இருளாரு மணிகண்ட னடியார்க்கின் னமுதாக்கப் பொருளாய மெய்துதற்குப் புகழ்க்குடந்தை யம்பலத்தே உருளாயச் சூதாடி யுறும் பொருள்வென் றனநம்பர் அருளாக வேகொண்டங் கமுதுசெய்வித் தின்புறுவார், | 8 | (இ-ள்) இருளாரும்..அமுதாக்க - நீலம் நிறைந்த அழகிய கண்டத்தினை உடைய சிவபெருமானுடைய அடியவர்களுக்கு இனிய திருவமுது அளிப்பதற்காக; பொருள் ஆயம் எய்துதற்கு - பொருளீட்டம் பொருந்துதற்கு; புகழ்....சூதாடி - புகழினை உடைய திருக்குடைந்தைப் பொதுவிடத்திலே உருளும் கருவியினால் சூதாடி; உறும்....கொண்டு - அதனால் வரும் பொருள்கள் வெற்றி பெற்றனவற்றை இறைவரது திருவருளாகவே மதித்து; அங்கு...உறுவார் - அங்கு அடியார்க்கு அமுது செய்வித்து இன்பமடைவாராகி, (வி-ரை) இருள் - இங்குக் கருமை - நீல நிறம் குறித்தது. மணிகண்டர்க்கும் அடியார்க்கும் - என உம்மை விரித்துரைத்தலுமாம்; என்னை? அடியவர்க்குள் நின்று சிவனே உண்கின்றார் என்பது சிவாகம ஆனையாதலின்; "நடமாடுங் கோயி னம்பர்க்கொன் றீயிற், படமாடக் கோயிற் பரமர்க்கங்காமே". பொருள் ஆயம் - ஆயம் - பெருக்கு; ஈட்டம். பொருளாயம் - பொருள் வருவாய்; (பொருளும் பொருள் வருவாயும்); உம்மைத்தொகை; ஆயம் - வடமொழித்திரிபென்பர் பரிமேலழகர்; ஆயம் - ஆதாயம்; உருளாயம் - உருளுகின்ற பாச்சிகையினாற் சூதை ஆடி; "உருளும் கவற்றின்கட்பட்ட ஆயம்; கவற்றினது உருட்சியை அதனினாய ஆயத்தின்மேல் ஏற்றி.....கூறினார்" (பரிமே). அம்பலம் - ஊர்ப் பொதுவிடம்; பலர் கூடும் பொது இடம்; பொதியில்; மன்றமும் பொதியினும்" (முருகு); புகழ் - சூதாட்டத்தினும் பெயர் பெற்ற என்ற குறிப்புமாம். சூதாடும் பொதுவிடங்களும் அந்நாளில் வெளிப்படையாய் அமைந்திருந்தன போலும்; இந்நாளிலும் அவை வழிவழி வேறு வேறு உருவங்களுள் மறைந்து விளங்குதல் கண்டுகொள்ளத் தக்கது. உருள் ஆயச் சூது ஆடி - ஆயம் - சூதாடு கருவி; வல் - என்பர்; உருள் ஆய் - ஆயத்தினை உருட்டி ஆடுதல் சூதின் வகை; "உருளாய மோவது கூறிற் பொருளாயம், போஒய்ப் புறமேபடும்" (குறள்). வென்றன உறும் பொருள் - வென்றனவாகப் பெறும் பொருள்கள் எல்லாம்; அருள் - அருளால் வந்த பொருளை அருள் என்றது உபசாரம். நம்பர் அருளாகவே - சிவனருட்பிரசாதமாகவே; சிவன் அருளிய பொருளாக; ஏகாரம் தம் முயற்சியாற் செய் சூதான் வந்ததென்பதன்றிச் சிவன் தந்ததாகவே எனப் பிரிநிலை; தேற்றமென்பதுமாம். அமுது செய்வித்து இன்புறுவார் - அமுது செய்வித்து அதனைக் கண்டு தாம் மகிழ்வார்; இன்புறுவார் - முற்றெச்சம், வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க. அம்பலம் - சூதாடு களங் குறித்தது. "கழகத்துக் காலை புகின்" (குறள்). |
|
|