உலக முய்யநஞ் சுண்டவர் தொண்டினி லுறுதிமெய் யுணர்வெய்தி அலகி றொண்டருக் கறிவளித் தவர்திற மவனியின் மிசையாக்கும் மலர்பெ ரும்புகழ்ப் புகலியில் வருங்கண நாதனார் கழல்வாழ்த்திக் குலவு நீற்றுவன் கூற்றுவனார்திறங் கொள்கையின்மொழிகின்றாம். | 7 | (இ-ள்) உலகமுய்ய....எய்தி - உலகுயிர்களுய்யும் பொருட்டு விடத்தினை உண்ட சிவபெருமானது திருத்தொண்டின் உண்மைத் திறத்தில் உறுதியாகிய மெய்யுணர்ச்சி பொருந்தப்பெற்று; அலகில்....வாழ்த்தி - அளவில்லாத தொண்டர்களுக்கு அவ்வவர் தொண்டில் அறிவு அளித்து அவர்களது திறங்களை உலகிலே ஆக்கும் விரிந்த பெரும் புகழினையுடைய சீகாழியில் அவதரித்த கணநாதனாருடைய திருவடிகளைத் துதித்து; குலவு...மொழிகின்றாம் - விளங்கும் திருநீற்றுச் சார்பு பூண்ட வண்மையுடைய கூற்றுவநாயனாரது திறத்தினைக் கொள்கையின்படி மேற்சொல்லப் புகுகின்றோம். (வி-ரை) இது கவிக்கூற்று. ஆசிரியர் தமது மரபுப்படி இதுவரை கூறிவந்த சரிதத்தினை வடித்தெடுத்து முடித்துக்காட்டி, இனி, மேற்கூறப்புகும் சரிதத்துக்குத் தோற்றுவாய் செய்கின்றார். உலகமுய்ய நஞ்சுண்டவர் - தேவர்களுய்ய நஞ்சு உண்டதனை உலகம் உய்ய என்றார்; தேவர்களுய்தி பெற்று அவ்வவர்க்குப் பணித்த உலககாவலைச் செய்ய நின்றாராதலின்; அன்றியும் தேவருய்ய உண்டருளிய கருணையை உலகம் திருநீல கண்டத்தினால் விளங்க வறிந்துய்யும்படி என்ற கருத்துமாம். தொண்டினில்....எய்தி - உறுதியாவது எஞ்ஞான்றும் பிறழ்வுறாமை; மெய்யுணர்வு - துணிந்த முடிந்த உண்மை நினைவு; திருத்தொண்டே வீடுபேற்றுக்கு வழியாவது என்ற உறைப்பு. அலகில்....ஆக்கும் - “தொண்டரை ஆக்கிÓ என்ற வழிநூற் பகுதிக்குப் பொருள் விரிக்குமாற்றால் சரிதவரலாற்றை வடித்து முடித்துக் காட்டியபடி. அறிவளித்தல் - அவ்வத்தொண்டின் தொழில் அறிவும், அதுஞானநெறிக்கு வழியாகும் திறத்தைஅறியும் அறிவும் தருதல்; திறம் ஆக்கும் திறத்தினை விளங்கி ஓங்கச்செய்யும். குலவும் - விளக்கஞ் செய்கின்ற; விளங்குகின்ற; நீற்று வண்மை - நீற்றிநெறியின் உறைப்பு. |
|
|