|
| நீங்காத...நினைவாரை - எல்லாவுயிர்களையும் பொதுவகையால் நினைந்தருள் பவராயினும் இடையறாக் காதலினா னினைவாரைச் சிறப்பு வகையால் நினைவார் இறைவர் என்பதாம். "சார்ந்தாரைக் காத்த றலைவர் கடனாதல், சார்ந்தாரைக் காத்துஞ் சலமிலனாய்ச் - சார்ந்தடியார், தாந்தானாச் செய்துபிறர் தங்கள்வினை தான்கொடுத்தல், ஆய்ந்தார்முன் செய்வினையு மாங்கு" (போதம் - 10) என்று இவ்வுண்மையினை ஞானசாத்திரம் விளக்குதல் காண்க. "மறந்தானைத் தன்னினையா வஞ்சர் தம்மை யஞ்செலுத்தும் வாய்நவில வல்லோர்க் கென்றுஞ், சிறந்தானை" (தாண் - திருநாகேச்சுரம் - 6), "எத்தனையும் பத்தர்பத்திக் குளைவானை யல்லாதார்க் குளையாதானை" (தாண் - கீழ்வேளூர் 3) "மறவாதே தன்றிறமே வாழ்த்துந் தொண்டர் மனத்தகத்தே யனவரத மன்னி நின்ற திறலானை" (தாண். திருமுதுகுன்றம் - 8) என்பன முதலிய எண்ணிறந்த திருவாக்குக்கள் காண்க. |
| நினைந்தாரை நினைவாரை - நினைந்தபின்னர் அவர் நினைந்தவற்றை யீய நினைவார் என்றபடி. |
| பாங்காக - ஆளாகும் முறைமையாலே; பாங்கு - பண்பு; பாங்கு - தோழமை என்ற குறிப்புமாம். "என்னுடைய தோழனுமாய்" என்ற பதிகம் பார்க்க. |
| பணிய வரும் பயன் உணர்வார் - பயன் - பணிந்தமையால் பெற்ற பெரும்பேறாகிய பேரருளின் றிறங்கள். சரித நிகழ்ச்சிகள் எல்லாம் காண்க. |
| முன்பு - முன்னைநிலையினும், அதனைத்தொடர்ந்த இந்நிலையினும் இதற்கு முன்னாக. |
| உணர்வார் - உணர்வாராகி; முற்றெச்சம்; உணர்வார் - மனம் அழிவார் - மிக நினைந்து - இயம்பி - இரங்கினார் என்று மேல்வரும் பாட்டுடன் முடிக்க. உணர்வாராகி அதனாலே அழிவார் - நினைந்து என்க. |
| ஈங்கு நான் மறந்தேன் என்று - பயனை உணர்ந்தமையால் இங்குஅவரை நான் மறந்திருந்தேன் என்று வருந்தினார்; ஈண்டு மறந்தேன் என்பது பிரிந்திருந்தேன் என்ற அளவில் பொருளடைந்து நின்றது; நம்பிகள் எந்நாளும் திருவாரூரை மறந்திருக்கவில்லை யாதலின்; "பிரிந்திருக்கேன்" என்ற தேவாரமும் பார்க்க. |
| ஏசறவு - பெறற்கரிய பொருளைப் பிரிந்திருந்தமையின் வரும்வருத்தம்; திருவாசகத்தினுள் "திருவேசறவு" என்ற பகுதியின் திருப்பாட்டுக்கள் பார்க்க. |
| மிக அழிதல் - மனமிக அழிதல் - நைந்து படுதல். |
| 272 |
| 3427. (வி-ரை.) மிக நினைந்து - பலபடியாலும் அழுந்த நினைந்து. |
| மிக நினைந்து பன்னிய சொல் - பன்னுதல் - ஒரே பொருளைப்பல திறத்தாலும் அனுபவித்துச் சொல்லுதல்; "எத்தனைநாட் பிரிந்திருக்கேன் என்னாரூ ரிறைவனையே" "எவ்வணநான் பிரிந்திருக்கேன்" "எங்ஙனநான் பிரிந்திருக்கேன்" "எப்பரிசு" "என்னாக" "என்செய" "எற்றுளனாய்" என்பனவாகப் பாட்டுத் தோறும் பன்னிவரும் முடிபுகளையும், அவற்றாற் றெரியவரும் மனமழிந்த நிலையினையும் காண்க; இப்பதிகம் நம்பிகளது பதிகங்களில் வழக்கமாக வரும் பத்துப்பாட்டுக்களின் மேலும் இரண்டு பாட்டுக்கள் கொண்டு விளங்குதலும், தேவிமார் இருவர் காரணமாக வந்த வினைநிகழ்ச்சிகளின் நினைவுகொண்டு விளங்குதலும் காண்க. |
| "பத்திமையும் அடிமையையும் கைவிடுவான் என்னும் - இது பதிகத் தொடக்கமாகிய முதற்குறிப்பும், பதிகக் கருத்துமாம்; பத்திமை - அகநிலை; அடிமை - புறநிலை; கைவிடுவான் - நழுவ விடுவானாகி. |
| இசை - பதிகப்பண்ணாகிய பழம்பஞ்சுரப் பண்ணிசை. |
| இரங்கினார் - இரங்குதல் - மனமகிழ்ந்து தந்நிலைக்குத்தாமே வருந்துதல். |
| 273 |