[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்257

  ஈங்கோர்....மின்னுக்கொடி போல்வாள் - காட்சிப்பொருளை விரித்தவாறு; பொன் - மணி - மலர்ந்த ஒளி யாவது செயற்கையானன்றி இயல்பிற் பொருந்திய ஒளி; மலர்ந்த - தம் இயல்பால் உண்ணின்று வெளிப்பட என்பது குறிப்பு.
  அமுதில் அளாவி - அமுதத்தினுட் பெய்து; அமுதத்தின் வழியே விரவி வரச் செய்து; அளாவுதல் - ஈண்டுத் தன்மை விரவச் செய்தல் என்ற பொருளில் வந்தது.
  புதியமதி தன்னுள் நீர்மையாற் குழைத்து - புதியமதி - புதிதின் முற்றித் தோன்றும் முழுமதி; உள்நீர்மை - மதியினுள் ளீடாக நிற்கும் தட்பம்; குளிர்ச்சி.
  நீர்மை - தன்மையென்றும், நீரின்குணம் என்றும் இருபொருளும்பட நின்றது; குழைத்தல் - வெப்பந்தணித்தல்.
  சமைத்த மின்னுக் கொடிபோல்வாள் - இவ்வாறு பண்படுத்தப்பட்டமின்னற் கொடிபோன்று தோன்றிய அம்மை; "மின்போல் மறையும்" (3380) என்று இதற்குத் தோற்றுவாய் செய்தமை காண்க; மின்னுக்கொடி - கண்டாரையும் தொட்டாரையும் உடன் கொல்லலும், கொடிய பேரொளியும், வெப்பமும், வேகமும் உடையது; ஆனால் இதுவும் அதுவே போன்ற ஒளியாயிருப்பினும் அதற்கு மாறாகத் தட்பமும் அமுதநிலையும் கொண்டுள்ளது; இவ்வாறு அதன் தன்மைகள் மாறுதற்குள்ள காரணங்களைக் கற்பிக்கின்றார்; மின்னின், இறத்தலைச் செய்யுந் தன்மை மாற்ற அமுதில் அளாவி என்றும், வெப்பத்தினைக் குறைக்க மதிதன்னுள் நீர்மையாற் குழைத்து என்றும் கூறினார்; இந்நாளில் 40 ஆயிரம் 20 ஆயிரம் என்ற அளவுபடும் மின்சார சத்தியின் நாசகாரியம் மிக்க வேகத்தைக் குறைத்து 200 அளவுபடச் சுருக்கி இல்லங்களில் ஒளியும் வெப்பமும் தந்து உதவி உலவச செய்வதற்கு அதனை அமுதம் போன்ற ஆமணக்கு விளக்கெண்ணெயின் வழிச்செலுத்தி வாங்கும் நிலைகள் ஈண்டுக் கருதத்தக்கன. சமைத்த - ஆக்கிய - அமைத்த.
  என்னை - இறைவனுக் "காளாம் விதியால் வாழும் எனை" (3384) என்று இதன் கருத்தை மேல் விரித்தல் காண்க; வலிமிக்க என்னையும் என்று ஆணவச் செயற் குறிப்புப்பட உரைகூறுதல் தவறு.
  உள்ளம் திரிவித்தாள் - முன் கூறியவாறுள்ள அன்பு நிலையிற்றிரியாத என் உள்ளத்தினை மாறுபடச் செய்தனள். "வானந் துளங்கிலென்....ஒருவனுக்காட்பட்ட உத்தமர்க்கே" என்றபடி சிவனன்பி னுறைப்பினால், வேறெதனாலும் திரியாத உள்ளத்தையும் என்று சிறப்பும்மை விரிக்க; "என் மனங்கொண்ட" (293) என்று இவ்வாறே முன் கூறியதும் காண்க. தவநெறி வேண்டிப் பெற்று அந்நெறியே பிறழாது நின்றவராதலின் இவ்வாறு கூறினார் என்க.
  இயல்புதலும் - தமக்குத் தாமே கூறுதலும்.
 

228

  3383. (வி-ரை.) அருகு நின்றார் - நம்பிகள் அவர்களை நோக்கி வினவாவிடினும் நம்பிகள் கொண்ட ஐயப்பாட்டினைக் கேட்டு அருகுநின்றார், உலகியல்பின் வழித் தாமே விடைகூறுகின்றார்; இயம்பியபோது கேட்டு அருகு நின்றார்கள்.
  நங்கை சங்சிலியார் - "அவர்நங்கை பரவையார் சென்றும்பர் தரத்தார்க் குஞ் சேர்வரியார்" (293) என்று முன்னர்ப் பரவையாரையும் இவ்வாறே அங்கு முன்னின்றவர்கள் அறிவுறுத்தியமை காண்க.
  நங்கை - பெண்களிற் சிறந்தாரை நங்கை என்பதும், ஆடவருட் சிறந்தாரை நம்பி என்பதும் மரபு.