காலை யெழும்பல் கலையினொலி களிற்றுக் கன்று வடிக்குமொலி சோலை யெழுமென் சுரும்பினொலி துரகச் செருக்காற் சுலவுமொலி பாலை விபஞ்சி பயிலுமொலி பாட லாடன் முழவினொலி வேலை யொலியை விழுங்கியெழ விளங்கி யோங்கும்வியப்பினதால். | 2 | (இ-ள்) காலை...கலையினொலி - காலையிலே பயிலப்படும் வேதம் முதலிய கலைகளின் ஒலியும்; களிற்று....வடிக்குமொலி - யானைக் கன்றுகளின் பிளிற்றின் ஒலியும்; சோலை....சுரும்பினொலி - சோலைகளினின்றும் எழுகின்ற மெல்லிய வண்டுகள் பண் பாடும் ஒலியும்; துரக...சுலவுமொலி குதிரைகளின் செருக்கினாலே கனைத்துச் சுழலும் ஒலியும்; பாலை...ஒலி - பாலை விபஞ்சியாழ் பயிலும் ஒலியும்; பாடல்...ஒலி - பாடல்கள் ஆடல்களுக்கிசைய முழக்கப்படும் முழவின் ஒலியும்; வேலை...வியப்பினதால் - (அங்கு மிகும்) கடலின் ஒலியினையும் கீழ்ப்படுத்தி மேல் எழுந்து விளக்கம் பொருந்தி மேலோங்கும் வியப்பை யுடையது (அப்பதிதான்.) (வி-ரை) அப்பதி - வியப்பினது - என்று எழுவாய் முன் பாட்டினின்றும் வருவிக்க. காலை எழும் பல்கலையின் ஒலி - கலைகளின் பயிற்சிக்கு உரிய காலம் அதிகாலை என்பவாதலின் காலை எழும் என்றார்; பல்கலை - வேதமும் கலைஞானங்களும். “கலை ஒலியால் துயிலெழுவ தன்றிக் கோழியின் எழாது எம்ஊர்Ó (பரிபா.) வடிக்குமொலி - வடிக்கும் - திருந்திய - சிறந்த; வசமாக்கப் பழகும் என்பாரு முண்டு; யானைகள் புறநகரில் உள்ளனவாதலால் அவற்றின் கன்றுகள் நகரில் இருத்தல் கூறினார். துரகச் செருக்காற் சுலவும் ஒலி - துரகம் - குதிரை; செருக்கு - மிக்க களிப்பு; மிகுந்த வலிமையும், அவ்வன்மையினைச் செலுத்துதற்கு இடம் பெறாமை கருதிக் கனைத்தலும் மேம்பாடும் குறித்தது. சுலவுதல் - இக்குதிரைப் பந்தியின் ஓர் குதிரையினையே பின்னர் இந்நாயனார் மேல்கொண்டு கயிலையினை அடைந்த சரிதக் குறிப்பும் காண்க. பாலை விபஞ்சி - பாலை விபஞ்சி யாழ் முதலிய வகைகள்; பாலை ஏழுவகையாய் 103 பேதங்களுடையது; இவற்றின் விரிவு இசை நூல்களுட் காண்க. விபஞ்சி என்பது யாழ் - வீணை - பண் என்ற பொதுப் பொருளில் வந்தது; பாலை - யாழினைக்கூறியது கடலினின்றும் கொள்ளப்பட்டுத் திருந்திய நிலனும் குறிஞ்சியும் முல்லையும் மயங்க நிற்கும் முறைமை பற்றிப் போலும் என்பதும் கருதப்படும். இது பற்றி விறன்மிண்ட நாயனார் புராணத்துள் (491- 492) உரைத்தவை பார்க்க; இனி விபஞ்சி - குறிஞ்சி யாழ்த்திறத் தொன்றெனக் கொண்டு (பிங்கலம்) பாலை யாழும் குறிஞ்சித் திணைக்கேற்ற குறிஞ்சி யாழும் என எண்ணும்மை விரித்துரைத்தலுமாம். பாலை - குறிஞ்சி - யிரண்டற்கும் யானை கருப்பொருளாதல் பற்றிக் களிற்றுக்கன்று வடிக்கும் ஒலி என்று முன்கூறிய குறிப்பும் காண்க. வேலை ஒலி - வேலை இந்நகரினைச் சூழ்ந்த மேல்கடல்; “மலைக்குநிக ரொப்பன வன்றிரைகள் வலித்தெற்றி முழங்கி வலம்புரி கொண், டலைக்குங் கடலங் கரைமேன் மகோதை யணியார்பொழி லஞ்சைக்களம்” (தேவா); ஒலி - ஒலியினையும்; உயர்வு சிறப்பும்மை தொக்கது; இக்கடல் ஒலியின் மிகுதிபற்றி தேவாரத்துட் காண்க. விளங்கிப் பொங்கும் - என்பதும் பாடம். |
|
|