பாடல் எண் :3980

கண்டசடைச் சிரத்தினையோர் கனகமணிக் கலனேந்திக்
கொண்டுதிரு முடித்தாங்கிக் குலவுமெரி வலங்கொள்வார்
அண்டர்பிரான் றிருநாம மஞ்செழுத்து மெடுத்தோதி
மண்டுதழற் பிழம்பினிடை மகிழ்ந்தருளி யுட்புக்கார்.
39
(இ-ள்) கண்ட...ஏந்திக்கொண்டு - கண்ட அந்தச் சடைத்தலையினை மணிகள் அழுத்தியதோர் பொற்கலத்தில் ஏந்திக்கொண்டு; திருமுடித்தாங்கி...வலங்கொள்வார் - திருமுடியிலே தாங்கி, விளங்கும் தீயினைச்சுற்றி வலம் வருவாராகி; அண்டர்பிரான்....ஏந்தி - தேவர்கள் பெருமானாம் சிவபிரானது திருநாமமாகிய திருவைந்தெழுத்தினையும் எடுத்து ஓதிக்கொண்டு; மண்டு...உட்புக்கார் - செறிந்து எழுகின்ற தீப்பிழம்பினுள்ளே மகிழ்ச்சி கொண்டருளி உள்ளே புகுந்தருளினர்.
(வி-ரை) கண்ட - தலையிற் சடை தெரியக்கண்ட; இவர் சிவ நெறியுடையார் எனக்கண்ட; அதனாற், பழியினைக்கண்ட; அதனாற் றீர்வு சிவநாம மோதித் தீப்புகுதலே என்று கண்ட என்றிவ்வாறு பலவும் கொள்க. இத்துணையும் சடையினால் விளைவன என்பார் கண்ட சடை என்றார்.
கனகமணி....முடித்தாங்கி - பொற்கலத்தேந்தி முடியிற்றாங்குதல் சிவநெறி அடையாளமாகிய சடையின் சிறப்புக்கருதியும், தீர்வு பெறும் வழிபாடு கருதியுமாம். முடி - முடியின்கண் - ஏழாம் வேற்றுமைத் தொகை.
குலவும் எரி - விளங்கும் செந்தீ; சிவாகாரமாக விளங்கிப் பழிபோக்கிச் சிவனை அடைவிக்கும் தன்மையுடைய தீ; செந் தீ (3979).
வலங்கொள்வார் - ஓதி - என்று கூட்டுக. வலங்கொள்வார் - முற்றெச்சம்.
திருநாமம் அஞ்செழுத்தும் எடுத்து ஓதி - பெருங்காரியத்தினிற் புகும்போது சிவநாம மஞ்செழுத்தோதிப் புகுதல் மரபு. “தழைத்த வஞ்செழுத் தோதினார்Ó (544) என்பது முதலிய இடங்கள் பார்க்க. அஞ்செழுத்தே திருநாமமாவது என்க. “ஆலைப் படுகரும்பின் சாறு போல வண்ணிக்கு மஞ்செழுத்தி னாமத் தான்காண்Ó, “திருநாம மஞ்செழுத்துஞ் செப்பாராகில்Ó (தேவா); எடுத்து - வாய்விட்டு உரக்கச் சொல்லி.
மகிழ்ந்தருளி - மகிழ்ச்சியாவது சிவாபராதமாகிய பழியினீங்கித் தூய்மை பெறுதலாலாவது.
திருநாமத் தஞ்செழுத்து - என்பதும் பாடம்.