| |
| நவ்விமதர்த் திருநோக்கின் - நவ்வி - மான். இங்குப் பெண்மான் பார்வை குறிக்கும். "விழியாற் பிணையாம்" (சிற். கோ). மான் நோக்காவது மருண்ட பார்வை. அன்பு புலப்படுக்கும் பார்வை என்பது உட்குறிப்பு (3182); பின் கூறும் வரலாற்றின் முற்குறிப்பு. பரவையார்க்கு அளித்தது என்க. அளித்தது - அளிக்கப்பட்டது. நம்பி - நம்பிகளால். |
| இவ்வுலகு வாழவரும் - "மாதவஞ் செய்த தென்றிசை வாழ்ந்திடத், தீதிலாத் திருத்தொண்டத் தொகைதரப் போதுவார்" (35). |
| 26 |
| 3181. (வி-ரை) நீக்கரிய - வழிகாணும்படி விலக்குதற்கரிதாகிய; நெறி பலவும் போக்கரிதாயிட - வீதிகள் பலவும் செல்லுதற்கருமையாக வழி அடைபட. |
| மீண்டும் தம் இல்புருவார் - மனையினின்றும் வீதி வழி வெளிச்செல்ல முற்படுவார் அஃதியலாமை கண்டு மீளவும் தமது மனையினுட் புகுவாராகி. |
| பாக்கியம் - சிவபுண்ணியம். பரவையார்க்கும் - எனச் சிறப்பும்மை தொக்கது. இந்நெல்லும் - உம்மை - முன் தமது மாளிகையளவிற் சேர்த்ததனோடு இதனையும் என இறந்தது தழுலிய எச்சவும்மை; பலவும் - இவ்வாறு தத்தம் மனத்தெழுந்த கருத்துக்கள் பலவற்றையும். |
| புகல்கின்றார் - சொல்கின்றார்களாக; ஆரூர் வாழ்வார்கள் புகல்கின்றாராகப் - பரவையார் முரசறைவித்தார் என முடிக்க. |
| 27 |
| 3182. (வி-ரை) வன்றொண்டர் - முன் 3164 - 3165-ல் உரைத்தவை பார்க்க. குண்டையூர் கிழார் உட்கொண்டு வழிபட்ட கருத்தைக் குறித்து நின்றது. |
| மகிழ்சிறத்தல் - மகிழ்ச்சி மீக்கூர்தல். |
| "இன்று உங்கள்....கொள்க" என - இது பரவையார் திருவாரூர் வாழ்வார்க்கு முரசறைந்து அறிவித்த செய்தி. இது பரவையாரின் பெருமையினைப் புலப்படுத்துவதாகும். நம்பிகள் பரவையார் பொருட்டுப் பொன்னும், பிறவும் வேண்டி இறைவரைப் பாடிப் பெறுகின்றார் எனச் சில அறிவில்லா மாக்களிடை வழங்கும் ஒரு பிழையான எண்ணம் மிகத் தவறென்பது இதனால் விளங்கும். அவ்வவர் மனை எல்லைக்குட்பட்ட அளவு நெல்லை அவ்வவரே எடுத்துக் கொள்ளக் கடவர் என்பதாம். "கோவைவாய்ப் பரவையார்" (3178); கொவ்வைவாய்ப் பரவையார்"(3169) என்றவை யெல்லாம் இவ்வாறு அருள் கனிந்த மொழிகள் வெளிவரும் இயல்பின் குறிப்புப்பட நின்றன. வற்காலத்தின் கொடுமையால் மக்கள் நெல் பெறாது வருந்தும் அந்நாளில் பரவையார் செய்த செயல் காலத்தினாற் செய்த பெருநன்றியுமாதல் கருதுக. |
| பொன்றங்கு மாளிகை - திருவருட் செல்வ நெல்நிறைதற் குறிப்பு. |
| புகப்பெய்துகொள்க - தாமே எடுத்துக்கொள்க. |
| வென்றி - ஈடணாத்திரயம் என்பவற்றுள் பொருட்பற்று அற எறிந்த வெற்றி. |
| முரசறைவித்தல் - அவ்வவர்க்குத் தனித்தனியாகவன்றி யாவரும் அறியும் படி பொது அறிவிப்பு நிகழ்த்தும் மரபு. தனித்தனி அறிவிக்க நெறியிடங்கொடாமையும் குறிப்பு. மேல்வரும் பாட்டில் "மறுகதனில் ஆளியங்கப் பறையறைந்த" என்பது காண்க. |
| 28 |
3183 | அணியாரூர் மறுகதனி லாளியங்கப் பறையறைந்த பணியாலே மனைநிறைத்துப் பாங்கெங்கு நெற்கூடு கணியாமற் கட்டிநகர் களிகூரப் பரவையார் மணியாரம் புனைமார்பின் வன்றொண்டர் தமைப்பணிந்தார். | |
| 29 |