பாடல் எண் :3728

"இறையுந் தாழா தெழுந்தருளி யமுது செய்யு" மென்றிறைஞ்சக்
கறையுங் கண்டத்தினின்மறைத்துக்கண்ணுநுதலிற்காட்டாதார்
"நிறையும் பெருமைச் சிறுத்தொண்டீர்! போது" மென்ன, நிதியிரண்டுங்
குறைவ னொருவன் பெற்றுவந்தாற் போலக் கொண்டு மனைபுகுந்தார்.
69
(இ-ள்) இறையும்.......இறைஞ்ச - இனிச் சிறிதும் தாழ்க்காது தேவரீர் எழுந்தருளித் திருவமுது செய்தருளுதல் வேண்டும் என்று கூறி வணங்க; கறையும்.....காட்டாதார் - கண்டத்திலே விடத்தின் கருமையினை மறைத்தும் நுதலில் உள்ள கண்ணினையுங் காட்டாது மறைத்தும் வந்தவராகிய இறைவர்; நிறையும்.....போதும் என்ன -நிறைவாகும் பெருமை பொருந்திய சிறுத்தொண்டரே! போதும் என்று அருள; நிதியிரண்டும்.....மனைபுகுந்தார் - வறியவன் ஒருவன் இரண்டு நிதிகளையும் ஒருங்கே பெற்றுவந்தாற்போல உடன் அழைத்துக் கொண்டு தமது மனையினிற் புகுந்தனர்.
(வி-ரை) இறையும் - ஒரு சிறிதும்.
கறையும்.....காட்டாதார் - இறைவர் காட்டி வந்தருளிருய திருவடிவக்குறிப்பு; கறையும் கண்டத்தினின் மறைத்து - இதனை முன் (3689) விரித்தருளியதனை ஈண்டு நினைவு கூர்க. வயிரவர், தலையினின்று திருவடிவரையும் கொண்ட திருவேடத்தினை (3685 முதல் 3694) பத்துத் திப்பாட்டுக்களால் விரித்துக் கூறிக்காட்டித் தரிசனம் செய்வித்தருளினாராதலின் ஈண்டு அவற்றை நினைவுகூர்தற் பொருட்டு அவற்றுட் சிறந்த தொண்டு நிலைகளைக் காட்டுவித்தருளுகின்றார்; மறைத்து - "விட மறைத்தருள" (3689); விடத்தினை மறைத்து அமிழ்தக் குமிழி நிறைத்தனர் எனக் கூறிய குறிப்பின்படித், திருநீலகண்டம், "வெவ்விட முன்றடுத்தெம் மிடர் நீக்கிய வெற்றியினா, லெவ்விடத் தும்மடி யாரிடர் காப்பது கண்ட மென்றே" (2233) என்றபடி அருள் புரிவதற் கடையாளமாம்; திருநீலகண்ட நாயனார்புராணம் பார்க்க. (363); கறையும் - கண்ணும் - உம்மைகள் எண்ணும்மைகள்.
கண்ணும் நுதலிற் காட்டாதார் - நெற்றிக் கண்ணை மறைத்து வந்தவர் என்பது; காட்டாதார் - வெளியே தெரியாது மறைத்தவர்; "திருநுதன்மேற் றிருநீற்றுத் தனிப்பொட்டுத் திகழ்ந்திலங்க" (3687); திருநீலகண்டம் மறைந்தமை பொதுவும், நுதற்கண் மறைத்தமை சிறப்பும் ஆகிய அருட்குறிப்புக்கள் பெறஇவற்றை ஈண்டு விதந்து எடுத்தோதியருளினர். நுதற்கண்ணின் அருள் இச்சரிதவிளைவுக்குரிய சிறப்புடைய தென்பது இப் புராணத் தொடக்கத்தில் "செயல்காம னொழியவிழி பொழிசெந்தீ, வருநாட்டத் திருநுதலார்" (3660) என்று உரைத்தமை காண்க. "கண்ணுதலுங் கண்டக் கறையுங் கரந்தருளி, மண்ணிடையின் மாக்கள் மலமகற்றும்" (இருபா - 1) என்ற ஞானநூலினும் இவ்விரண்டுமே எடுத்துக்கூறி யருளியது காண்க. இனம்பற்றி ஏனையவும் கொள்ளப்படும்.
முன்னர் விரித்துக் கூறியவையே அமையும்; இவற்றை மீண்டும் இங்குக் கூற வேண்டிய தென்னை? எனின், முன் கூறியவை அருள்புரிய வந்த நிலை; இங்குக் கூறுவது அன்பு நுகர்ந்து அருளினைச் செய்ய எழுந்தருளும் நிலை; "அன்பு நுகர்ந்தருளுதற்குத்....திருமலைநின் றணைகின்றார்" (3684).
நிறையும்.....போதும் - நிறையும் - இப்போது உமது பெருமை நிறைவாகும் நிலையில் உள்ளது என்பது. போதும் - போதுவோம் - போவோம் என்று எழுந்து சென்ற குறிப்பு; போதும் - அமையும்; அன்பு செலுத்திய எல்லை இவ்வளவே சாலும் என்ற குறிப்பும் காண்க. குறைவன் ஒருவன் இரண்டு நிதியும் பெற்று வந்தாற் போல - என்க. குறைவன் - வறியவன். குறைவு உடையவன். ஒருவன் - இரண்டும் எண்ணணிச்சுவை.
நிதி இரண்டும் - "சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து" (தேவா); உம்மை முற்றும்மை.
பெற்று வந்தாற்போல - பெற்று எடுத்துக் கொண்டு வந்தது போல வயிரவரை அழைத்துக்கொண்டு என்க. வினையும் பயனும் பற்றிவந்த உவமம். "இகத்தும் பரத்தும் இனியார்" (3736) என்றபடி இருபயனும் தரவருவது நிதி யிரண்டும் என்றதன் குறிப்பு.
கொண்டு - உடன் அழைத்துக் கொண்டு.