பாடல் எண் :3945

பார்நனைய மதம்பொழிந்து பனிவிசும்பு கொளமுழங்கும்
போர்முகவெங் கறையடியும், புடையினமென் றடையவரும்
சோர்மழையின் விடுமதத்துச் சுடருநெடு மின்னோடைக்
கார்முகிலும் பலதெரியா களிற்றினிரைக் களமெல்லாம்.
4
(இ-ள்) பார்நனைய.....கறையடியும் - நிலம் நனையும்படி மதநீரைப் பொழிந்து குளிர்ந்த ஆகாயம் இடங் கொள்ளும்படி முழங்குகின்ற போர்த்தொழில் வாய்ந்த வெவ்விய யானைகளும்; புடை இனமென்று அடைகின்ற - அவை தம்பக்கத்தில் உள்ள இனமென்று வந்து கூடுகின்ற; சோர் ....கார்முகிலும் - பொழிகின்ற மழையாகிய விடும் மதத்தினையும் மின்னலாகிய பட்டத்தினையும் உடைய கரியமேகங்களும்; களிற்றின் நிரைக்களமெல்லாம் - யானைகள் வரிசைபெறக் கட்டும் யானைக் கூடங்களில் எங்கும்; பல தெரியா - பலவாக வேறு பிரித்தறியப்படாது விளங்கின.
(வி-ரை) இச்செய்யுள் மயக்கவணி; மழையை மதமாகவும், மின்னலை நெற்றிப் பட்டமாகவும், கரியநிறத்தைக் காரின் நிறமாகவும் உருவகித்தார். மேகங்கள் இவ்வாற்றாலும் பருத்த உருவுடன் மோதுபவை போலச் சேர்தலாலும், யானைகளை வினை, மெய், உரு என்ற மூன்றானும் ஒத்திருந்தன. இவை உயர்ந்த யானைக் கொட்டாரங்களிற் படிந்தன; இவற்றை இத்தன்மைகளால் தம்மின மென்று மயங்கி யானைகள் அங்கு வந்து கூடின; இக்கூட்டத்தினுள் இவை மேகமோ களிறோ என்று வேறு பிரித்துணரப்படாத நிலையில் விளங்கின என்பதாம். அரசரது யானைப்படையின் சிறப்புக் கூறியவாறு. மேல்வரும் பாட்டில் குதிரைப் படையின் சிறப்பும், அதன் மேற்பாட்டில் யானை குதிரையிரண்டன் சேர்க்கையின் சிறப்பும் கூறுவார்; இந்நாயனாரது சரிதத்தின் முற்பகுதியின் விளைவு அவரது பட்டத்து யானைபற்றி நேர்ந்தமையும், அப்போது அரசர் குதிரைமேலேறிச் சென்றபின், வெட்டப்பட்டு உயிர்பெற்ற அவ்வியானையின் மீதே மீண்டமையும் ஆகிய சிறப்புக்களும், இங்குக் குறிப்பா லுணர்த்தப்பட்டன; “யானைமேற் கொண்டு சென்றா ரிவுளிமேல் கொண்டு வந்தார்Ó (602); இக்குறிப்புப்படவே முன்னரும் இந்நாயனாரது வரலாறு பற்றிய கருவூரைப் பற்றிக் “கடகரி துறையி லாடும்Ó (554) என்றமை காண்க.
புடையினம் என்று அடையவரும் - வரும் என்பதற்கு அவை - அவ்வியானைகள் என்ற எழுவாய் வருவிக்க. இவ்வாறன்றி அடைய வரும் செயலை மேகங்களின் மேல் ஏற்றியுரைப்பாருமுண்டு. மேகங்கள் சூழும்படி மதில்கள் உயர்ந்திருத்தலை முன்னரும் இவ்வரலாறு பற்றிய கருவூரினை “மாமதில் மஞ்சு சூழும் " (553) என்று கூறினார். அதனையே தொடர்ந்து இங்குக் கூறியவாறு.
பார்நனைய மதம் பொழிந்து - மதநீரின் மிகுதி குறித்தது; இதனை பார்நனையச் சோர் மழை என்று உவமேயத்துடனும் கூட்டுக. மழைக்கு அதுவே பயனும் குறியுமாம்.
பனிவிசும்பு கொளமுழங்கும் - பனி - குளிர்ந்த; பனித்தல் - அதிர்தல் - நடுங்குதல் என்று கொண்டு யானைச் சத்தத்தின் எதிரொலியால் அதிரும் - நடுங்கும் - என்றுரைத்தலுமாம். விசும்புகொள முழங்குதலாவது - சத்தம் என்னும் தன்மாத்திரை ஆகாயத்தை யிடமாகக் கொண்டு விளங்கும் நிலையினையும் குறித்து நின்றது. விசும்பு பனிகொள என்று மாற்றிக்கூட்டி மேகங்களும் நடுக்கமடைய என்றுரைப்பாருமுண்டு. “மேகமும் களிறு மெங்கும்Ó (81) என முன்னருங் கூறினார்.
போர்முக வெங்கறையடி - போர்முகம் - போர்த்தொழில் பற்றி நிற்கும்; இதற்குப் போர்த் தொழில்வல்ல கொம்பினையுடைய என்றுரைத்து , முகம் என்பது அதில் உள்ள கொம்பினை உணர்த்தியது ஆகுபெயர் என்பாருமுண்டு. கறையடி - யானை; உரல்போலும் அடியினையுடைமையால் வந்த காரணப்பெயர்; கறை - உரல்; “கறையடியானைÓ (பெரும்பாண் - 351).
விசும்பு கொளமுழங்கும் - மின்ஓடை - மின்னலும் அதனால்வரும் இடிமுழக்கும் ஓரிடத்தொரு காலத்தில் மேகங்கள் கூடிய போது எழுவன. அவற்றுள் முழக்கத்தைப் பொருளிலும், ஒளியினை உவமையிலும் வைத்தார் சொற்சுருக்கமும் தொடர்புண்மை அறிவிக்கும் நிலையும் பற்றி.
சோர்மழை - சோர்தல் - வீழ்தல்; நீராவியாயிருந்த நிலை நீங்கிப் குளிர்ந்தபோது நீர்த்துளிகளாக மாறுதலாற் கனத்துத் தாமாக வீழ்தல் குறித்தது. மழையின் விடும் மதம் - மழையாகிய மதம்; விடுதல் - விடப்பட்டு விழுதல்; இன் - தவிர் வழிவந்த சாரியை என்பர்; மின்ஓடை - மின்னலாகிய ஓடை. ஓடை - யானையின் நெற்றிப்பட்டம். கார்முகில் - கரியமேகம்; கார் - என்ற அடையினைப் பொருளிலும் சேர்க்க; கார்காலத்து மேகம் என்றலுமாம்.
பல தெரியா - பலவாகப் பிரித்து அறியப்படா - தெரியப்படா என்ற செயப்பாட்டு வினை தெரியா - எனச் செய்வினையாய் வந்தது.
களிற்றினிரைக்களம் - யானைகள் கட்டும் கூடம். யானைக் கொட்டாரம்.
கனமெல்லாம் - என்பதும் பாடம்.