப்பாரும் உளராவர்; நேர் நின்று....இல்லை (ஆனால்) நேரே எதிரில் நின்று தமது மைந்தனைத் தந்தையும் தாயரும் அரிவார்கள் (இவ்வுலகத்தில்) இல்லை; தாழாதே........யான் என்றார் -(ஆகையினால்) இனியும் தாமதிக்காமல் இங்கு என்னை உய்யச் செய்தற்கு நீபெற்ற மகனைநாம் (இதன் பொருட்டு) அழைப்போம் என்று கூறினார். (வி-ரை) மற்றித் திறத்து......உளரே - மற்று - உலகியலுக்கு மாறு பட்ட என்பதாம். ஏகாரம் - தேற்றம். நினைவு நிரம்ப - தாம் எண்ணிய அளவும் நிரம்ப; மனம் நிரம்ப எனினுமாம். உளரே - உளராவர்; ஏகாரம் - இதனைச் செய்வாரும் உளராவர் என்று சிறப்பின் கண் வந்தது. நேர் நின்று - நேரே முன்னர் நின்று; மைந்தனைப் பிறர் அரிய நேரிடினும் அப்போது நேர் நிற்றலும் பெற்றோர்க்கரிது என்பதாம். அரிவார் இல்லை - இவ்வுலகில் இல்லை; ஆதலின் என்பது குறிப்பெச்சம். உய்ய - உய்யச் செய்ய - உய்விக்க என்ற பிறவினை விவ்விகுதி தொக்குத் தன்வினையாய் வந்தது. எனை உய்ய - என்னை உய்விக்கும் பொருட்டு; உய்யப் பயந்தான் என்க. எனை என்று ஒருமையாற் கூறினார் தாம் உய்வதனால் நாயகநாயகி நிலைமையாம் அம்மையாரும் உய்வதற் கேதுவாதல் பற்றி; நீ பயந்தான் - எனது உய்தி நீ பயந்ததனாலாயிற்று என்று அவரையும் உளப்படுத்தியவாறு மாயிற்று; நான் இங்குய்ய நீ பயந்தோனை. அழைப்போம் - இக்காரியத்தில் பயிரவர்க்குத் திருவமுதாக்கப் பசுவாய்ப்பயன்படுவதற்காக என்பது குறிப்பெச்சம் அழைப்போம் யாம் - என்று தம்மோடு வரையும் உளப்படுத்திக் கூறியதனால் தம்மில் மனமுவந்தே (3710) என்றபடி காதல் இருவர் கருத்தும் ஒருமித்து இச்செயல்செய்ய வேண்டி நின்ற தன்மை குறிப்பிடப்பட்டது. மேல் "இசைந்து - நயந்து - கொண்டுவாரும்" என்ற தமது உடன்பாட்டினை அறிவித்தவாறு காண்க. "அழைப்போம் யாம்" என்றது அதற்கு உனது உடன்பாட்டினை அறியவேண்டும் என்ற குறிப்புடன் கூறியதும் காண்க. பயந்தான் - பெற்றெடுத்தவன்; சீராளதேவர்; உய்ய - "பிழைக்குநெறி தமக்குதவ" (876) என்ற கருத்தும் ஈண்டுக் கருதற்பாலது. |
|
|