[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்363

  காதல்மீதூரப் புலர்வார் - மீக்கொண்டெழுந்த காதல் மிகுதியினால் புலர்வாராகி; புலர்தல் - மனம் வெதும்புதல்.
  சிலநாள் போனதற்பின் - இவ்வாறு புலர்வாராய்ச் சில நாட்கள் சென்ற பின்பு.
 

313

  3468. (வி-ரை) செம்மை நெறி - சிவநெறி; தவநெறியினை வேண்டிப் பெற்று மேற்கொண்டொழுகிய நெறி.
  கொம்மை - வட்டம்; அழகு; திரட்சி(பிங்); குலவுமணம் - விளக்கம் பொருந்திய மணம்; விளக்கமாவது உலகர் யாவருமறிய நிகழும் விதிமணம்; இதனைக் கற்பியல் என அகப்பொருள் நூல்கள் பேசுவன; இது களவியல் மணத்தினின்றும் வேறாகியது என்றறிவிக்கக் குலவு என்ற அடைமொழி தந்தோதினார்; "தக்க விதி மணத்தால்"(3395) என்றதும், இறைவர் ஆணையின்படி "திருத்தொண்டரெழிற்பதியோ ருடனீண்டிக், கண்ணிறைந்த பெருஞ்சிறப்பிற் கல்லியாணம் செய்தளித்தார்"(3420) என்றதும் கருதுக. குலவும் - இறைவர் விதித்தபடி நிகழும்.
  மெய்ம்மை வார்த்தை - உண்மைகளைக் கட்டுரைப்ப என்று கூட்டுக; முன்னர்ப் பிறர்பாற்கேட்டுப், பின்னர் அதன் உண்மையினை அறியச் சிலரை அனுப்பி அவர்கள் கண்டு வந்து அஃதுண்மையே என்று கூற என்ற அளவில் விரித்துக் கொள்க; காரைக்காலம்மையார் புராண நிகழ்ச்சிகள் ஈண்டு நினைவுகூர்தற்பாலன. (1756 - 1757); பிறர்பாற் கேட்டபொருளை அவ்வாறே நம்பிவிடாமல் தாம் சிலரை ஒற்று அனுப்பி உறுதிப்படுத்திக்கொண்டு மேல் தொழில் புரிதல் வேண்டுமென்பது உலகியல் நீதிநூல்; முன் உரைத்தவையும் பார்க்க.
  மெய்ம்மை வார்த்தை - இத்துணையும் குறிக்க மெய்ம்மை என்றார். கட்டுரைத்தல் - உறுதியாகக் கூறுதல்.
  தம்மை அறியா வெகுளி - தம்மையும் அறியாது பெண்ணியல்பால் வந்த சினம்; தாமே துணிந்து நினைந்து மேற்கொண்டதன்று என்பதாம். உம்மை தொக்கது; கற்புடை மடவார் கணவர்பாற் சினத்தலாகாது என்பது நீதியாகலின் வெகுளுதல் பொருந்தாது; ஆனால் இங்கு அவரையும் அறியாமலே சினம் போந்தது என்பதாம். தம்மையும் கோபத்தையும் வேறு பிரித்தற்கரிய கோபம் என்றும் கூறுவர்.
  தரியாமையாவது - தமக்கே உரியதாகிய தம் நாயகரது இன்பம் பிறர்க்கு முரித்தாகக் கண்டு பொறுக்கலாற்றாமை.
  தளர்தல் - தரியாமை காரணமாக உடல் தளர்ச்சியுறுதல்; இதன் தன்மையினை வரும் பாட்டிலுரைப்பார்.
  கொம்மை முலை, மெய்ம்மை வார்த்தை, செம்மைநெறி - பண்புத்தொகை; விட்டார் - வினையாலணையும் பெயர்; அறியா - தரியா - ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள் (ந.சிவ.தேசிகா குறிப்பு).
 

314

  3469. (வி-ரை) மென்பூ....அமரார் - உடல்தளரும் ஏனையோர் உலகியலில் படுக்கையிற் கிடப்பர்; உறங்குவர்; உறங்கியமையால் உடல் ஓய்வு பெறும்; பின்னர்த் தளர்வு நீங்கி வலுப்பெற்றெழுவர் என்பது உடல் பற்றிய மருந்து நூல் முடிபு; இங்குத் தளர்ச்சியுற்ற பாவையார் அவ்வாறு செய்ய லாற்றாதவராயினர் என்பது சயனத்திடைத் துயிலுமேவார் என்றதன் கருத்து; துயில்பெறாவிடினும் ஓய்வு பெற்றுச் சயனத்தின்மீது அமைதியாக இருப்பினும் ஒருவாறு உடற்றளர்ச்சி நீங்கும்; மனம் புலர்ந்து உள் வெதும்பியமையால் அவ்வாறு இனிதமர்தலும் ஆற்றாராயினர் என்பது. மேவுதல் - விரும்புதல்; "நம்பும் மேவு நசையா கும்மே" (தொல்.)