வந்துமணி மதிற்கருவூர் மருங்கணைவார் வானவர்சூழ் இந்திரன்வந் தமரர்புரி யெய்துவா னெனவெய்திச் சிந்தைகளி கூர்ந்தரனார் மகிழ்திருவா னிலைக்கோயில முந்துறவந் தணைந்திறைஞ்சி மொய்யொளிமா ளிகைபுகுந்தார். | 12 | (இ-ள்) வந்து....அணைவார் - வந்து அழகிய மதிலையுடைய கருவூரின் பக்கத்தில் அணைவாராகிய புகழ்ச் சோழர்; வானவர் சூழ்......எய்தி - தேவர்கள் சூழ இந்திரன் வந்து அமராபதியினைச் சேர்வான் போலச் சேர்ந்து; சிந்தை....இறைஞ்சி - மனமிகக் களித்து அரனார் மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கும் திருவானிலைத் திருக்கோயிலினை முன்னாக வந்து சார்ந்து வணங்கி; மொய்....புகுந்தார் - மொய்த்து விளங்கும் ஒளியினையுடைய தமது திருமாளிகையின்கட் புகுந்தருளினர். (வி-ரை) வானவர் சூழ்.....என எய்தி - தமது மந்திரிகள் முதலாயின அரசச் சுற்றம் சூழ மன்னர் வந்தது தேவர்கள் சூழ இந்திரன் வந்தமை போன்றது என்றபடியாம். அரசர் திருவுக்கும் சுற்றம் சூழ்தலுக்கும் அரச மாபுரி அணைதற்கும் வினையும் மெய்யும் பற்றி ஒருபுடை ஒப்புமை உலகியல் நிலையின் மேம்பட்ட தெய்வத் திருவின் விளக்கம் என்ற அளவே ஈண்டுக் கொள்ளத்தக்கது; இவ்வளவன்றி இந்திரன் எந்தம் பெருமக்களுக்கு எவ்வாற்றாலேனும் ஒப்பாவன் என்பது கருத்தன்று; “பூவார் திசைமுக னிந்திரன் பூமிசை - மாவா ழகலத்து மான் முதல் வானவர்-ஓவா தெவரு நிறைந்துறைந் துள்ளதுÓ (136) என்றபடி அடியார்களது அருள் பெறுதற்குத் தவங்கிடந்து அவர்கள் வீற்றிருக்கும் தேவாசிரிய மண்டப வாய்தலிற் காத்திருக்கும் தேவர்களுள் ஒருவன் இந்திரனாகும்; “இந்திரச் செல்வமு மெட்டுச் சித்தியும், வந்துழி வந்துழி மறுத்தன ரொதுங்கிச்Ó (11 - திருமுறை - பட்டின - இடை - மும் - கோ - 7); சிவானந்த வாழ்வில் தினைப்பவர் எந்தம் பெருமக்களாகிய அடியவர்கள். அமரர் பதி - முன்னர் “உம்பரூர்Ó (3947) என்ற கருத்தினைத் தொடர்ந்து கூறியது. அணைவார் - வினையாலணையும் பெயர்; மகிழ் - மொய் - வினைத்தொகைகள்; மாளிகை புகுந்தார் - 7ம் வேற்றுமைத்தொகை. சிந்தை....கோயில் முந்துற வந்தணைந் திறைஞ்சி - நகரத்தில் அணைந்தவுடன் திருக்கோயிலினை முன்னர்ச் சார்ந்து வணங்கிப், பின்னரே, தமது திருமாளிகையினுட் புகுந்தனர் என்ற திருத்தொண்டி னெறிமரபு குறிக்கப்பட்டது; முன்னர் வருவது திருத்தொண்டு; அதன்பின்னரே வருவது அரசாட்சி என்ற நிலைக்குறிப்பு. ஆனிலை - இத்திருக்கோயிலின் பெயர், மொய் ஒளி - ஒளி மொய்த்தலாவது பல ஒளிகளும் கூடுதல்; ஒளி மிகுதலுமாம். |
|
|