குஞ்சி திருத்தி முகந்துடைத்துக் கொட்டை யரைஞாண் டுகணீக்கி மஞ்ச ளழிந்த வதற்கிரங்கி மையுங் கண்ணின் மரூங்கொதுக்கிப் பஞ்சி யஞ்சு மெல்லடியார் பரிந்து திருமஞ் சனமாட்டி எஞ்ச லில்லாக் கோலஞ்செய் தெடுத்துக் கணவர் கைக்கொடுத்தார். | 60 | (இ-ள்) குஞ்சி....ஒதுக்கி - தலைமயிரினைத் திருத்தி, முகத்தைத் துடைத்து, கொட்டையிலும் அரைஞாணிலும் படிந்த துகளை நீக்கி; அணிந்த கலவைச் சாந்தம் அழிந்ததற்கு வருந்தி, கண்ணில் அணிந்த மையினையும் கண்ணிற் படாமல் ஒழுங்காகப் பக்கத்தில் நிற்கும்படி ஒதுக்கி; பஞ்சி......அடியார் - பஞ்சும் அஞ்சத்தக்க மென்மையுடைய அடியினையுடைய அம்மையார்; பரிந்து ......எடுத்து - அன்புடனே திருமஞ்சனம் ஆட்டுவித்துக் குறைதவில்லாத கோலத்தினைச் செய்து எடுத்து; கணவர் கைக்கொடுத்தார் - கணவராகிய நாயனார்கையிலே கொடுத்தனர், (வி-ரை) அடியார், திருத்துதல் முதலியவற்றைச் செய்து, எடுத்துக் கணவர் கையிற் கொடுத்தார் என்று கூட்டி முடிக்க. குஞ்சி திருத்துதல் - முதலியவை குழந்தைகளைத் தாய்மார் கண்டுழிப் பரிந்து செய்யும் செயல்கள் என்பர்; இவை தன்மையணி நயம்; அவ்வியல்புபற்றி இவை செய்தார் திருவெண்காட்டு நங்கையார் என்பாருமுண்டு; அடியார்க் கமுதாக ஆக்கும் பண்டமாக அம்மைந்தரது திருவுடம்பு அப்போது கொள்ளப்பட்டமையால் அப்பண்டத்தினைக் கழுவிச் செப்பமாக்கும் வகையால் அவ்வெண்ணத்துடன் இவை செய்யப்பட்டன என்பதாம். "அச்சமெய்திக் கறியமுதாமென்னு மதனால் - உச்சி மோவார் - அணைத்தே - முத்தந்தாமுண்ணார்" என மேற்கூறுமாற்றால் இக்கருத்துப் புலப்படுமாறறிக. குஞ்சி - ஆண் மக்களின் தலைமயிர்; முகந்துடைத்தல் - வியர்வையினையும், படிந்த மாசுகளையும் போக்குதற்கு; "குஞ்சியழகும்.....மஞ்சள் அழகும்" (நாலடி) என்பதும் காண்க.குஞ்சி - குடுமி. குஞ்சி - முகம்-2-ம் வேற்றுமைத் தொகை. கொட்டை - அரைநாண் - கொட்டை - கடுக்கன் - காதணி; உம்மைத் தொகை; கொட்டையிலும் அரைஞாணிலும்,. மஞ்சள் - குங்குமப்பூக் கலந்த கலவைச் சாந்து; அழிதல் - முன்னர்ப் பூசினபடியன்றி விளையாட்டு. வியர்வை முதலிய காரணத்தாற் கோலம் சிதைதல். மையும் - மஞ்சளோடு அவ்வாறே தீட்டிய கோலம் சிதைந்த மையினையும் என உம்மை இறந்தது தழுவியது; மருங்கு ஒதுக்குதல் - கண்ணிற்படாமல் இமைகளின் பக்கமே இருக்கும்படி ஒதுக்குதல். பஞ்சு அஞ்சும் மெல் அடியார் - அம்மையார்; இவ் அடை மொழிகள் அவரது திருவடியின் மெல்லிய தன்மை குறித்தன; இத்தகைய மென்மை தனக்கில்லை என்று இலவம்பஞ்சும் அஞ்சி ஒதுங்கக் கூடியபடி உள்ள மெல்லிய அடி என்க; அஞ்சுதல் - உடைந்து வெட்குதல்; தற்குறிப்பேற்றம். பஞ்சியிற் படினும் வருந்தும் அடி என்றலுமாம். "பஞ்சிதனின் மெல்லடி பதைப்ப" (கந்தபு - தெய்வ - மண - 231). பரிந்து - என்பதனை எல்லாவினைகளுடனும் கூட்டுக. எஞ்சலில்லாக் கோலம் - எவ்வாற்றாலும் ஒரு குறையும் இல்லாதவாறு செய்யும் அலங்காரம்; இவ்வாறு குறைபாடில்லாக் கோலஞ் செய்ததனை இங்கு இவ்வளவும் விரித்துக் கூறியது, இக்கோலத்தோடும் தரமில் வனப்பில் தனிப்புதல்வர் உயிர் பெற்று மீள வருதலும், இத்திருக்கோலத்துடனே என்றும் பிரியாதே இறைஞ்சி,இறைவர் - மலைமகளார் - சரவணத்துத் தனயர் - இவர்களுடனே திருக்கயிலையில் வீற்றிருக்கப் பெறுவாராதலும் குறித்தற்கு. எடுத்துக் கணவர் கைக்கொடுத்தார் - பள்ளியினிற் சென்று கணவனாற் எடுத்துக் கொடுவந்த பிள்ளையை அம்மையார் தாமே அவரிடமிருந்து எதிர் வாங்கினார்; கோலம் செய்தார் - மீள அவர் கையிற் கொடுத்தார் என்றது அம்மைந்த னுடலினைக் கழுவித் திருவமுதாக்குதற்குத் தக்கபடி செய்யவேண்டிய நிலை மனைவியாராகிய தமது கடமை என்றதனாலும், அமுதுக்குத் தக்கதாக ஆக்க வேண்டுமென்ற தமது அன்பினாலும் ஆம் என்றதாம். அன்றியும் இக்கோலங்கள் செய்து திருத்துதல் மெய்த்தாயர் தொ ழிலாதலும் காண்க. இவ்வாறு கோலஞ்செய்து எடுத்துக் கணவர் கைக்கொடுத்தது அம்மையாரது உலகியல் கடந்த சிவனடிமைத் திறம் பற்றிய பேரன்பின் நிலை குறித்தது. இனிப், பின்னர்த், தாம் அழைக்கத் தம் மகனாக மீள உயிர் பெற்று ஒடிவந்தபோதும் அம்மையார் "எடுத்துத் தழுவித் தம் கரமுன் அணைத்துக் கணவனார் கையிற் கொடுப்ப"க் காண்கின்றோம்; அந்நிலை வேறு; அது தமது புதல்வன் என்ற தன்மையாற் மேற்கொண்ட உலகியல் அன்புநிலை; இங்குக் கணவர் கைக்கொடுத்தது ஆண்மக்கள் செய்யும் மேல்வினை செய்தற்கு; அங்குக் கணவர் கையில் கொடுத்தது வைரவர் "நாமிங் குண்ப தவன்வந்தால்" என்றாராதலின் அவன் வந்த மையை அவர் அடியார்க்குக் காட்டி அவரை உண்ணச் செய்தற்கு; முன்னர் அம்மைந்தன் உடல் அடியவரது திருவமுதுக்குரிய கறிப்பண்டம்; பின்னர் அவ்வுடல், அவர் காணக்காட்டும் தம் புதல்வன்; என்றிவ்வாறு இவற்றின் வெவ்வேறாயின தன்மைகளைக் கண்டு கொள்க. |
|
|