[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்193

  திருவெண்குன்றம் முதலியவற்றின் தொடர்பாய்அங்கங்கும் சிதறிக் காணும் சிறு குன்றுகளின் வெளி.
  வள மருதம் - வளம் - அடைமொழி, முன்கூறிய இடையில் உள்ள ஏனைப் புறவுமலை முதலியவை அத்துணை வளமுடையனவல்ல என்ற குறிப்புடன் நின்றது; மருதம் - நாட்டின் பகுதி.
  எண்டிசையோர் பரவு - எல்லாத் திசையினின்றும் மக்கள் வந்து வழிபடும் நிலை குறித்தது; இது இந்நாளினும் கண்கூடாகக் காணப்படும் உண்மை. தலவிசேடம் பார்க்க. III - பக்கம் 559.
 

172

3327
தேனார்ந்த மலர்ச்சோலைத் திருக்கழுக்குன் றத்தடியார்
ஆனாத விருப்பினொடு மெதிர்கொள்ள வடைந்தருளித்
தூநாண்வெண் மதியணிந்த சுடர்க்கொழுந்தைத் தொழுதிறைஞ்சிப்
பாநாடு மின்னிசையின் றிருப்பதிகம் பாடினார்.
 

173

  (இ-ள்.) தேனார்ந்த...அடைந்தருளி - தேன் நிறைந்த மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த திருக்கழுக்குன்றத்தில் உள்ள அடியவர்கள் குறைவுபடாத விருப்பத்தினோடும் வந்து எதிர்கொண்டு அழைத்துச்செல்ல அணைந்தருளி; தூநாள்....இறைஞ்சி - தூய புதிய வெள்ளிய பிறையினைச் சூடிய சுடர்க்கொழுந்து போல்வாராகிய சிவபெருமானைத் தொழுது நிலமுறவணங்கி; பாநாடு...பாடினார் - பாக்களின் பண்பு நாடும் இனிய இசையினையுடைய திருப்பதிகத்தினைப் பாடியருளினார்.
  (வி-ரை.) தேன் - தேன் வண்டுகள்; தேன் - மது என்றலுமாம்.
  ஆனாத விருப்பு - என்றும் குறையாது மேன்மேல் மிகுகின்ற பெருவிருப்பம்.
  தூ - நாள் - வெண் - மதி - பிறைச் சந்திரன்; தூ - தூய்மை; தூய்மையாவது முன் மனைவியர்பால் அபசாரமும், அது காரணமாகச் சாபமும், அதனால் உடல் தேயும் நோயும், கொண்டு, மாயும் நிலையினின்றும் சிவபெருமானை அடைந்தமையால் அவை யாவும் நீங்கித் தூய்மையாக்கப்பட்ட நிலை. நாள் - புதிதாக முளைக்கும் நிலை.
  சுடர்க் கொழுந்து - சுடர்க்கொழுந்து போல்வாரைச் சுடர்க்கொழுந்தென்றார். வேதங்களே குன்றமாய் நிற்றலின், அதன் உச்சியில் விளங்குதலின், ஞானச்சுடரின் உச்சி என்பதாம்; "வேத வாகமச் சென்னியில் விளைபொருள்" (திருவிளை - புரா); மதியணிந்த சுடர் - என்றதனால் இரவி - மதி - முதலிய ஒளிகளுக்கு ஒளிதரும் பொருள் என்பதும் குறிப்பு; "வெளிறு தீரத்தொழுமின்" (4) "ஞானமூர்த்தி"(7) என்ற பதிகக் கருத்துக்கள் காண்க.
  தொழுதல் - கைகளாற்றொழுதல்; இறைஞ்சுதல் - நிலமுற வீழ்ந்து வணங்குதல்.
  பாநாடு மின்னிசை - பா - பாக்களின் - செய்யுட்டிறங்களின் - மேன்மைப் பண்பு; நாடுதலாவது உத்தமமான பண்புகள் எல்லாம் தாமே தேடிவந்தடைதல்; சொற்பண்பும் இசைப்பண்பும் ஒத்திசையும் தன்மை; இசை -இங்குப் பதிகப் பண்ணாகிய நட்டபாடைப் பண் குறித்தது.
 

173

  திருக்கழுக்குன்றம்
  திருச்சிற்றம்பலம்

பண்- நட்டபாடை

 
கொன்று செய்த கொடுமை யாற்பல சொல்லவே
நின்ற பாவம் வினைக டாம்பல நீங்கவே