அருளின் வலியா லரசொதுங்க வவனி யெல்லா மடிப்படுப்பார் பொருளின் முடிவுங் காண்பரிய வகையாற் பொலிவித் திகல்சிறக்க மருளுங் களிறு பாய்புரவி மணித்தேர் படைஞர் முதன்மாற்றார் வெருளுங் கருவி நான்குநிறை வீரச் செருக்கின் மேலானார். | 2 | (இ-ள்) அருளின் வலியால் - சிவன் றிருவருட்டுணையின் வல்லமையாலே; அரசு....அடிப்படுப்பார் - அரசர்களும் அஞ்சி ஒதுங்கிக் கீழ்ப்படும்படி நிலமுழுதும் தம் ஆட்சியின் கீழே வரும்படி செய்வாராகி; பொருளின்...பொலிவித்து - பொருள்களின் எல்லையும் காணமுடியாத வகையினாலே விளங்கச் சேர்த்து; இகல்....முதல் - போரில் வென்றி பெறும்படியாக மருட்சி செய்யும் யானைகள், பாய்ந்து செல்லும் குதிரைகள், அழகிய தேர்கள், படைவீரர் என்றிவை முதலாகிய,மாற்றார்....மேலானார் - பகையரசர்கள் அஞ்சி ஒதுங்கத்தக்க நால்வகைப் படைக் கருவிகளும் நிறைந்த வீரமுடைய செருக்கினால் மேம்பட்டார். (வி-ரை) அருளின் வலியால் - சிவன் றிருவருள் துணை செய்தமையால் அதன் வலிமையாலே; “அது கைகொடுப்பÓ என்பது வகைநூல்; “மதியணிந்தார் திருத்தொண்டு வாய்த்த வலி யுடைமையினால், எதிரிவருக் கிவ்வுலகி லில்லைÓ (3666) என்ற கருத்து. அரசு ஒதுங்க - அரசு - வலிய முடியரசர்களும் என்ற உயர்வு சிறப்பும்மை தொக்கது; அரசரல்லாத இவரது வலிமையினைக் கண்டு முடியரசர்களும் அஞ்சியும் தோல்வியுற்றும் ஒதுங்க என்பதாம். மேல் “வேந்தர் முனைகள் பலமுருக்கிÓ என்பது காண்க. அவனி எல்லாம் அடிப்படுப்பார் - பூமி முழுதும் தமது ஆணையின்கீழ் நிற்கச் செய்வாராகிய கூற்றுவநாயனார். வினையாலணையும் பெயர்; அடிப்படுப்பார் - மேலானார் - என்று முடிக்க. பொருளின்....பொலிவித்து - பொருள் - நால்வகைச் சேனைகளை வைத்துக் காப்பாற்றவும், உலக ஆணை யரசின் பிற அங்கங்கள் செலுத்தவும் ஆதரவாயுள்ள பொன், விளைபொருள் முதலாயினவற்றின் ஈட்டம். அளவும் காண்பரிய - எல்லை கூட அறிய இயலாத அளவில்; பொலிவித்து - சிறக்க ஈட்டி. முடிவு - எல்லை; அளவு. பொலிவித்து - விருத்தி செய்து; இகல் சிறக்க - போரில் வெற்றிகொண்டு விளங்கும்படி உதவுதற்கு; சிறக்க (உதவும்) கருவி - என்க. உதவும் என்பது இசையெச்சம். மருளும் - மருட்சியை விளக்கும்; கண்டோர் மருளுதற்குக் காரணமான. களிறு....நான்கு - நால்வகைச் சேனை; உயிருள்ளனவற்றையும் கருவி என்றார், தம் வயத்தானன்றிச் செலுத்துவோர் வயத்தாற் கருவிபோலச் செலுத்தப்படும் தன்மை பற்றி. கருவி - சேனை. மாற்றார் வெருளும் - பகைவர் இச்சேனைகளின் பெருக்கினைக்கண்ட மாத்திரையே அஞ்சத்தக்க; “தானை யானை குதிரை யென்ற, நோனா ருட்கு மூவகை நிலையும்Ó (தொல். பொரு - புற - 17). வீரச் செருக்கு - வீரத்தினால் உண்டாகிய இறுமாப்பு; பெருமிதம்; இது தள்ளத்தக்க குற்றங்களுள் ஒன்றாகிய குணமன்று என்பார் வீரம் என்ற அடைமொழி புணர்த்தி ஓதியதன்றி, மேலானார் என்றும் கூறினார். மேலாதல் - மிகுந்தநிலையன்றி மேம்படுதல் - மேன்மையடைதல் என்ற குறிப்புமுடையது. |
|
|