பாடல் எண் :3984

இம்முனையர் பெருந்தகையா ரிருந்தரசு புரந்துபோய்த்
தெம்முனைகள் பலகடந்து தீங்குநெறிப் பாங்ககல
மும்முனைநீ ளிலைச்சூல முதற்படையார் தொண்டுபுரி
அம்முனைவ ரடியடைவே யரும்பெரும்பே றெனவடைவார்,
2
(இ-ள்) இம்முனையர் பெருந்தகையார்...அகல - இந்த முனையர் மரபின் பெருந்தகையாராகிய அரசர் தமது நகரிலிருந்து அரசளித்துப், பகைவர்களின் போர்கள் பலவற்றையும் வென்று, தீமையாகிய நெறிகளின் செயல்கள் எல்லாம் நீங்க; மும்முனை நீள்.....அடைவார் - மூன்று முனைகளையுடைய நீண்ட இலைவடிவினைதாகிய சூலமாகிய முதன்மை பெற்ற படையினை ஏந்திய இறைவரது திருத்தொண்டு புரிகின்ற அந்த முதல்வர்களாகும் அடியவர்களின் திருவடிகளை அடைவதுவே அரிய பெரிய பேறு என்று அடைவாராய்,
(வி-ரை) முனையர் - முனையதரையர் என்னும் குறுநில மன்னர் மரபு.
தென்முனைகள் - பகைவர்களது போர். “தெவ்வுப் பன்மைÓ
அகல - அகலச்செய்து; அகற்றி; அகல - அடைவார் என்று கூட்டுக.
தொண்டுபுரி அம் முனைவர் - தொண்டர்கள்; அகரம் பண்டறிசுட்டு; முனைவர் - முதல்வர்கள்; அவர்களே தலைவராதற்குரியவர் என்ற கருத்து. “அகில காரணர் தாள்பணி வார்கடாம், அகில லோகமு மாடற் குரியர்Ó (139) என்றது காண்க. தலைமைபற்றிச் சூலமுதற் படையென்றார்.
அடியடைவே பேறு - அடைதலே பெரும் பேறாகும். இப்பாட்டுத் திரிபு என்ற சொல்லணி கொண்டது. அடைவு - தொழிற்பெயர்.