| | |
| | தான் - ஆடும் பூங்கொடிகளையும் மாடங்கள் நீடியுள்ள அழகிய நகரானது; பீடு....பெயர்த்து - பெருமை தங்கிய திருப்பெருமங்கலம் என்னும் பெயரினை உடையது. (ஆல் - அசை.) |
| | (வி-ரை.) நீடு....கீழ்பால் - அரச மரபும், நாட்டு வளமும், நீர்ச் சிறப்பும் ஒருங்கு கூறிய நயம் காண்க. |
| | காவிரி வடகரைக் கீழ்பால் - காவிரியின் வடகரையில் உள்ள பகுதிகளில் கிழக்கில் உள்ள. |
| | கீழ்பால் - நகர் - பெயர்த்து என்க. ஆடு பூங்கொடி மாடம் நீடிய அணி - இதனால் நகரச் சிறப்புக் கூறியபடி. |
| | அணிநகர் - கை புனைந்த அலங்காரமன்றி இயல்பாகவே அழகுடைய நகரம். |
| | பீடு - பெருமை. இது மாறாத சிவமங்கலப் பெருமை. பெருமங்கலம் என்றது நகர்ப் பெருமையினை விளக்கியபடி. தங்குதலாவது தலைவராகிய நாயனார்உயிர்துறந்த ஞான்றும் மாறாது மங்கலம் பொருந்தச் செய்த நிலை. |
| | பெயர்த்து - பெயரினை உடையது. பெருமங்கலம் என்றலே யமையுமாயினும் மேலும் பெயர்த்து என்றது பெயருக்கேற்ற பண்புடையது என்ற குறிப்புப் படக் கூறியதாம். இச்சரிதத்தில் நாயனாரது தேவியார்திருமணத்தினன்று புனைந்த மலர்க்கூந்தலினை அறிய்பெற்ற பின், திருவருளால் மீள வளரப் பெற்றனர். இச் சரிதத்தில் நாயனார்தம்மைத்தாம் உயிர்துறந்தமையால் இழக்க நின்ற மங்கலத்தினை அவர்மீள உயிர்பெற்றெழுந்தமையால் அம்மையார்மீளப் பெற்றனர். இச்சரிதக் குறிப்பும் பெறத் திருப்பெரு மங்கலப் பெயர்த்து என்று கூறிய நயமும், அக்குறிப்பேற நகர்தான் - பெயர்த்தால் என்று ஈரிடத்தும் அசை புணர்த்தி ஓதிய நயமும் கண்டுகொள்க. |
| | தான் - ஆல் - அசை. |
| | 1 |
| 3156 | இஞ்சி சூழ்வன வெந்திரப் பந்திசூழ் ஞாயில்; மஞ்சு சூழ்வன வரையென வுயர்மணி மாடம்; நஞ்சு சூழ்வன நயனியர்நளினமெல் லடிச்செம் பஞ்சு சூழ்வன காளையர்குஞ்சியின் பரப்பு. | |
| | 2 |
| | (இ-ள்.) இஞ்சி.....ஞாயில் - திருமதில் சூழப்பெற்றுள்ளன எந்திர வரிசைகளாற் சூழப்பட்ட மதில் ஞாயில்கள்; மஞ்சு.....மாடம் - மேகங்கள் சூழப்படுவன மலைகள் போலஉயர்ந்த அழகிய மாடங்கள்; நஞ்சு சூழ்வன நயனியர்- விடத்தின் தன்மைபோலக் கொடுமை நிறைந்த கண்களையுடைய பெண்களது; நளின மெல்லடிச் செம்பஞ்சு - மெல்லிய தாமரைபோன்ற அடிகளில் ஊட்டிய செம்பஞ்சுக் குழம்பு; சூழ்வன - சூழப்படுவன; காளையர்குஞ்சியின் பரப்பு -இளங்காளையர்களது முடிமயிர்களின் பரப்பு. |
| | (வி-ரை.) ஞாயில் இஞ்சி சூழ்வன; மாடம் மஞ்சு சூழ்வன; குஞ்சியின் பரப்புப் பஞ்சு சூழ்வன என்று கூட்டுக. நஞ்சு சூழ்வன என்றவிடத்து சூழ்வன என்பது பெயரெச்சம் : ஏனைச் சூழ்வன என்பவை வினைமுற்று. |
| | எந்திரப்பந்தி சூழ்ஞாயில் - பகைவர்கள் மதிலைக் கடந்து புகாமைப் பொருட்டு மதில்களிற் பலவகை இயந்திரங்கள் வைக்கப்படுவன: இவை நெருப்பு உமிழ்வன, நூற்றுவரைக் கொல்வன, முதலியனவாகப் பலவகையாயுள்ளன. |