ஓத மலிநீர் விடமுண்டா ரடியார் வேட மென்றுணரா மாத ரார்கை தடிந்தகலிக் கம்பர் மலர்ச்சே வடிவணங்கிப் பூத நாதர் திருத்தொண்டு புரிந்து புவனங் களிற்பொலிந்த காத லன்பர் கலிநீதி யார்தம் பெருமை கட்டுரைப்பாம். | 10 | (இ-ள்) ஓதமலி.....உணரா - குளிர்ந்த நிறைந்த நீரையுடைய கடலின் எழுந்த விடத்தினையுண் டருளிய இறைவரது அடியாரின் திருவேடம் இஃது என்றுணராத; மாதரார்....வணங்கி - மனைவியாரது கையினைத் தடிந்த கலிக்கம்ப நாயனாரது மலர் போன்ற பாதங்களை வணங்கி, அத்துணையாலே; பூத....புரிந்து - பூதங்களுக்கு நாதராகிய சிவபெருமானது திருத்தொண்டு செய்து; புவனங்களில்.....கட்டுரைப் பாம் - எல்லா உலகங்களிலும் விளங்கிய பெருவிருப்பமுடைய அன்பராகிய கலிநீதி நாயனாரது பெருமையினை எடுத்துச் சொல்வோம். (வி-ரை) இது கவிக்கூற்று. ஆசிரியர் தமது மரபுப்படி இதுவரை கூறிவந்த சரிதத்தை முடித்துக்காட்டி, மேற் கூறப்புகும் சரிதத்துக்குத் தோற்றுவாய் செய்கின்றார். அடியார் வேடமென் றுணரா மாதரார் - இஃது சிவன் அடியார் திருவேடம் (முன்னைநிலத் தம் ஏவலாளன் வேடமன்று) என்றுணராமையே இச்சரித மெழுந்த நுட்பம். அதனை வடித்தெடுத்துக் கூறி முடித்தவாறு; உணரா மாதரார் - உணராமையினால் என்று காரணப் பொருள்தர உடம்பொடு புணர்த்தி ஓதினார். கைதடிந்த - தொகைநூற் சொற்பொருள் விரித்து எடுத்தாண்டபடி. பூதம் - சிவபூதம்; சிவகணங்கள். காதலன்பர் - சிவன்பாலாகிய பெருவிருப்பம் சிறந்தவர். புவனங்களிற் பொலிந்த - கலிநீதியார் செய்த திருவிளக்குத் திருத்தொண்டு மும்மைப் புவனங்களையும் பொலிவுறுத்தி விளங்கியது என்பது. “பொற்புடைய சிவபுரியிற் பொலிந்திருக்கÓ (4037) என்று இவரது வீடுபேற்றினிலை கூறுதல் காண்க. |
|
|