அரண்முற் றியெழுந் தவமைச் சர்கடாம் இரணத் தொழில்விட் டெயில்சூழ் கருவூர் முரணுற் றசிறப் பொடுமுன் னினர்நீள் தரணித் தலைவன் கழல்சார் வுறவே. | 31 | (இ-ள்) அரண்....அமைச்சர்கள்தாம் - அரணத்தினை முற்றுகையிட்டு அழித்த அமைச்சர்கள்; இரணத்தொழில் விட்டு - அப்போர்த்தொழில்களை விட்டு நீங்கி; நீள்....சார்வுறவே - பூமியின் நீள் தலைவராகிய புகழ்ச் சோழரது கழலினைச் சென்று சாரும் பொருட்டு; முரணுற்ற சிறப்பொடு எயில்சூழ் கருவூர் முன்னினர் - முரண்வென்றுகொண்ட சிறப்புடனே மதில்சூழ்ந்த கருவூர்ப்பதியினைச் சேர்ந்தனர். (வி-ரை) அரண்முற்றி எறிந்த - அரண் - பகைவனுடைய அரணம்; கோட்டை; முற்றி - முற்றுகையிட்டு. முற்றுதல் - உழிஞைத்திணை ஒழுக்கம்; எறிதல் அழித்தல் இரணம் - போர். முரண்உற்ற சிறப்பு - முரண் - பகை; முரணினரை வென்று பொருந்திய புகழ்; மேன்மை; முரண் வென்று உற்ற என்க. முரண் - வலிமை என்றலுமாம். தரணி நீள் தலைவன் - என்க; புகழ்ச்சோழர்; தரணி - தரிப்பது; தாங்குவது; நீள்தரணி என்றவாறே கொண்டு அழியும் இத்தரணியேயன்றி அழியாத சிவலோகத்தும் மேம்பாடு பெறும் தலைவர் என்ற குறிப்புப்பட வைத்தார் என்றலுமாம். சார்தல் - சென்று சேர்தல். முன்னினர் - முன் சேர்ந்தனர்; வெற்றியிற்கொண்ட பகைவரது சின்னங்கள் முதலியவற்றைப் பின்னர்ச் சேனைவீரர்கள் கொணர அமைச்சர் அரசர்பால் முன்சென்று சேர்ந்தனர். மேற்பாட்டுப் பார்க்க. எதிர்ந்த - என்பதும் பாடம். |
|
|