முரசங்கொள் கடற்றானை மூவேந்தர் தங்களின்முன் பிரசங்கொ ணறுந்தொடையற் புகழ்ச்சோழர் பெருமையினைப் பரசுங்குற் றேவலினா லவர்பாதம் பணிந்தேத்தி நரசிங்க முனையர்திற நாமறிந்த படியுரைப்பாம். | 41 | (இ-ள்) முரசங்கொள்...முன் - வெற்றி முரசுகள் ஒலிக்கின்ற கடல்போன்ற சேனைகளையுடைய முடி மன்னர்கள் மூவருள்ளும் முதன்மையாகிய; பிரசங்கொள்....குற்றேவலினால் - தேன் பொருந்திய மணமுடைய மாலையணிந்த புகழ்ச் சோழரது பெருமையினைப் போற்றும் குற்றேவலாகிய தொண்டு செய்யும் வகையினாலே; அவர்....ஏத்தி - அவரது திருவடிகளை வணங்கித் துதித்து அத்துணை வலிமையால்; நரசிங்க முனையர்....உரைப்பாம் - நரசிங்க முனையரைய நாயனாரது அடிமைத் திறத்தினை நாம் அறிந்த வகையினாலே இனிச் சொல்வோம். (வி-ரை) இதுவரை கூறிவந்த புராணத்தை முடித்துக் காட்டி, ஆசிரியர், தமது மரபுப்படி, இனிச் சொல்லப்புகும் சரிதத்துக்குத் தோற்றுவாய் செய்கின்றார். இது கவிக்கூற்று.கடல்தாளை - பரப்பு, முழக்கு முதலிய பலவாற்றானும் கடல்போன்ற சேனை. மூவேந்தர் - சேர சோழ பாண்டியர் என்னும் முடி மன்னர்களாகிய தமிழ்ப் பெரு மன்னர்கள்; முன் - முதன்மை பெற்ற; பிரசம் - தேன். முரசம் - வெற்றி முரசு; அம் - சாரியை. பெருமையினைப் பரசும் குற்றேவலினால் - துதிக்கும் சிறுதொண்டு செய்யும் வகையால்; இதுவரை கூறியது அவரது பெருமைக்குப் போதாது; அஃது அதனைப் போற்றிய அளவில் அமையும் சிறு தொண்டேயாகும் என்பது; குற்றேவல் - சிறு தொண்டு. ஏவலினால் - தொண்டு செய்ததன் மூலம். ஏவலினால் - ஏத்தி என்க. தொடை - ஆத்திமாலை. ஏத்தி - உரைப்பாம் - என்க; ஏத்தி அத்துணை கொண்டு என்பதாம். திறம் - அடிமைத்திறம். |
|
|