பாடல் எண் :3863

மன்னுதிருக் கானப்பேர் வளம்பதியில் வந்தெய்திச்
சென்னிவளர் மதியணிந்தார் செழுங்கோயில் வலங்கொண்டு
முன்னிறைஞ்சி யுள்ளணைந்து முதல்வர்சே வடிதாழ்ந்து
பன்னுசெழுந் தமிழ்மாலை பாடினார் பரவினார்.
116
(இ-ள்) மன்னு...எய்தி - நிலைபெற்ற திருக்கானப்பேர் என்னும் வளம்பதியில் வந்து சேர்ந்து; சென்னிவளர்...உள்ளணைந்து - தலையிலே வளர்கின்ற பிறையினை அணிந்த இறைவரது செழுங்கோயிலினை வலமாகச் சுற்றி வந்து அதன் முன்பு வணங்கி உள்ளே அணைந்து; முதல்வர்...பரவினார் - முதல்வனாரது சேவடிகளில் வீழ்ந்து வணங்கிப் பன்னுகின்ற செழுந்தமிழ் மாலையினைப் பாடித்துதித்தனர்.
(வி-ரை) பதியில் வந்து எய்தி - என்றதனால் இப் பதிகம் பதியின் புறத்தே வருதற்முன் வழியிற் பாடியருளியதென்பது கருதப்பட்டது.
முன் - திருக்கோபுரத்தின் முன்பு; உள் - கோயிலினுள்.
பன்னு செழுந்தமிழ்மாலை பாடினார் - பன்னுதல் - பலவாறும் எடுத்துச் சொல்லுதல்; தமிழ்மாலை - திருப்பதிகம்; பாடினார் - பாடினாராகி; பாடி; முற்றெச்சம். வினைமுற்றாகக் கொண்டு பரவினார் என்பதற்குப் பதிகத்தாலன்றி வேறு பலவாற்றாலும் துதித்தனர் என்றுரைத்தலுமாம்.
தமிழ்மாலை - நம்பிகள் இறைவரது திருமுன்பு பாடிய இத்திருப்பதிகம் கிடைத்திலது!