368திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  தன்மையால் என்பது சுப்பராய நாயகர் உரை; நன்மை செய்கின்ற உரிமையினால் என்பது இராமநாதச் செட்டியார் குறிப்புரை.
  வெம்பும் - வெதுப்பும்; வெதும்புதல் செய்தற்கேதுவாகிய என்று பிறவினைப் பொருள் கொள்க.
  புலவிக் கடல் அழுந்தும் - புலவியைக் கடலாக உருவகித்தார், கடத்தற் கருமை பற்றி; அழுந்தும் - மிக ஆழ்ந்து வருந்தும்; கடல் என்றதற் கேற்பஅழுந்தும் என்றார்.
  மின் நேர் இடையார் - புலவி வருத்தத்தாற் மிகத் துவளுதல் குறிக்க ஈண்டு மின் என்றுவமித்தார்.
  எம்பிராட்டி - எமது தலைவி; பிராட்டி - மேன்மை குறித்தது, பெருமையும் உரிமையும் பாராட்டும் வகையால் செற்றம் தணிவித்தல் உலகியல்பு. கற்றார்கையாளும் முறைகளுள் ஒன்று; இது சாமோபாயம் எனப்படும். இது - இவ்வாறு நாயகர்பாற் பிணங்குதல்; தகுமோ? - ஓகார வினா தகாது என எதிர்மறை உணர்த்திற்று.
  பலவும் - இவ்வாறாகிய தக்க பல செய்திகளையும், மொழிகளையும்.
  எடுத்துரைப்பார் - என்பதும் பாடம்.
 

319

3474
பேத நிலைமை நீதியினாற் பின்னும் பலவுஞ் சொன்னவர்முன்
மாத ரவரு மறுத்துமனங் கொண்ட செற்ற மாற்றாராய்
"ஏத மருவு மவர் திறத்தி லிந்த மாற்ற மியம்பிலுயிர்
போதலொழியா" தெனவுரைத்தா ரவரு மஞ்சிப் புறம்போந்தார்.
 

320

  (இ-ள்) பேத நிலைமை....சொன்னவர் முன் - முன்னர்ச் சாம உபாயம்பற்றிக் கூறியவர்கள், அதன் மேல் பேத நிலைமையினை மேற் கொண்டு அந்த நீதியின் உபாயம் பற்றி மேலும் பலவாற்றானும் செற்றம் தணியுமாறு எடுத்துச்சொன்ன அம்மாந்தர்களின் முன்பு; மாதர்...மாற்றாராய் - அந்த மாதர் பரவையம்மையாரும் அக் கூற்றுக்களை மறுத்துத் தாம் மேற்கொண்ட செற்றத்தினை மாற்றாதவராகி; ஏதம்......என உரைத்தார் - தீமை பொருந்திய அவர் (நம்பிகள்) திறம்பற்றி இந்த மாற்றங்களை மேலும் சொன்னீர்களானால் எனது உயிர் போகுதல் தவறாது என்று சொன்னார்; அவரும்....போந்தார் - அவர்களும் பயந்து புறம் போயினார்கள்.
  (வி-ரை) பேதநிலைமை நீதியினால் - முன்னர்க் கூறிய சாமோபாயம் பற்றிய உரைகளை,அவ்வுபாயம் விரும்பியபடி பயன்றராமையாலே, விடுத்து, அடுத்த உபாயமாகிய பேதம் என்னும் தன்மையினை உட்கொண்ட நீதிபற்றி; இவ்வுபாயம் பற்றிச் சொல்லும் முறைகளைப் பிள்ளைத்தமிழ் நூல்களுள் அம்புலிப் பருவப் பகுதியிற் பரக்கக் காணலாம்; பேத நிலைமை நீதியினால் - ஊடலுக்குரிய ஒழுக்கத்தினால் என்பர் இராமநாதச் செட்டியார்.
  பின்னும் பலவும் - முன் சாமோபாயத்தாலுரைத்த பலவற்றின் மேலாக, இவ்வுபாயத்தைத் தொடர்ந்து மேலும் பலவாறாகிய மொழிகளையும்.
  ஏதம் மருவும் அவர் - என்பாற் றீங்கு செய்தலின் குற்றமுடைய அந் நம்பிகள்.
  உயிர் போதல் ஒழியாது - நான் உயிர் நீப்பது உறுதி என்றபடி; போதல் - தாம் வலிந்து போக்குதல் தற்கொலைப் பழியாமாதலின் அவ்வாறன்றி உயிர்தானே போய்விடுவது என்ற குறிப்பும் காண்க.
  புறம் - திருமாளிகையினை நீங்கிப் புறம்பு.
 

320