பீடுகெழும் பெருந்தெருவும் புத்தருடன் பீலியமண் வேடமுடை யவர்பொருள்போல லாகாச வெளிமறைக்கும் ஆடுகொடி மணிநெடுமா ளிகைநிரைக ளலைகமுகின் காடனைய கடல்படப்பை யெனவிளங்குங் கவின்காட்டும். | 2 | (இ-ள்) பீடு....தெருவும் - இந்நகரத்தின் பெருமை நிறைந்த பெருவீதிகளும்; புத்தருடன்...மறைக்கும் - பௌத்தர்களுடனே, மயிற்பீலியை ஏந்தும் சமண வேடத்தவர்களும் கூறும் பொருள்போல ஆகாய (வெளியினை)த்தை இல்லையென்று சொல்லும்படி மறைக்கும்; ஆடு...நிரைகள் - ஆடுகின்ற கொடிகளையுடைய அழகிய நீண்ட மாடங்களின் வரிகைள் அசைவுள்ள கமுகஞ் சோலையினை ஒத்தன; கடல் - நகரத்தை அடுத்த கடலானது; படப்பை...காட்டும் - பயிர்களையுடைய தோட்டம் போலும் விளங்கும் அழகினைக் காட்டும். (வி-ரை) இப்பாட்டுப் பல பிரதிகளில் இல்லை. இது வெள்ளிபாடல் என்னும் ஐயப்பாடுள்ளது. எனது சேக்கிழார் பக்கம் 213 பார்க்க. புத்தர் - அமண் பொருள் போல் - புத்த சமணர்கள் ஐம்பூதங்களுள் ஆகாயத்தை ஒப்பாமல் நான்கு பூதங்களே கொள்வர். பொருள் - கூறும் பொருணிச்சயம் - கொள்கை. மறைத்தல் - (சிலேடையால்) மறுத்தல் என்பதாம். அவர் பொருள் போல் தெருவும் ஆகாச வெளிமறைக்கும் என்றது தெருக்களிலும் மேலே பந்தர் -நடைக் காவணம் - தோரணம் - மேற்கட்டி முதலியவற்றாலும், கீழே சன நெருக்கம் பொருட் பெருக்க முதலியவற்றாலும் இடை வெளி தோன்றப்படாதாயிற்று என்பதாம். வினைபற்றி வந்த சிலேடை யுவமம்; கொடி - கமுகின் காடு அனைய - நிரையாகத் தூக்கிக்கட்டிய கொடிகள் அசைதல் கமுகு வரிசைகள் சோலைகளில் அசைவது போலும்; மெய்யும் வினையும்பற்றி எழுந்த உவமம்; காடு - செறிவு குறித்தது. கடல் - நகர் கடற்கரையில் உள்ளது; அடுத்துள்ள கடல் படப்பை - சிறு பயிர் நிறைந்த செழிப்புடைய நிலம். நிறம் - அலைகளை யுடைமை - பரப்பு முதலியன உவமை; பண்புபற்றி வந்த உவமம். |
|
|