சிவமயம்

35. சிறப்புலி நாயனார் புராணம்

தொகை

"சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கு மடியேன்"

(6)

- திருத்தொண்டத் தொகை

வகை

"புவனியிற் பூதியுஞ் சாதன மும்பொலி வார்ந்துவந்த
தவநிய மர்க்குச் சிறப்புச்செய் தத்துவ காரணனாம்
அவனியிற் கீர்த்தித்தென் னாக்கூ ரதிப னருமறையோன்
சிவனிய மந்தலை நின்றதொல் சீர்நஞ் சிறப்புலியே"

(42)

- திருத்தொண்டர் திருவந்தாதி

விரி

3654
பொன்னிநீர் நாட்டி னீடும் பொற்பதி புவனத் துள்ளோர்
"இன்மையா லிரந்து சென்றோர்க் கில்லையென் னாதே யீயுங்
தன்மையா" ரென்று நன்மை சார்ந்தவே தியரைச் சண்பை
மன்னனா ரருளிச் செய்த மறைத்திரு வாக்கூ ராக்கூர்

1

புராணம்: - இனி, நிறுத்த முறையானே ஏழாவது, வார்கொண்ட வன முலையாள் சருக்கத்தில், இரண்டாவதாகச் சிறப்புலி நாயனார் புராணங் கூற த் தொடங்குகின்றார் ஆசிரியர்; சிறப்புலி நாயனாரது சரித வரலாறும் பண்பும் கூறும் பகுதி.
தொகை: - சிறப்பினைக்கொண்ட புகழையுடைய வள்ளலாகிய சிறப்புலி நாயனாருக்கும் நான் அடியேனாவேன்.
சீர்கொண்ட - சீர் - சிறப்பு; சீராவது சிவனடியாரை வழிபட்டு வேண்டுவன நல்கும் பதிபுண்ணியச் சிறப்பு; "தவநியமர்க்குச் சிறப்புச் செய் தத்துவன்" (வகை); புகழ் வள்ளல் - "இரப்பார்க்கொன், றீவார்மே னிற்கும் புகழ்" (குறள்) என்றபடி இரப்போர்க் கில்லையென்னாது ஈயும் கொடைத் தன்மையால் வள்ளல் எனப் பெற்றவர். இது பசு புண்ணியம்; "அவனியிற் கீர்த்தி" (வகை); இவற்றை ஆசிரியர் இம்முறையே (3657 - 3658) பின்னர் விரித்தல் காண்க. சிறப்புலி - நாயனார் பெயர்; உம்மை முன் துதிக்கப்பட்டோர்களுடன் இவருக்கும் என இறந்தது தழுவிய எச்சவும்மை எண்ணும்மையுமாம்.
வகை: - புவனியில்....காரணனாம் - இவ்வுலகத்திலே திருநீறும் அக்கமணியும் விளங்க வணிந்து வந்த மாதவ நியமமுடைய அடியார்களுக்குச் சிறப்புச் செய்