ஒக்க வமுது செய்தருள வுயர்ந்த தவத்துப் பரவையார் மிக்க விருப்பா லமுதுசெய்வித் தருளி மேவும் பரிசனங்கள் தக்க வகையா லறுசுவையுந் தாம்வேண் டியவா றினிதருந்தத், தொக்க மகிழ்ச்சி களிசிறப்பத் தூய விருந்தின் கடன் முடித்தார். | 76 | (இ-ள்) ஒக்க.....செய்வித்தருளி - முன்கூறியபடி சேரர் பெருமான் இசைந்தருளவே, நம்பிகளும் சேரலனாரும் ஒக்க ஒருங்குடனிருந்து திருஅமுது செய்தருள உயர்வாகிய தவத்தினையுடைய பரவையார் மிகுந்த விருப்பினாலே அமுது செய்வித் தருளி; மேவும்....களி சிறப்ப - பொருந்திய பரிசனங்கள் தகுந்த வகையினாலே அறுசுவைப்பட்ட உணவினைத் தாந்தாம் வேண்டியபடியே இனிதின் உண்ணவும் கூடிய பெருமகிழ்ச்சி களிசிறந் தோங்க; தூய....முடித்தார் - தூய்மை யாகிய விருந்தளிக்கும் கடமையை இனிது ஆற்றி முடித்தனர். (வி-ரை) ஒக்க அமுது செய்தருள - நம்பிகள் வேண்டியவாறு சேரலனார் இசைந்தமையாலே அவ்வாறே ஒருங்கு உடனிருந்து உண்ண; ஒக்க - உடனிருந்து. உயர்ந்த தவத்துப் பரவையார் - பரவையாரது முன்னைநிலைத் திருக்கயிலைத் திருத்தொண்டும், இங்குத் திருவாரூரில் முன்செய்த திருத்தொண்டும் கூடிய பயனாக இவ்வமுதளிக்கும் பேறு பெற்றனர் என்பது. “செய்தவத்தால்Ó (3821) என முன் நம்பிகள் கூறிய கருத்து. அமுது செய்தருளச் - செய்வித்தருளி - என்று கூட்டுக. விருந்தின் கடன் - விருந்து ஓம்புதலாகிய கடமைப்பாடு. செய்வித்தருளி - அமுது சமைத்தளிக்கும் பரிசனங்கள் முதலிய பிறராலும் வேண்டப்படும் பணிகளும் குறிக்கப் பிரிவினையாற் கூறினார். தாம் வேண்டியவாறு - தாந்தாம் வேண்டியபடியே. பரவையார் விரும்பி அமைத்தவாறே என்ற குறிப்புந் தருவது. அமுது செய்வித்தருளிக் களி சிறப்பக் கடன் முடித்தார் - என்க. விருந்தின் கடன் - இல்வாழ்க்கைக்குரிய கடன்களில் சிறந்தது விருந்தோம்பலாதலின் கடன் என்றார். சிவன்பா லன்பினால் சிவனடியராந் தன்மையினை மேலாகக் (3820) கொண்டு செய்வித்தமையால் தூய என்றார்; ஏனை யோர்பாற் செய்யும் விருந்தின் கடன் எல்லாம் பாசம் பற்றியனவாய் நின்று பிறவியறுக்கத் துணைசெய்ய மாட்டாமையின் தூயவாகா என்பது. தொக்க மகிழ்ச்சி களிசிறப்ப - களிப்பு - உணர்ச்சி யிழக்காத பேருவகை; மகிழ்ச்சி - உணர்ச்சியு மழிந்த உவகை; இவ்வேறுபாடு “உள்ளக் களித்தலுங் காண மகிழ்தலும்Ó (குறள்) என்ற விடத்துக் “களித்தல் - உணர்வழியாதது; மகிழ்தல் -அஃதழிந்ததுÓ என்று பரிமேலழகர் உரைத்தவாற்றா னுணர்க. இவ்விரு தன்மைகளும் பரவையார்பால் ஒருங்குட னிகழ்ந்தன என்பார் உடன் சேர்த்துக் கூறினார்; நம்பிகளையும் சேரலனாரையும் ஒருங்கே யமுது செய்விக்க நின்ற பேறாகிய தவம் பற்றித் தொக்க மகிழ்ச்சியும், பரிசனங்கள் தாம் வேண்டியவா றினிதருந்தக் காண்டலின் களிசிறத்தலும் உளவாயின என நிரனிரையாகக் கொள்க. இவ்வேறுபாடு அவ்வவற்றின் நிலைபற்றி எழுந்த தென்பதாம். அமுது செய்வித் தருளின் - என்பதும் பாடம். |
|
|