| |
3297 | பரிசனமு முடன்போதப் பாங்கமைந்த பதிகடொறுங் கரியுரிவை புனைந்தார்தங் கழறொழுது மகிழ்ந்தேத்தித் துரிசறுநற் பெருந்தொண்டர் நள்ளாறு தொழுவதற்குப் புரிவுறுமெய்த் திருத்தொண்ட ரெதிர்கொள்ளப் புக்கணைந்தார் | |
| 143 |
| 3296. (இ-ள்.) இன்புற்று அங்கு அமர்நாளில் - இன்பம் பொருந்தி அங்குவிரும்பி எழுந்தருளியிருக்கும் நாட்களிலே; ஈறில்....அருள் பெற்றே - அளவில்லாத அரிய வேதங்கள் துதித்தேத்துகின்ற வலிய புற்றின் அரவினை அணிந்த மன்னவனாரது திருவருள் விடைபெற்றே; அன்புற்ற காதலுடன் - அன்பினானிறைந்த பெரு விருப்பத்தினோடும்; அளவிறந்த...தொழப் போவார் - அளவில்லாத பிறபதிகளிலும் பொன்னொளியும் கரிது என்று சொல்லும்படி ஒளிமிக்கு விளங்கும் சடையினையுடைய இறைவரைத் தொழுவதற்குப் போவாராகி; |
| 142 |
| 3297. (இ-ள்.) பரிசனமும் உடன் போத - பணி செய்யும் பரிசனங்களும் தம்முடன் வர; பாங்கமைந்த....மகிழ்ந்தேத்தி - பக்கத்தில் உள்ள பதிகளிலெங்கும் சென்று யானைத் தோலினைப் போர்த்த இறைவரது திருவடிகளைத் தொழுது மகிழ்ச்சியுடன் துதித்து; துரிசறுநற் பெருந் தொண்டர் - குற்றந் தீர்க்கும் நல்ல பெரிய தொண்டராகிய நம்பிகள்; நள்ளாறு....புக்கணைந்தார் - திருநள்ளாற்றினைத் தொழுவதற்கு நினைந்து சென்று சிவ சிந்தனை மறவாத உண்மைத் திருத்தொண்டர்கள் எதிர்கொள்ள அங்குப் புகுந்து அணைந்தருளினர். |
| 143 |
| இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டுரைக்க நின்றன. |
| 3296. (வி-ரை.) ஈறில்அருமறை - "வேதங்கள் அநந்தம்" எனப்படும்; அளவில்லாத சாகை, உபசாகைகளோடு கூறியன. |
| வன்புற்றின் அரவு அணிந்த மன்னவனார் - வலியபுற்றில் வாழும்அரவு என்பது அரவுகளின் இயல்பு குறித்தது; இறைவர் பூணும் அரவுகள் புற்றில் வாழ்வன என்பதன்று; அரவணிந்த வன்புற்றின் மன்னவனார் என்று மாற்றி புற்றிடங்கொண்டார் எனப் பொருள் கொள்ளுதலுமாம். |
| அருள் பெற்றே - அருள் விடைபெற்றே. பிறபதியும் - போவார் - என்று கூட்டுக. |
| பொன்புற்கென்றிட ஒளிரும்சடை - புற்கென - ஒளி குறைந்து வறிதாகக்காட்ட; சடை பொன்னினும் மிக்கு விளங்கும் என்பதும். |
| 142 |
| 3297. (வி-ரை.) பரிசனமும் உடன்போத - பரிசனம் - பணி செய்யும் ஏவலாளர்கள்; சுவாமிகளுடன் பரிசனங்கள் செல்வதனை முன் "புடையெங்கு மிடைகின்ற பரிசனமுந் துயில்கொள்ள" (230) என்ற விடத்துக் குறிப்பாலுணர்த்தினர் ஆசிரியர். இங்கு இவர்களை மீண்டும் எடுத்து விதந்து கூறவேண்டுவதென்னையோ? எனின் உலக நிலையில் பரிசனங்கள் ஓரளவு பணி செய்து துணையாவதன்றி வேண்டிய அங்கங்கும் முற்றத்துணையாய் வருவதில்லை; நம்பிகள்பால் முற்றவும் உள்ளும் புறம்பும் வழித்துணையாய் நின்று வேண்டிய இடத்தெல்லாம் துணை செய்து உதவுபவர் இறைவர் தாமேயாம் என்பதனை இனி வரும் வரலாற்றில் திருக்குருகாவூரில், பொதி சோறளித்தும், திருக்கச்சூ ராலக்கோயிலில் சோறிரந்து கொணர்ந்தளித்தும் அருளுமாற்றால் விளங்க வைகின்றார் இறைவர் என்பது குறிப்பால் அறிக. பரிசனமும் - உடனின்று உதவும் துணையாய் எண்ணப்படும் பரிசனமும் என்று உம்மை சிறப்பு. |