மிக்க செல்வ மனைகடொறும் விழையு மின்பம் விளங்குவன; பக்க நெருங்கு சாலைதொறும் பயில்சட் டறங்கள் பல்குவன; தக்க வன்பர் மடங்கடொறுஞ் சைவ மெய்ம்மை சாற்றுவன; தொக்க வளங்கொ ளிடங்கடொறு மடங்க நிதியந் துவன்றுவன. | 3 | (இ-ள்)மிக்க...விளங்குவன - செல்வமிக்க வீடுகள் தோறும் விழைகின்ற இல்லற இன்பங்கள் விளக்கம் பொருந்தியன; பக்கம்....பல்குவன - மனைகளின் பக்கங்களில் நெருங்கிய சாலைகள் தோறும் செய்யப்படுகின்ற செப்பமாகிய அறங்கள் பெருகுவன; தக்க...சாற்றுவன - தகுந்த அன்பர்கள் வாழும் திருமடங்கள் தோறும் சைவத்தின் உண்மைப் பொருள்கள் எடுத்துக் கூறப்படுவன; தொக்க...துவன்றுவன - தொகுதியாகக் கூடிய வளங்களைத் தம்மிடத்துக் கொள்கின்ற இடங்கள் தோறும் நிறம்பிய நிதியங்கள் தோன்றுவன. (வி-ரை) இன்பம் - அறங்கள் - சைவமெய்ம்மை - நிதியம் - இப்பாட்டில் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள் நான்கும் அந்நாட்டின் விளங்கும் நிலையினைக் கூறிய கவிநலம் கண்டு கொள்க; நிதியம் - பொருள்; சைவமெய்ம்மை - வீடு. இன்பம் - அறம் - (வீடு) சைவமெய்ம்மை - பொருள் என்று இம்முறையில் வைத்தார். உயிர்கள் எல்லாம் விழைவதும் விழையத் தக்கதும் இன்பமே யாதலின் அது முதற்கண் வைக்கப்பட்டது. அவ்வின்பந்தானும் அறத்தின் வழி வருதலும் துய்த்தலும் படுவதாதலின் அறம் அதனை அடுத்து வைக்கப்பட்டது; “அறத்தான் வருவதே இன்பம்” (குறள்); அழியா இன்பமாகிய பேரின்ப வீடு அதன்பின் வரும் முறைபற்றி அதனை அடுத்துக் கூறினார்; “முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னான் முடியும்” “நடுவண தெய்த விருதலையும் எய்தும்” என்றபடி அறத்திற்கும் இன்பத்துக்கும் வீடுகாட்டும் திருமடங்களுக்கும் ஒரு வகையால் சாதனமாய் நிற்பது பொருள் என்ப வாதலின் காரிய காரண முறையால் இறுதிக்கண் வைத்துக் கூறினார்; அன்றியும், இங்கு நகரச் சிறப்பாகிய நகர வளங் கூறுதலே முறையும் கருத்துமாதலின் அம்முறை பற்றி முடித்துக் கூறும் வகையால் தொக்கவளங்கொள் என்று இறுதியில் வைத்த கருத்துமாம். இடங்கள் - முன்கூறிய மூவகையிடங்களையும் குறிப்பாலுணர்த்துதலும் காண்க. இவ்வாறன்றி, இதனை அடிமாற்றும் ஓர் பொருள் கோளாய் நின்றதென்று கொண்டு அதற்கேற்ப அடிகளை மாற்றிப் பொருள் கொண்டனர் ஆறுமுகத் தம்பிரானார். அடிமறி மண்டில ஆசிரியமுமாம். செல்வ மனைகள் - செல்வம் - அறத்தாற்றின் ஈட்டப்பட்டதாய் வருவது. “தம் பொருள் என்ப தம்மக்கள்” (குறள்) என்றபடி, செல்வம் - நன்மக்களுடைமை என்றலுமாம். தொறு - இடம் காலங்களின் இடையீடின்மை தரும் இடைச்சொல். விழையும் இன்பம் - விழைதல் - விரும்புதல்; விரும்பத்தக்க என்றபடி; நூல்களுள் விதித்தவாறே அமைந்தொழுகித் துய்க்கப்படும் நிலை குறித்தது. விளங்குவன - இன்பம் மனநிகழ்ச்சி யாதலின் அது புறத்தும் காணப்படும்படி உள்ள அடையாளங்கள் வெளிப்படுவன. பக்கம் - மனைகளின் பக்கமும், நகரின் பக்கமும்; சாலை - அறச்சாலைகள். சட்டறங்கள் - செப்பமாகிய அறங்கள்; சட்ட அறங்கள் என்றது சட்டறங்கள் என நின்றது; சட்ட என்பது “செப்பப் பொருட்டாயதோர் அகரவீற் றிடைச் சொல்” என்று “சட்ட வினியுளது சத்தே காண்” (போதம். 9 - 2) என்ற விடத்துரைத்தனர் எமது மாதவச் சிவஞான முனிவர். பயிலுதல் - வழங்குதல்; பல்குதல் - மிகுதல். “சட்டவிக் கதவம்”, “சட்டகலை யெட்டு”, “சட்ட நேர்பட”. அன்பர் - சிவன்பா லன்புடைய அடியார்கள்; அன்பர்கள் வாழும் இடங்களே மடங்கள் எனப்படும். சைவ மெய்ம்மை சாற்றுவன - மெய்ம்மைகள் சாற்றப்படுவன என்று பிறவினையாகப் பொருள் கொள்க. சாற்றுதலாவது விதிவழி உபதேசித்தலும், ஒழுக்கத்தால் அறிவித்தலுமாம். சைவநெறியே வீட்டு நெறியைக் காட்டவல்ல தென்பது முடித்துக் காட்டப்பட்டவாறு காண்க. “வீடு காட் டுந்நெறி, மண்ணுலாவுந் நெறி” (பிள் - தேவா - கொல்லி - திருந்து தேவன்குடி - 5) நகரச் சிறப்புக் கூறுமாற்றால் சைவத்தின் மேனிலை காட்டுவது உட்குறிப்பு; “கருத்தின் பயனா மெழுத்தஞ்சும்...வேதப்பயனாம் சைவமும்போல்” (1214) என்று இவ்வாறே உவமை முகத்தால் நகரச்சிறப்பினைக் கூறும் வகையால் சைவச் சிறப்புக் கூறிய திறம் இங்கு நினைவு கூர்தற்பாலது. விளங்குவன - பல்குவன - சாற்றுவன போல இடங்கடொறும் நிதியம் துவன்றுவன என்றலுமாம். தொக்கவளங் கொள் இடங்கள் - தொகுதியாகச் செறிந்த வளங்களைச் சேமித்து கொண்ட வைப்பு இடங்கள். வளங்கள் - விளைபொருள்கள்; நிதியம் - அவற்றாற் பெற்ற மணி, பொன், வெள்ளி முதலியவை. அடங்க - நிறைய; துவன்றுவன - விளங்குவன. தோன்றுவன. விளையும் இன்பம் - பயினெட்டறங்கள் - பயிலுவன - அணிசெய் மடங்கள் - சைவமேன்மை - என்பனவும் பாடங்கள். |
|
|