| |
| அதனால் காலத்தாழ்வு முதலியனவும் நேர்ந்து அடியார் திருவமுது செய்ய இடையூறாம் என்பது மறைவிற் கொண்டு வினைசெய்யச் சென்றதன் கருத்து, எவ்வாற்றானும் மகனது உடம்பினைத் திருவமுதுக்கு விரைவில் ஆக்க வேண்டுமென்பது ஆர்வம்; பின்னர்ப் பிள்ளை பிழைத்து ஓடிவந்தபோதும் அதற்காக மகிழாது "திருத்தொண்டர் உண்ணப்பெற்றோம் எனும் பொலிவால்" மகிழ்ந்தார் (3741) என்னும் கருத்தினை இங்கு வைத்துக் காண்க. |
| செழுங் கலங்கள் - இறைச்சி முதலிய வகைகளை ஏற்கத்தக்க நல்ல கொள்கலங்கள்; பாத்திரங்கள்; செம்மை - செம்பொன் - வெண்பொன் முதலிய உயர்ந்த உலோகங்களால் இயலுதல். தூயனவாதல். |
| நன்று கழுவி - திருவமுதுக்கு உரிய பண்டங்களை வைக்கும் கலங்கள் நன்கு கழுவித் தூய்மை செய்யப் பட்டிருத்தல் வேண்டும். இன்றேல் மாசுபடிந்தும் களிம்பு முதலிய குற்றங்கள் சேர்ந்தும் திருவமுது பழுதுபட்டு விடத்தன்மையடையும் என்பது மருத்துவநூல் பாகநூல்களின் உண்மைகள்; சரிதம் செல்லும் நிலையில் இவ்வுலகியலின் போதனைகளையும் கூறிச் செல்லுதல் உயர்ந்த கவிமாண்பு. "நீரிற் சேற்றினை யலம்பி யூற்றி" (458), "கறிக ளாய்ந்து புனலிடைக் கழுவத் தக்க புனித பாத்திரத்து" (461) என்பன முதலியவை காண்க. |
| நல்ல மகனை - நன்மை - இறைவர்க்குத் திருவமுதாக்க உதவும் தன்மையும், பெற்றோர்கள் கொண்ட அடியார்க் கமுதூட்டும் விரதங் குலையாமற் காத்து மேனிலை எய்த உதவும் தன்மையும், ஆளுடைய பிள்ளையார் திருவாக்கில் வந்த பெருந்தன்மையும், பிறவுமாம். "சீராள தெவரெனுந் திருமைந்தர்" (3676); பெற்றோர்க்குப் பேறுதர வரும் மகனே நல்ல மகன் எனப்படுவது உலகியலியல்புமாம். "சீராளன்" (தேவா). |
| உலகை வென்ற தாதையார் - உலகு - உலகியலிற் றிணிந்த புத்திர வாஞ்சை என்னும் கடத்தற்கரிய காதல்; தசரதன் சரிதம் முதலியவை இங்கு நினைவு கூர்தற் பாலன. "உருநாட்டுஞ் செயல் காமனொழிய" (3660) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க. "அடியேனுக் கிதுவு மரிதன்று" (3711) எனத் துணிவு கொண்டபோதே அவ்வெற்றி போந்ததாதலின் வென்ற என இறந்த காலத்தாற் கூறினார். அரியவினை முதலிய ஏனைப் பின்னிகழ்ச்சிகள் அதன் பயனாகப் போந்தனவேயாம். |
| தலையைப் பிடிக்க -அரிய வினைக்கு முதற்கண் செய்யும் வினை இதுவாம். |
| மெய்த்தாயர் - இடுக்கி - பிடிக்க - என மேல்வரும் பாட்டுடன் கூட்டுக. |
| 62 |
| 3722. (வி-ரை) மழலைக் கிங்கிணி - மழலை - மகார்களின் சொற்போல ஒலிக்கும் என்ற பொருளில் வந்தது. மதலை - (கிங்கிணிக்) கால் என்பது பாடமாயின் (மதலை - மகன்) மதலையின் கால் என்க. மதலை - தூண்; தூண்போலக் குலத்தைத் தாங்குதலின் மகனுக்கு வரும்; ஆகுபெயர்; |
| மடியின் புடை இடுக்கி - மடியின் இடையே மகனது இரண்டு கால்களையும் பிறழாமல் இடுக்கிக் கொண்டு; இடுக்குதல் - இருபிடிப்புட்படுத்தி அமிழ்த்திவைத்தல். காதலன் - (காதல் விருப்பம்). ஈண்டு மகன் என்ற பொருளில் வந்தது. |
| கையால் - தமது கையினாலே; காலினை இடுக்குதலும் கைகளிரண்டினையும் பிடித்துக் கொள்ளுதலும், தலையை அரியவினை செய்தற்கண் உடல் பிறழ்ந்து அவ்வினைக்கு இடையூறு விளைக்கா வண்ணம் செய்யும் எச்சரிக்கைத் தொழில்கள். கருவியினா லறுத்தல் செய்யும் மருத்துவர் இவ்வாறு உடல் அசையாமல் முன்னர்ச் செய்துகொள்ளும் எச்சரிக்கைச் செயல்களாதல் காண்க. |