66திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

பொருளினை - என்பதும் பாடம். தாருகன் வதமும், காமனை எரித்ததும் குறிக்கப்பட்டன. கரும்புனை - மிகப் பசிய புன்னை மரங்கள். புன்னை - புனை என வந்தது இடைக்குறை; புனை...காட்டும் - தன்மை யணியினை உள்ளுறுத்த உருவகம். முத்து - முத்துப்போன்ற மொட்டு; பொன் - தாது; பவளம். பூவின் உள்ளிருக்கும் செவ்விய இளங்கொட்டை; "பொன்னவிழ்ப்பனமலர்ப் புன்னை" (1113);-(10) முன்னாள் - அயன் - வழிபாடு செய்ய இருந்த - தலவரலாறு குறித்தது; கண் - கணுக்கள்;- (11) காமரம் - சீகா மரப்பண். நிறைநீர் - முன் கூறியவை எல்லாம் நீர்ச் சிறப்புப் பற்றியன என்று முடித்துக் காட்டியவாறு. இச்சிறப்பு வெள்ளக் காலத்தில் இன்றும் காணவுள்ளது; நண்பு - சிவன் பாலன்பு என்ற பொருளில் நின்றது; சிவனே எஞ்ஞான்றும் உயிர்களுக்கு நண்பு செய்து எடுப்பவன் என்றறிந்து, என்றும் ஏனை நட்புக்கள் எல்லாம் அழியத் தக்கன என்பதும் கண்டு என்றும் அந்நண்பினையே பிடித்து அவ்வழிபாட்டிற் சிறந்த என்க. "மாதொரு பாகனார்க்கு..மேம்படு சடையனார்" (149); நண்புடைய என்றதனை இசை ஞானி ஆரூரன் என்பவற்றுடனும் கூட்டுக. இங்கு நம்பிகள் தமது தந்தை, தாய், வயது (சிறுவன்), ஊர், பேர், பண்பு முதலிய எல்லாம் ஒருசேரப் பெறவைத்த சிறப்புக் காண்க. பண்பயிலும் - இறைவனது பண்பும் அவன் வெளிப்பட இருக்கும் பதியின் பண்பும் பலவாறு பயிலக்காட்டும்.
தலவிசேடம் :- திருக்கலயநல்லூர் - காவிரித் தென்கரை 68-வது பதி; இப்போது சாக்கோட்டை என வழங்கப்படுகின்றது; உயிர்களை அடைத்த கலயம் (கும்பம் - குடம்) நீர்ப் பெருக்கு ஊழியில் தங்கிய இடமாதலின் இப்பெயர் பெற்ற தென்பர்; நீர்வளமுள்ள அரிசிலாற்றின் தென்கரையில் உள்ள தென்பது பலபடியாலும் பதிகத்துப் பாராட்டப்பட்ட பெருமையுடையது; பதிகத்துள் இறைவரது அருளிப்பாடாகிய மெய்ம்மைப் புராணம் பலவும் விரிவாய்ப் பதிகப்பாட்டுக்களிற் போற்றப்பட்ட பெருமையும் மறையவர்கள் வாழும்பதி என்பதும் பதிகத்துப் பாராட்டப்பட்ட பெருமையும் உடையது. சுவாமி - அமிர்தகலாநாதர்; அம்மை - அமிர்தவல்லி - பதிகம்;
இது கும்பகோணம் நிலையத்துக்குத் தெற்கே நீடா மங்கலம் கற்சாலை வழியில் 2 நாழிகையில் அரிசிலாற்றின் தென் கரையில் உள்ளது.
குறிப்பு :- பூசையின் பொருட்டு அரி (விட்டுணு) சொல்லின் வழி வந்தமையால் அரி சொல் ஆறு எனப் பெயர் பெற்றதென்றும் இப்போது மருவி அரிசிலாறு என வழங்குவதென்றும் கூறுப.
3222
ங்கு நின்று திருக்குடமூக் கணைந்து பணிந்து பாடிப்போய்,
மங்கை பாகர் வலஞ்சுழியை மருவிப் பெருகு மன்புருகத்
தங்குகாத லுடன்வணங்கித் தமிழாற் பரசி, யரசினுக்குத்
திங்கண் முடியா ரடியளித்த திருநல் லூரைச் சென்றணைந்தார்.

68

(இ-ள்.) அங்கு...போய் - அப்பதியினின்றும் திருக்குட முக்கினை அணைந்து வணங்கித் திருப்பதிகம் பாடிச் சென்று; மங்கை...பரசி உமைபாகராகிய இறைவரது திருவலஞ் சுழியினைச் சார்ந்து, பெருகும் அன்பு உள்ளத்தினை உருகச் செய்ய நிரம்பிய பெரு விருப்பத்துடன் வணங்கித் தமிழ்ப் பதிகத்தினாலே போற்றி செய்து; அரசினுக்கு...சென்றணைந்தார் - மதியினைச் சடையில் அணிந்த பெருமானார் திருநாவுக்கரசருக்குத் திருவடியினைத் சூட்டியருளிய திருநல்லூரினைச் சென்று சேர்ந்தருளினர்.