பாடல் எண் :3963

சூறை மாருத மொத்தெதிர், ஏறு பாய்பரி வித்தகர்,
வேறு வேறு தலைப்பெய்து, சீறி யாவி செகுத்தனர்.
22
(இ-ள்) சூறை மாருதம் ஒத்து - சூறாவளியைப் போன்று; எதிர்....வித்தகர் - எதிரெதிராக ஏறுதலைக்கொண்டு பாய்கின்ற குதிரை வீரர்கள்; வேறு....செகுத்தனர் - வெவ்வேறாக எதிர்த்துச் சினந்து ஒருவரை யொருவர் கொன்றனர்.
(வி-ரை) சூறை மாருதம் - சூறாவளி; மிக்கவேகமாய் எறியும் சண்டமாருதம்; வாயுவேகம் என உவமிக்கும் மரபுபற்றிக் கூறினார்.
எதிர் ஏறுபாய் - எதிர்த்துச் செல்லும் ஏற்றத்தினை மேற்கொண்டு பாயும்; ஏறு - ஏறுதல்; முதனிலைத் தொழிற்பெயர்; ஏறு - பரி என்று வினைத்தொகையாகக் கொள்ளினும் அமையும்.
பரிவித்தகர் - குதிரை வீரர். பரி - குதிரையினைச் செலுத்தும் வித்தை; வித்தகம் - அறிவு. வித்தகர் - சதுரப்பா டுடையவர். “வித்தகர்க் கல்லா லரிதுÓ (குறள்).
தலைப்பெய்தல் - ஒரு சொல். கூடுதல் - முட்டுதல். பரிகளை ஆவி செகுத்தனர் என்றலுமாம்.
இப்பாட்டால் குதிரைப்போர் மூண்டநிலை கூறப்பட்டது.