[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 30. திருமூலதேவ நாயனார் புராணமும் உரையும்481

  மேல்பாலை மலையணைய - மாலைப் பொழுது ஆகும் நேரம் வர; மேம்பாலை மலை - மேற்கு மலைகள்.
  சைவ நெறி மெய் உணர்ந்தோர் - சிவாகம உண்மைகளை நந்தி திருவருள் உபதேசத்தால் அறிந்து சிவயோகம் தமது உணர்ச்சியிற் கைவந்தவர்; சைவ நெறி மெய் - வேத சிவாகம முடிபுகளாகிய உண்மைகள்; உணர்ந்தோர் - சுய அனுபூதிகத்தில் உள்ளுறப் பெறும் நிலை வந்தவர். உணர்ந்தோர் - பின் போனார் என்று கூட்டுக.
  தாமே......ஆகி - வந்தெய்த - பசுக்கள் மேய்விடத்தினின்றும் மாலைப்போதில் தத்தம் மனைகளுக்குத் திரும்பும்போது வேறு ஒருவர் செலுத்தாமல் தாமே இடமறிந்து செல்லுமியல்பு குறிக்கத் தாமே என்றார்.
  பைய நடப்பன - வயிறு நிறைய மேய்ந்திருத்தலானும் மற்றும் தம் இயல்பானும் பசுக்கள் பைய நடப்பது அவற்றின் இயற்கை.
  கன்றை நினைந்து படர்வன - அவற்றின் நினைப்பு அவை கன்றுகளை நினைந்து அம்மா என அழைத்து நடத்தலால் காணப்படும்; சில பசுக்கள் வாளா பைய நடப்பன; மற்றும் சில கன்றை நினைந்து அழைத்துப் படர்வன; இஃதவற்றின் வாழ்க்கை யியல்பு.
  ஆக - வந்து - எய்த என்று கூட்டுக; எய்த ஊரெல்லை எய்தும் வரை என்க.
  வையநிகழ் சாத்தனூர் - உலகிற் புகழ் மிக விளங்கும் ஊர் . நிகழ் -எக்காலத்தும் நிகழ்வதாகலின் முக்காலத்துக்கும் பொருந்தும் என்று வினைத்தொகையாற் கூறினார். நிகழ்தல் - என்றும் புகழ் விளங்க இருத்தல்; புகழாவது அந்தணர் சிறப்பும் இச்சரித நிகழ்ந்த சிறப்புமாம்.
  சாத்தனூர் - பின் போனார் - பசுக்கள் அந்த ஊரினைச் சார்ந்தவை என்றும், அது சாத்தனூரென்றும் யோகியார் அறியார்; ஆனால் பசுக்களைப் பின்பற்றிச் சென்றால் அவை தாமே தமதியற்கை யறிவு கொண்டு ஊருக்குக்கொண்டு செலுத்தி விடுமென்னு மியல்புணர்ந்தா ராதலின் பின்போனார்; ‘சோவுடனே கூடிவரும் குருட்டாவு மூர்புகுதும்’ (உமாபதி சிவம்); யோகியார் அவ்வூரறியாராய் அப்போதுதான் வந்தெய்துகின்றாராதலின் அவ்வூர் என்று முன்னறி சுட்டாற் கூறாது சாத்தனூர் என்று பெயர் கூறிச் சொல்லியதுமன்றி வைநிகழ் - என அதன் சிறப்பும் கூறினார் . இது தெய்வக் கவிநயம்.
 

16

3580
போனவர்தாம் பசுக்களெலா மனைதோறும் புகநின்றார்;
மானமுடை மனையாளும் "வைகியபின் றாழ்த்தா"ரென்
றானபயத் துடன்சென்றே யவர்நின்ற வழிகண்டாள்
"ஈனமிவர்க் கடுத்த" தென மெய்தீண்ட வதற்கிசையார்,
 

17

3581
ங்கவளு மக்களுட னருஞ்சுற்ற மில்லாதாள்
தங்கிவெரு வுறமயங்கி "யென்செய்தீர்?"எனத்தளர
"இங்குனக்கென் னுடனணைவொன் றில்லை" யென வெதிர்மறுத்துப்
பொங்குதவத் தோராங்கோர் பொதுமடத்தி னுட்புகுந்தார்.
 

18

  3580. (இ-ள்) போனவர்தாம்....நின்றார் - முன்கூறியவாறு பசுக்களின் பின் போன திருமூலர் பசுக்கள் எல்லாம் அவ்வவற்றின் மனைகள்தோறும் புக அவ்வெல்லை யளவில் நின்றனர்; மானமுடை.....கண்டாள் - பெருமையுடைய அவ்